Tuesday 24 September 2013

தலைமலை பயண அனுபவம்: 2

சூதாட்டம்: பெரியம்மா பொங்கல் வைத்து கொண்டிருந்தார், மாமாவும் அத்தையும் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்றிருந்தார்கள். பெரியப்பாவும், அண்டைவீட்டுகாரரும் கடைக்கு போயிருந்தனர். ஓரிடத்தில் சற்று கூட்டமாக இருந்தது அது என்ன என்று பார்க்க சென்றேன். அது வேறொன்றுமில்லை சூதாட்டம் தான். சூதாட்ட முறைகள்: ஒருவர் மூன்று ரொட்டிகளை (Biscuit ) வைத்திருப்பார் அதில் ஒரு ரொட்டியின் ஒரு பக்கத்தில் பறவை படம் ஒட்டியிருக்கும். மூன்று ரொட்டிகளையும் மாற்றி மாற்றி போடுவார். படம் ஒட்டிய பகுதியை  நமக்கு தெரியாது. நாம் பார்க்கும் போது மூன்று ரொட்டியிலும் படம் ஒட்டாத பகுதிதான் நமக்கு தெரியும். இப்போது படம் ஒட்டியிருக்கும் ரொட்டியின் மேல் நாம் பணம் கட்ட வேண்டும். அதனால் பணம் கட்டுவது என்பது ஒரு நம்பிக்கை தான். அப்படி நாம் சரியான படம் ஒட்டிய ரொட்டியை காண்பித்தால் நமக்கு நாம் கட்டியதை போல இரண்டு மடங்கு பணம் கிடைக்கும். இல்லையென்றால் நாம் கட்டிய பணம் போய்விடும். சரி நடப்பது என்ன என்று தெரிந்தாகி விட்டது, மீண்டும் பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்தேன். மாமாவும் அத்தையும் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வந்துவிட்டார்கள். பொருட்களை வைத்திருந்த இடத்தில் அவர்களை அமர்த்திவிட்டு, நானும் மற்ற நால்வரும் பூஜை பொருட்கள், சமைத்த பொங்கல் ஆகியவற்றை எடுத்து கொண்டு  ஸ்வாமி தரிசனத்திற்காக கிளம்பினோம்.

Way from pond to temple
(http://www.routard.com/photos/inde/104822-trekking_sur_thalaimalai.htm)
ஸ்வாமி தரிசனம்: அந்த மலைக்கே கோவில் அமைந்துள்ள பகுதி தலை போல கட்சி அளிக்கும் அதனால்தான் தலைமலை என்று பெயர் வந்ததோ என்னவோ. ஏறக்குறைய 150 மீட்டர் உயரமுள்ள பாறையின் மேல் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணியிலிருந்தே மலையேற ஆரம்பித்து விடுவார்கள். வெளிச்சத்திற்காக டயர் மற்றும் மட்டைகளை கொளுத்திகொண்டு செல்வார்கள். காலை 6 மணியிலிருந்து 11 மணி வரை மிகுந்த கூட்டம் இருக்கும். நாங்கள் 11.30 மணிக்கு சென்றதால் கோவிலில் மக்களின் எண்ணிக்கை குறைவுதான். பெரியம்மா குடும்பத்தினர் முதலில் தரிசனத்திற்காக செல்ல, நானும் மற்றொருவரும் பிரஹாரத்தில் கொண்டு சென்ற பொருட்களை பார்த்துகொண்டு நின்றிருந்தோம். பெரியம்மா வெளியில் வந்ததும், நாங்கள் தரிசனத்திற்காக உள்ளே சென்றோம். 20 நிமிடம் ஆயிற்று தரிசனம் முடிய. மீண்டும் குளக்கரைக்கு 12:30க்கு வந்துசேர்ந்தோம்.

                                                      (source: http://www.thalaimalai.com/)

கோவிலை சுற்றுதல்: த்ரில் என்று சொல்வார்களே, அந்த மாதிரி ஒரு நிகழ்வு என்னவெனில் கோவிலை சுற்றி வருவது. வேண்டிகொண்டவர்களும்,  இளைஞர்களும் மட்டுமே சுற்றுவார்கள், சுற்றவும் முடியும். மலை உச்சியில் கோவிலை சுற்றி ஒரு பாதியில் பிரஹாரம் இருக்கும் மறு பாதியில் கோவிலின் சுவர்தான், அந்த சுவரில் 8" முதல் 10" வரையிலான சிறிய பட்டை போன்ற அமைப்பு சரியாக 5 அடி இடைவெளியில் கைபிடிக்கவும், கால்வைக்கவும் இருக்கும். அவற்றை பிடித்து  நடந்து  தான் நாம் சுற்ற முடியும். கீழே பெரிய பள்ளம் உள்ளது. (14/10/17 அன்று நடந்த ஒரு எதிர்பாராத உயிரிழப்பால் கோவிலை சுற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் )

குளத்து மீன்கள்: குடிக்க, குளிக்க மற்றும் சமைக்க குளத்து நீரைத்தான் உபயோகித்தோம். குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறது,  சிலர் மீன்களுக்கு உணவிடுகிறேன் என்று சாப்பாடு, பொறி, ரொட்டி துண்டுகளை  எல்லாம் குளத்திற்குள் போட்டுச்செல்கின்றனர். மீன்கள் நீரில் உள்ள அழுக்கு, சிறு உயிரினங்கள் ஆகியவற்றை உண்டு நீரை சுத்தம் செய்ய படைக்கப்பட்டவை, எனவே அவைகளுக்கு நாம் உண்ணும் உணவு கொடுத்து மீனின் இயற்கை தன்மையை மாற்ற கூடாது என்பது என் கருத்து. இப்படிப்பட்ட குளத்திலிருந்து ஒரு குடம் நீர் கொண்டுவந்துதான் சாப்பிட துவங்கினோம். சாப்பிட்டு முடித்த பின் மாமாவும், ஒருமணி நேரத்திற்கு பிறகு (3pm) அத்தை, பெரியம்மா, அண்டைவீட்டு பெரியவர் ஆகியோரும் துறையூருக்கு கிளம்பி சென்றுவிட்டனர்.

பெரியவர்: நான், அண்ணன் மற்றும் பெரியப்பா மூவரும் திருக்கோடி ஏற்றுவதற்காக அங்கு இருந்தோம். நானும் அண்ணனும் குளக்கரையில் அமர்ந்து கல்லூரி, (Vivekanandacollege, Solavandan, Madurai) ஆசிரியர்கள் மற்றும் வேலை பற்றி பேசி பேசி காலத்தை கடந்துகொண்டிருந்தோம். 4 மணிபோல் மீதம் இருந்த உணவை சாப்பிடுவதற்காக, தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்றேன். குள கரையில் 70 வயதுமிக்கவர் சுவாமிக்கு அபிஷேகம் பண்ண தண்ணீர் எடுதுவைதிருந்தார்,  அதை தூக்கி வைத்துவிட்டு எனது குடத்தை கொடுத்தேன் அதற்கும் தண்ணீர் எடுத்து கொடுத்தார். "குளத்தை சுத்தபடுத்துவதாகவும் பெருமாள் அவரை ஆசிர்வதிக்கிறார்" என்றும் "அவர் ஆசிரியராக பணியாற்றியதாகவும்" சிறிது நேரம் பேசிகொண்டிருந்த பொழுது கூறினார். பின் என்னை பற்றியும் என் ஆசையை பற்றியும்  விசாரித்த அவர் "உன் ஆசையை அப்படியே வைத்துகொள் அது நிறைவேறும், பெருமாளுக்கு உண்டியலில் 1 ரூபாயோ அல்லது முடிந்த அளவோ போட்டு விட்டுபோ" என்றார். சரி என்று சொல்லிவிட்டு அவர் குடத்தை கரையில் வைத்துவிட்டு நான் சாப்பிட வந்தேன் தொடர்வோம்......



தலைமலை பயண அனுபவம்: 1
தலைமலை பயண அனுபவம்: 3
தலைமலை பயண அனுபவம்: 4

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...