Friday 26 January 2018

சரும ஆரோக்கியம்..... முழு ஆரோக்கியம்.

அழகுக்கலை நிபுணரும், அரோமாதெரபிஸ்டுமான கீதா அசோக்: 'அழகு என்பது ஆற்றல்; புன்னகை என்பது ஆயுதம்' என்றொரு பழமொழி உண்டு. இன்றைய சூழலில் அழகு என்பது ஆரோக்கியம். சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்த துவங்கினாலே, முழு ஆரோக்கியத்தை நோக்கி நாம் முன்னேறுவோம்.


முகம் பளிச்சிட:
  • வெதுவெதுப்பான பாலில், கசகசா ஒரு டீஸ்பூன், தோல் எடுத்த இரண்டு பாதாம் பருப்பை ஊற வைத்து, விழுதாக அரைத்து, முகத்தில் பூச, நிறம் மிளிரும். 
  • சிலருக்கு சருமம் உலர்ந்து, சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், மிகுந்த எண்ணெய் பசையுள்ள, 10 வால்நட்களை, சூடான பாலில் ஊற வைத்து விழுதாக அரைத்து, அதில், ரோஸ் ஆயில், 50 சொட்டு கலந்து, பிரிஜ்ஜில் சேமிக்கவும். இதை, சிறிது எடுத்து முகத்தில் தினமும், 'ஸ்கிரப்' செய்வது போல் தேய்த்தால், இறந்து உலர்ந்து போன செல்கள் நீங்கி, முகம் பளிச்சிடும்.
  • தலா இரண்டு உருளைக்கிழங்கு, பாகற்காயை துருவி, வெயிலில் சருகாக நன்கு காய்ந்ததும், மிக்சியில் பொடித்து சலிக்க வேண்டும். அதில், பாதி பங்கு அரிசி மாவு கலக்கவும். வாரம் இருமுறை, இந்த பொடியுடன் மோர் கலந்து முகத்தில், 'பேக்' போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமத்தின் கருமை நீங்கும்; சுருக்கங்கள் வராமல், சருமம் இறுகும். 
  • பன்னீர் திராட்சையை, கொட்டையுடன் மிக்சியில் அடித்து, காற்று புகாத டப்பாவில் வைத்து, அவ்வப்போது முகம், கழுத்தில் தேய்த்தால், சருமம் தகதகக்கும். 
  • கனிந்த வாழைப்பழ தோலில், சிறிதளவு சர்க்கரை துாவி முகத்தில் தேய்த்தால், 'பேஷியல்' செய்த மாதிரி சருமம் மின்னும். 
கைகளுக்கு...:
  • இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து, கைகளில் தடவி, 'மசாஜ்' செய்து குளித்து வந்தால், கைகளின் நிறம் மேம்படும். 
குழந்தையின் சருமத்திற்கு:
  • மஞ்சள் பூசணிக்காயின் சதைப்பகுதியுடன், பால் சேர்த்து அரைத்து, அதில், ஆவாரம்பூ பொடியை கலந்து, குழந்தையின் உடலில் பூசி, சிறிது நேரம் கழித்து தேய்த்து குளிப்பாட்டி விட, குழந்தையின் சருமம் பொலிவுறும்.
கண்கள் பளிச்சிட:
  • தாமரை இதழ்களை, விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து, காற்று புகாத டப்பாவில் அடைத்து, பிரிஜ்ஜில் சேமிக்கவும். தினமும், இந்த விழுதை, கண்களை சுற்றித் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், கண்கள் பளிச்சிடும்; கருமை மறையும்.
உதடு கருமைக்கு:
  • பீட்ரூட் சாற்றில் சிறிது கிளிசரின், தேன், எலுமிச்சை எண்ணெய் ஐந்து சொட்டு கலந்து, பஞ்சில் தொட்டு ஒற்றி எடுத்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
--தினமலர் நாளிதழிலிருந்து.

ஏழே நாளில் சருமம் ஜொலிக்கும்!

சருமத்தில் மாற்றத்திற்கு, 'டிப்ஸ்' கூறும், பியூட்டிஷியன், ஷீபா தேவி: அடிப்படையான சரும ஆரோக்கியமே, அழகுக்கு அஸ்திவாரம்.
முதல் நாள் காலை, வெறும் வயிற்றில் தேன் சேர்த்த எலுமிச்சை ஜூஸ், காலை உணவுக்கு பின், ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட் சேர்த்த ஜூஸ், மதிய உணவுடன், ஒரு ஆப்பிள், இரவு உணவுக்குப் பின், சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் சாப்பிடலாம். தலா அரை டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவி துாங்கலாம்.
இரண்டாம் நாள் காலை, தேன் கலந்த கிரீன் டீ, உணவுக்குப் பின், தக்காளி ஜூஸ், மதியம், சோயா பீன்சை சுண்டல் அல்லது பொரியல், இரவு, சர்க்கரை சேர்க்காத பால் சாப்பிடலாம். அரிசி மாவு, தயிர் கலந்து முகத்தில் தடவி கழுவலாம்.
மூன்றாம் நாள் காலை, புதினா சேர்த்து கொதிக்க தண்ணீரை வடிகட்டி, அதில் எலுமிச்சைச்சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். உணவுக்குப் பின், வாழைப்பழம், மதியம், கிவி ஜூஸ், இரவு, செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழம், ஊறவைத்த பாதாம் விழுது சேர்த்து, முகத்தில் தடவி கழுவலாம்.
நான்காம் நாள் காலை, கேரட், பாதாம், தேங்காய் பால் சேர்த்து அரைத்தும், உணவுக்குப் பின், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், தேன் சேர்த்து குடிக்கலாம். மதியம், ஆரஞ்சுப் பழம். இரவு, பாதாம், குங்குமப்பூ, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து குடிக்கலாம். பாலில், குங்குமப்பூவை கரைத்து, ஆலிவ் ஆயில் கலந்து தடவி கழுவலாம்.
முதல் நாள் இரவே, ஒரு கப் தண்ணீரில், அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கறுப்பு உலர் திராட்சை மற்றும் மூன்று ஆல்பகோடா பழம் ஊற வைத்ததை, ஐந்தாம் நாள் காலை குடிக்கலாம். உணவுடன் தக்காளியை பச்சையாகவும், மதியம், 'டார்க் சாக்லேட்' கொஞ்சம் சாப்பிடலாம். இரவு, பப்பாளி சாப்பிடலாம். கற்றாழை ஜெல்லுடன், கெமிக்கல் கலக்காத பன்னீர் கலந்து முகத்தில் தடவி கழுவலாம்.
ஆறாம் நாள் காலை, இனிப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ், உணவுடன் ஒரு கப் அன்னாசிப் பழம், மதியம், அரிசி உணவு தவிர்த்து கேழ்வரகு அல்லது ஓட்ஸ். இரவு, மாதுளம் சாப்பிடலாம். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி கழுவலாம்.
ஏழாம் நாள் காலை, குங்குமப்பூ, தேன் சேர்த்த பால், உணவுக்குப் பின், பப்பாளி ஜூஸ், மதியம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவகாடோ ஜூஸ், இரவு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் சாப்பிடலாம். முட்டை வெள்ளைக் கருவுடன், தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவலாம். காபி, டீயை நிறுத்தி, வெறும் வயிற்றில் மற்றும் காலை, மதியம், இரவு உணவுக்கு பின், ஏழு நாட்களுக்கு இதைத் தொடர்ந்தால், சருமம் ஜொலிக்கும்.
--தினமலர் நாளிதழிலிருந்து.



Sunday 21 January 2018

வேலை செய்து வந்தால்.....

திருச்சி, எடமலைப்பட்டி புதுாரில், மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வரும், 91 வயது பாட்டி, ஜெயலட்சுமி: என் கணவர், இறந்து விட்டார். எங்களுக்கு ஐந்து பெண், இரண்டு ஆண் குழந்தைகள். நாலாவது தலைமுறையை பார்த்து விட்ட நான், ஐந்தாவது மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.மாடித்தோட்டம் அமைத்து நாலைந்து ஆண்டுகளாகிறது. எந்த விதையை கேட்டாலும் பிள்ளைகள், மறக்காமல் வாங்கி தந்து விடுவர்.

மாடித்தோட்டம்: எனக்கு ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார பிடிக்காது. அந்த உழைப்பு தான், இந்த வயதிலும் மாடித்தோட்டம் போட வைத்துள்ளது.
பெயின்ட் வாளி, பழைய பிளாஸ்டிக் வாளிகளில், செம்மண், மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போட்டு, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளை தயார் செய்து கொள்வேன். முதலில் காய்கறி, பூச்செடி விதைகளை போட்டு நாற்று உருவாக்கி, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளில் அவற்றை நட்டு, இரண்டு வேளையும் தண்ணீர்
ஊற்றுவேன்.

செடி வகைகள்: பாகல், பீர்க்கை, புடலை, அவரை கொடி, வெண்டை, தக்காளி, கத்திரிக்காய், வெள்ளை முள்ளங்கி, கொத்தவரங்காய், கீரை வகைகளும் உள்ளன. எனக்கும், என் மகளுக்கும் போக மீதியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தந்து விடுவேன்.
மூலிகைகளில் துளசி, துாதுவளை, பிரண்டை, சிறியாநங்கை, கீழாநெல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி வளர்த்து வருகிறேன்.
  • துளசி, துாதுவளை, சளிக்கு நல்லது. 
  • சிறியாநங்கை இலையை தினசரி மென்று வந்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 
  • கீழாநெல்லி, மஞ்சள் காமாலை நோய்க்கு கைக்கண்ட மருந்து. 
  •  திருநீற்றுப் பச்சிலை, கொய்யா இலை, குப்பைமேனி மூன்றையும் அரைத்து, தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்தால், பிரச்னை நீங்கும்.
  • அடுக்கு நந்தியாவட்டை பூவை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வெள்ளை துணியில் கட்டி, கண்ணில் ஒற்றி எடுத்தால், கண்களுக்கு குளிர்ச்சி. சுமங்கலிகள் யாராவது வீட்டுக்கு வந்தால், வெற்றிலை கொடியிலிருந்து பறித்து, தாம்பூலம் தந்து அனுப்புவோம்.
உணவு பழக்கம்:
6:00 மணிக்கு காப்பி;
8:00 மணிக்கு, வாரத்தில் இரண்டு நாள் பழச்சாறு, ஒரு நாள் பயத்தம்பயறு கஞ்சி, ஒரு நாள் வெந்தயக்கஞ்சி, இரண்டு நாள் ஏதேனும் மூலிகை சூப், ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கஷாயம் அல்லது மிளகு கஷாயம்.
10:30மணிக்கு சாப்பாடு;
2:00மணிக்கு இரண்டு இட்லி அல்லது பழம்;
5:30 மணிக்கு ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட்;
7:30 மணிக்கு இரவு உணவு; இதுதான், என் உணவுக் கட்டுப்பாடு.
துாங்கி நேரத்தை வீணாக்காமல், வேலை செய்து வந்தால், எந்த நோயும் வராது. உடம்பும் உடற்பயிற்சி செய்தது போல் ஆரோக்கியமாக இருக்கும்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

ஏன் உழைக்க வேண்டும்? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன், இந்த கேள்விக்கான தங்களின் பதிலை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ........


Saturday 20 January 2018

மத்திய அரசின் மின் வாகன கொள்கையும் வேலை இழப்பு அபாயமும்:

‘மத்­திய அரசு, 2030ல், நாடு முழு­வ­தும், பொது போக்­கு­வ­ரத்­தில், மின் வாக­னங்­களை பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ள­தால், வாகன உதிரி பாகங்­கள் துறை­யில், 15 லட்­சம் பேர் வேலை­யி­ழக்க நேரி­டும்’ என, இந்­திய வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பான, ‘அக்மா’ தெரி­வித்து உள்­ளது.

மத்­திய அரசு, சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்டை குறைக்­கும் நோக்­கில், 2030ல், நாடு முழு­வ­தும், பொது போக்­கு­வ­ரத்­தில், மின் வாக­னங்­களை பயன்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது. இதற்­காக, மின் வாகன தயா­ரிப்­பில் விரைந்து இறங்­கு­மாறு, வாகன நிறு­வ­னங்­கள் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்ளன. இதை­யேற்று, மாருதி சுசூகி, டாடா மோட்­டார்ஸ் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­கள், மின் வாகன தயா­ரிப்­பில் கள­மி­றங்கி உள்ளன.


இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் கொள்­கை­களை வகுக்­கும், ‘நிடி ஆயோக்’ அமைப்­பிற்கு, ‘அக்மா’ எழு­தி­யுள்ள கடி­தம்: போதிய அவ­கா­ச­மின்றி, 13 ஆண்­டு­களில், மின் வாகன பயன்­பாட்டை கட்­டா­யம் ஆக்­கி­னால், அந்த தொழில்­நுட்­பத்­தில், உதிரி பாகங்­களை தயா­ரிப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தி, தேவை­யான முத­லீ­டு­களை மேற்­கொள்­வது கடி­ன­மாக இருக்­கும். ஏற்­க­னவே, வாகன மாசு கட்­டுப்­பாடு தொடர்­பாக, 2020ல் அம­லுக்கு வர உள்ள, ‘பாரத் ஸ்டேஜ் – 4’ தொழில்­நுட்­பத்­தில், வாகன உதிரி பாகங்­கள் தயா­ரிப்­ப­தற்கு, பெரு­ம­ள­வில் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது. இந்த முத­லீ­டு­கள் மீது, நியா­ய­மான வரு­வாய் கிடைக்க, குறைந்­த­பட்­சம், 10 ஆண்­டு­க­ளா­வது ஆகும்.

இந்­நி­லை­யில், பெரு­ம­ளவு முத­லீடு தேவைப்­படும், மின் வாகன உதிரி பாகங்­களின் தயா­ரிப்­பி­லும் இறங்க, நிறு­வ­னங்­க­ளால் இய­லாது. அத­னால், மின் வாகன கொள்­கையை, படிப்­ப­டி­யாக அமல்­ப­டுத்­த­லாம். இத­னால், புதிய தொழில்­நுட்­பத்­திற்கு மாறும் போது ஏற்­படும் வேலை­யி­ழப்பு பாதிப்பு, மிகக் குறை­வாக இருக்­கும்.

‘வரும், 2030ல், 40 சத­வீத வாக­னங்­களை, மின்­சா­ரத்­திற்கு மாற்­ற­லாம்’ என, வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் தெரி­வித்து உள்ளன. இது­வும், வாகன உதிரி பாக நிறு­வ­னங்­களை பாதிக்­கும். ஏனெ­னில், மின் வாக­னங்­க­ளுக்­கான பெரும்­பா­லான முக்­கிய பாகங்­கள், வெளி­நாட்­டில் இருந்து தான் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்றன.

நடுத்­தர காலத்­தில், மின் வாக­னங்­க­ளுக்­கான, ‘பேட்­டரி’ தேவை குறை­வா­கவே இருக்­கும் என்­ப­தால், அவற்­றின் தயா­ரிப்­பில் இறங்­கும் நிறு­வ­னங்­க­ளால், முத­லீட்­டிற்கு ஏற்ற வரு­வாய் ஈட்ட முடி­யாது. அத­னால், மின் வாகன அம­லாக்­கத்தை தள்ளி வைக்க வேண்­டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

முதலீடு குறையும்:
உட­ன­டி­யாக, மின் வாகன புழக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது சரி­யாக இருக்­காது. அதற்கு, 20 – 30 ஆண்­டு­கள் அவ­கா­சம் தேவை. முத­லில், எரி­பொ­ரு­ளில் இருந்து மின் வாக­னங்­க­ளுக்கு மாறு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்த வேண்­டும். இத­னால், ஒரு பகுதி தொழி­லா­ளர்­கள், புதிய தொழில்­நுட்­பத்­திற்கு சுல­ப­மாக மாறு­வர். அடுத்த, 10 ஆண்­டு­களில், எரி­பொ­ருள் இன்­ஜின் தயா­ரிப்­பில், முத­லீடு வெகு­வாக குறைந்து விடும்.
-குமார் கந்தஸ்வாமி, பங்குதாரர், ‘டிலோட்டி இந்தியா’

--தினமலர் நாளிதழிலிருந்து.


Wednesday 3 January 2018

ஆச்சரியங்களின் மொத்த உருவம் ஸ்ரீதர் ஆச்சார்யா...

ஒரு காலத்தில் இரண்டு ரூபாய் பள்ளிக்கட்டணம் கட்டவே சிரமப்பட்டவர் இன்று இந்தியா முழுவதும் 14 இடங்களில் தொண்டு நிறுவனம் அமைத்து பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கும், முதியோர்களுக்கு சேவை செய்து வருகிறார். கடந்த நாற்பது வருடங்களில் நுாற்றுக்கணக்கான பார்வையற்ற மாணவர்களை பட்டதாரிகளாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர்,நக்சலைட்டுகள் நடமாடும் வட மாநிலங்களில் உள்ள கந்தமால்,காலகண்டியில் உள்ள மலைவாழ் குழ்ந்தைகளின் மறுவாழ்விற்கு வித்திட்டவர், இலவச கண் மருத்துவமனை நடத்துபவர்,இப்படி இன்னும் பல ஆச்சர்யமான விஷயங்களுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு தமிழர் என்பதுடன் தேசமே பெரிதென்று போற்றும் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியும் கூட. அவரே ஸ்ரீதர் ஆச்சார்யா.



இந்தியாவின் ஐஎஸ்ஒ சான்றிதழ் பெற்ற தொண்டு நிறுவனம் இவருடைய நவஜீவன் பார்வையற்றவர்களுக்கான மறுவாழ்வு மையம்தான். இந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி மத்திய அரசு சிறப்பு தபால் உறை வெளியிட்டுள்ளது ஒன்றே போதும் நிறுவனத்தின் தரத்தை சொல்ல.

நவஜீவனுக்குள் செல்லும் முன் ஸ்ரீதர் ஆச்சார்யாவைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். வேதபண்டிதர் வீட்டு குழந்தையான ஸ்ரீதர் காஞ்சியில் இவரது தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார்.அப்போது தனியார் பள்ளிகள் கிடையாது அரசாங்க பள்ளிகள்தான் மாதம் இரண்டு ரூபாய் கட்டணம்.இந்த இரண்டு ரூபாய் கட்டணத்தை ஸ்ரீதரால் கட்டமுடியாத நிலை.

காஞ்சி மடத்தின் மகா பெரியவரான சந்திரசேரேந்திர சுவாமிகள், ஸ்ரீதர் போன்ற நாற்பது மாணவர்களை தேர்வு செய்து படிக்கவைத்தார்.அப்படி படிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் இந்த சிறுவர்களிடம் நிறைய பேசுவதுண்டு, அதிலும் ஸ்ரீதர் என்றால் அவருக்கு மிகவும் பிரியம்.ஸ்ரீதரை மடத்தின் சார்பில் நடந்து வந்த வேதபாடசாலையில் படிக்கவைத்தார்.

(இதற்கு தாத்தாவிடம் அனுமதி பெறுவதற்காக மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் ஒரு அரிக்கேன் விளக்கின் உதவியுடன் மகா பெரியவர் இரவு நேரம் வீட்டிற்கு வந்ததை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது என்கிறார்.)

மேற்கொண்டு வேதம் படிப்பதற்காக காசிக்கு சென்றார் அங்கு நிறைய படித்தார், வேதம் படித்ததன் காரணமாக பத்ராச்சலம் உள்ளீட்ட நாட்டின் பல்வேறு மடங்கள் கோவில்களில் பார்த்த வேலையில் மனம் லயிக்கவில்லை, இந்த நேரத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் ஜூனியர் காமெண்ட் ஆபிசராக பதவி கிடைத்தது. அங்கு 17 ஆண்டுகள் பணியாற்றினார் ஆனாலும் மனதில் ஒரு நிறைவில்லை,தன் மனம் எதை நாடுகிறது என்பதை அறிய மீண்டும் மகா பெரியவருடன் ஒரு சந்திப்பு.

அந்த சந்திப்பின் போது நடந்த நீண்ட உரையாடலில் முடிவில்...

சொர்க்கம் பற்றி தெரியாது ஆனால் நரகம் பற்றி சொல்ல முடியும் நான்கு விதமான நரகங்கள் உண்டு

முதுமை என்பதே முதல் நரகம்

முதுமையின் போது வறுமை இருந்துவிட்டால் அது இரண்டாவது நரகம்

முதுமை வறுமை இவற்றுடன் பார்வை பறிபோவது மூன்றாவது நரகம்

முதுமை வறுமை பார்வையின்மையோடு பார்க்கவும் பராமரிக்கவும் ஆள் இல்லாமல் போவது நான்காவது நரகம்.

இந்த நான்கு நரகங்களோடும் வாழும் மனிதருக்கு சேவை செய் அதுக்குதான் நீ பிறந்திருக்கே என்று பெரியவர் சொல்லிவிட்டார்.

தலைக்குள் ஆயிரம் விளக்கு போட்டது போல ஒரு பிரகாசம் தனது தேடலுக்கான விடை கிடைத்த சந்தோஷத்துடன் என்ன பெயரில் நான் என் தொண்டு நிறுவனத்தை நடத்தட்டும் என்றதும் எந்த ரயிலில் என்னைப்பார்க்க வந்தாய் என்று கேட்டு நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்று சொன்னதும் அந்தப்பெயரையே வைத்துக்கொள், சீனிவாசப் பெருமாள் என்றால் கண்கண்ட தெய்வம் மட்டுமில்ல கண்கொடுக்கும் தெய்வமும் கூட ஆகவே பெருமாள் இருக்கும் இடத்திற்கு போய் உன் சேவையை ஆரம்பி என்றும் சொல்லிவிட்டார்.

இப்படி திருப்பதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் நவஜீவன் முதியோர் பராமரிப்பு இல்லம் மற்றும் பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கான பள்ளி. ஆரம்பிக்கும் போது திருப்பதியில் ஆரம்பிக்கும் அளவிற்கு பணம் இல்லை ஐந்து ரூபாய் வாடகையில் மங்களம் என்ற கிராமத்து குடிசையில்தான் ஆரம்பித்தார்.பிறகு நல்லவர்கள் உதவியால் நன்கொடையால் படிப்படியாக திருப்பதி பக்கம் உள்ள திருச்சானுார் வந்து இடத்தை வாங்கி முதியோர் இல்லாம் பார்வையற்றோர் பள்ளி இவற்றுடன் இலவச கண் மருத்துவமனை நடத்திவருகிறார்.ராணுவத்தில் இருந்த போது சுற்றிய அனுபவமும் கற்ற மொழிகளும் இவரது சேவைக்கு கைகொடுக்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் மெதுவாக அதே நேரம் உறுதியாக இவரது சேவை தொடர்கிறது.ஆந்திரா அரசின் சித்துார் மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே பார்வையற்றோர் பள்ளி இவருடையதுதான். திருச்சானுாரில் மட்டுமின்றி தமிழகத்தில் பெருங்களத்துார் உள்பட நாட்டின் பதினான்கு இடங்களில் நவஜீவன் தொண்டு நிறுவனம் வெற்றிகரமாக  இயங்கிவருகிறது.1070 பேர் அன்றாடம் பயன் பெற்றுவருகின்றனர்.14 கிளைகளில் 164 பேர் பணியாற்றி வருகின்றனர்.ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இந்த செலவு முழுவதும் நன்கொடையாளர்கள் தரும் பணத்தில்தான் நடக்கிறது.அவர்கள்தான் நவஜீவனின் நிஜமான துாண்கள் நான் வெறும் கருவிதான்.தாத்தா,மகன்,பேரன் என்று மூன்று தலைமுறைகளாக நன்கொடை கொடுப்பவர்களும் உண்டு.இதில் மகன்களும் பேரன்களில் பலரும் நவஜீவனுக்கு வந்ததேயில்லை ஆனால் இதன் ஜீவன் என்ன என்பதை உணர்ந்து வழங்குகின்றனர், அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது.

அதே போல மாளிகை போன்ற வீடு பணியாட்கள் உயர்ந்த உணவு கல்வி என்று அனைத்து வசதிகள் வாய்ப்புகள் உள்ள ராணுவ வேலையை விட்டுவிட்டு தொண்டு நிறுவனம் தொடங்கப்போகிறேன் என்றதும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல் என்னுடன் வந்து பல காலம் குடிசை வீட்டில் தங்கியபடி என்னையும் நவஜீவனையும் உயிர்ப்புடன் இயங்கச் செய்தவர் இப்போதும் செய்பவர்,இன்று வரை என் பென்ஷன் பணத்தில் மட்டுமே குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் மனைவி கவுசல்யாவிற்கு நன்றி.

இறந்து போகும் ஆதரவற்ற முதியார்களுக்கு நானே பிள்ளையாக இருந்து காரியம் செய்யும் போது குறுக்கே விழுந்து தடுக்காமல் தன் பிள்ளை எது செய்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மனதார என்னுடன் இருந்து என்னை வாழ்த்திக்கொண்டு இருக்கும் என் வயதான தாயார் ருக்மணி, என்னை புரிந்து கொண்டதுடன் தன்னையும் புரிந்து கொண்டு சாதாரண பள்ளியில் படித்து இன்று நல்ல நிலையில் இருந்து எனக்கு உதவிக்கொண்டிருக்கும் என் பிள்ளைகள் பதஞ்சலி-ரம்யா ஆகியோருக்கும் நன்றி சொன்னார்.

முத்தாய்ப்பாக நவஜீவனை ஆசீர்வாதிக்கும் திருமலை சீனிவாசன், மற்றும் அறக்கட்டளை செயலாளர் சீனிவாசன், மேலாளர் சீனிவாசன் ஆகிய மூன்று சீனிவாசன்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் என்று சொல்லும் ஸ்ரீதர் ஆசார்யாவிற்குதான் பார்வையற்ற பள்ளிக்குழந்தைகள் ஆதரவற்ற முதியோர்கள் சமூகம் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளது.

அவரது எண்:9849617808,மேலாளர் எண்:9908537528.

--தினமலர் நாளிதழிலிருந்து.

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...