Labels

Showing posts with label Water conservation. Show all posts
Showing posts with label Water conservation. Show all posts

Friday, 4 January 2019

ஓராண்டு ஆனாலும் கெட்டுப் போகாது!!!.....வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்கப்பட்ட மழைநீர்!!!

மழைநீரை சேமித்து, குடிநீராக பயன்படுத்தி வரும், அரியலுார் மாவட்டம், கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த, சண்முகசுந்தரம்: விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், நான். அதனால், விவசாயத்தில் ஆர்வம் அதிகம். 15 ஆண்டுகளுக்கு முன், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வாரோடு அறிமுகம் ஏற்பட்டது. அதனால், பாரம்பரிய விவசாயம், மரபு மருத்துவம் என, என் கவனம் திரும்பியது. என்னுடைய, ௦.5 ஏக்கர் நிலத்தில், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் போடாமல், விவசாயம்செய்கிறேன். ஆனால், சுற்று வட்டாரத்தில் ரசாயன விவசாயம் செய்வதால், பள்ளமான பகுதியில் உள்ள என் நிலத்திலும், மழைநீர் மூலமாக அந்தரசாயனங்கள் கலந்து விடுகின்றன. அதனால், வேறு இடத்தில், நண்பர்களோடு சேர்ந்து, இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவே, பச்சை நிறத்தில் ஆடை உடுத்தி வருகிறேன்.

 

'மழை நீரில், உயிராற்றல் அதிகம். அதை குடித்தால், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழலாம். கண் குறைபாடு வராது' என, நம்மாழ்வார், அடிக்கடி சொல்லி இருக்கிறார். அதனால், எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே, மழை நீரைத்தான் குடித்து வருகிறோம். 'மழை நீரைக் குடித்தால், சளி பிடிக்கும்' எனக் கூறுவர்; அது, தவறான கருத்து. எங்கள் அனுபவத்தில், அப்படி யாருக்கும் நடக்கவில்லை. பொதுவாக, தண்ணீரை சுட வைத்தால், அதன் சுவை மாறும். ஆனால், மழைநீரைக் கொதிக்க வைத்து குடித்தாலும், சுவை மாறாது. அத்துடன், மழை நீரைக் கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒரு நாளுக்கு, 300 மி.லி., மழைநீரே, ஒருவருக்குபோதுமானதாக இருக்கும்.

மழை நீரை குடிப்பதால், தாகம் எடுக்காது; உடலில் சோர்வு ஏற்படாது. அந்தளவு, அதில் தேவையான உயிர் சத்துக்கள் உள்ளன. மழை பெய்ய ஆரம்பித்ததும், மொட்டை மாடியில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்து, குழாய் வழியாக கீழே வரும்.அதெல்லாம் நீங்கி, தண்ணீர் சுத்தமாக வரத் துவங்கியதும், பருத்தி துணியால் வடிகட்டி, பாத்திரங்களில் பிடித்து வைத்துக் கொள்வோம். வெயில் படாமல் வைத்திருந்தால், ஓராண்டு ஆனாலும் மழைநீர் கெட்டுப் போகாது; துர்நாற்றம் வராது. இயல்புத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். மழைநீரை மட்டுமே குடித்து, எந்த உணவும் சாப்பிடாமல், பல நாட்கள் இருந்துஉள்ளேன்.
--தினமலர் நாளிதழிலிருந்து

மழைநீரை வடிகட்டி குடிக்கும் முறை:
எங்கள் வீட்டிலும் மழைநீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறோம். வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் போது முதல் இரண்டு மழை நீரை பிடிப்பதில்லை, அதில் காற்றில் மற்றும் மேற்கூரையில் இருக்கும் அசுத்தங்கள் கலந்து இருக்கும். வசதி இருந்தால் மழை நீர் சேமிப்பு அமைப்பை முறையாக நிறுவிக்கொள்ளலாம் இல்லையெனில் மழைநீரை பாத்திரத்திலோ, drum அல்லது பிளாஸ்டிக் Barrel லிலோ பிடித்து வைக்கலாம். ஒரு நாள் அந்த பாத்திரத்திலேயே இருக்க வேண்டும்.....பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும, அதன் பிறகு நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து வேறொரு பாத்திரத்தில் மழைநீரை மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும.

என்னதான் வடிகட்டினாலும் மழைநீரில் கலந்திருக்கும் நுண் துகள்கள் வடிகட்டப்படாது, ஒரு வாரம் வரை வைக்கும் போதுதான் அந்த துகள்கள் பாத்திரத்தின் அடியில் சேகரமாகும். பாத்திரத்தில் உள்ள மழைநீரை மாற்றிய பிறகு பாத்திரத்தின் உட்பகுதியை தேய்த்து கழுவினால் வெளிர் பழுப்பு நிறத்தில் படிந்துள்ள அசுத்தங்களை காண முடியும். இப்படி இரண்டு மூன்று முறை மாற்றிய நீரை குடிக்க பயன்படுத்தலாம். கடைசியாக மாற்றிய பாத்திரத்தில் கூட அடியில் உள்ள நீர் வரை குடிக்காமல் கடைசியில் உள்ள நீரை அலசி ஊற்றி விட வேண்டும். தொடர் மழை பெய்யும் காலங்களில் இந்த அசுத்தங்கள் குறைய வாய்ப்புள்ளது.

 தொடர்புடையவை....
தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2  
 

Sunday, 1 October 2017

தண்ணீர் 9: நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி

ஐயப்ப மசாகி:

நீர் காந்தி, நீர் வித்தைக்காரர், நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மசாகி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மேற்கு கர்நாடகத்தில் கடக் (Gadag) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய சூழலில் பிறந்து தினமும்​ அதிகாலை 3 மணிக்கு ​எழுந்து, பல கிலோமீட்டர் தொலைவு தண்ணீர் எடுக்கச் சென்ற அவருடைய குழந்தைப் பருவமே, அவரை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவருடைய அம்மா பல கி.மீ. தூரம் பானைகளைச் சுமந்து சென்று தண்ணீர் சுமந்து வந்த காட்சிகள் பசுமரத்தாணிபோல் இவர் மனதில் பதிந்திருக்கின்றது. இதனால் 25 ஆண்டு காலப் பணிக்குப் பின், நீராதாரங்களைப் புனரமைக்கும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.

 (Mr. Ayyappa Masagi, Founder and Director, Water Literacy Foundation)

" இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார் "

படிப்பும் பணியும்: 
 
படிப்பு ஒரு புறம் சென்றுகொண்டிருந்தாலும், தண்ணீருக்காக தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் படக்கூடாது என்று தொடர்ந்து தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறார். இயந்திரவியல் தொழில்நுட்ப கல்வி முடித்து L&T யில் பணி கிடைக்கிறது, அங்கு 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார்.

மழைநீர் சேமிப்பும் விவசாயமும்:

பணிக்குஇடையில்  தனது ஊரில்  6 ஏக்கர் பரப்பளவில் வறண்ட ஒரு நிலப்பகுதியை வாங்கி அங்கு காபியும்,​ ரப்பரும் வளர்க்கிறார்.  கனமழை,​ பிறகு 2 வருடங்கள் வறட்சி என மாறி மாறி வந்ததில் பயிர்கள் அழிகிறது. அப்போதுதான் இவருக்கு ஒன்று புரிகிறது, அதாவது "இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை உள்ளது". இதற்க்கு தீர்வு தேடி நீர் மேலாண்மையில் வெற்றிகண்ட களப்பணியாளர்களான அண்ணா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்றோரை சந்தித்து தனது நெஞ்சில் இருக்கும் நீர் மேலாண்மை திட்ட கனவை நினைவாக்க வழிகளை தேடியெடுக்கிறார்.

போர்வெல்களில் அதிக நீரை சேமிப்பதன் மூலமும், பாசனத்திற்கு குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலமும் நீரை அதிகளவு சேமிக்கலாம்​ என்பதை அறிகிறார்.​ அடுத்தடுத்த வருடங்களில், அது வெற்றியை கொடுக்கிறது. இம்முறையைப் பயன்படுத்தி அவர் அதிக அறுவடை செய்கிறார். பிறகு, பக்கத்து வயல்களிலும் இம்முறையைப் பரிசோதித்து வெற்றி பெறுகிறார். அவருடைய வேலையை உதறிவிட்டு இப்பணியிலேயே தன்னை​ ஈடுபடுத்திக்கொள்கிறார். 


தொழில்நுட்பம்:

நிலத்தில் ஒரு குழி தோண்டி அதில் மணல், களிமண், கூழாங்கற்கள், பாராங்கற்கள் ஆகியவற்றை போட்டு மழை நீரை உட்புக வைத்தால், அது கற்களையும் மணலையும் தாண்டிச் சென்று அடிமண்ணை நனைக்கும். ஒரு saturation புள்ளிக்கு வந்த பிறகு, நிலத்தில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுக்கும்.​ மேலும் ஒவ்வொரு நிலத்தின் அமைப்புக்கும், அந்த வட்டார நீர்வளம், மழைவளம் பொருத்தும், நிலத்தில் தடுப்புகள், குட்டைகள், நீர் சேகரம்-சேமிப்பு, நிலத்தடி செறிவூட்டும் அமைப்புகள் போன்ற ஆலோசனைகளை வழங்குகிறார். இதுவே இவரது நீர் சேகரிப்பு முறை திட்டம்.

சாதனைகளும் விருதுகளும்:
  • கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார். 
  • நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில் ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார். 
  • மழைநீரைச் சேகரித்து வளம்பெறும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் இவர் செய்துவருகிறார்.
  • 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது என இவரது சாதனைகள் நீண்டு  செல்கிறது. 
  • விவசாய சேவைக்காக அசோகா  fellowship, Jamnalal Bajaj உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

புதிய முறை:
 
**கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள்.
**பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள்.
**தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறேன்.
**குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருக்கிறேன்.

பல்வேறு தொழில்நுட்பங்கள் என்னிடம் இருக்கின்றன, எனது தொழில்நுட்பங்கள் குறித்து இளம் பொறியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். 'வாட்டர் லிட்ரசி பவுண்டேஷன்' என்ற என்னுடைய அலுவலகத்தைச் சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் இவர்.

தொடர்புடைய பதிவுகள் மற்றும் காணொளிகள்:

1) ஐயப்பா மசாகி- வறட்சியிலும் நீர் சேமிக்க வழி சொன்ன மனிதர்!
2) ஐயப்ப மசாகி
3) வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'
4) India’s Water Warrior Has a Solution for India’s Droughts. The Best Part – We Can Play a Role Too!
5) Why is this man so obsessed to the cause of water conservation
6) Ayyappa Masagi's innovative technologies encompass methods for irrigation & rainwater harvesting, both in urban & rural context
7) Borewells run dry? Crops failing? The Water Doctor will see you now
8) Meet India’s ‘water doctor’, who has turned 84 acres of barren land into a water bowl
9) Ayyappa M Masagi at TEDx
10) Masagi Presentation
11) Water Literacy Foundation
12) Here is a water crusader  
 



தண்ணீர் 8: மழை இல்லம்

தென்தமிழகத்தின் முதல் மழை இல்லம்,  சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார், மதுரை மழை இல்லம் நிறுவனர் சக்திவேல்.

1)   எதற்காக ‘மழை இல்லம்’?

இயற்கையின் பெருஞ்செல்வம்தான் ‘மழை’. இதை ஒவ்வொருத்தரும் உணரனும் என்பதற்காகத்தான் இந்த ‘மழை இல்லம்’ திட்டம். பலதரப்பட்ட காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை வந்திடுது. ஆனால் இயற்கை எந்த பஞ்சத்தையும் நமக்கு ஏற்படுத்தவே இல்லை. தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 998 மில்லி மீட்டர் அளவு மழைப்பொழிவு இருக்கு. இதை சேமித்தால் மட்டுமே போதும். ஒவ்வொரு வீட்டுக்கும் அன்றாடம் பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைதான் மழை இல்லம் அமைத்தல்.


2) மழை நீர் சேமிக்கும் வகைகள்?

மழை நீரை நேரடிப் பயன்பாடு, நிலத்தடி சேமிப்பு ஆகிய இரண்டு வழிகளில் சேமிக்கலாம். இதில் நேரடி பயன்பாட்டிற்கு தொட்டிகள் அமைத்தும், நிலத்தடி சேமிப்பிற்கு மழை நீர் குழி அமைத்தும் சேகரிக்கலாம்.

3) மழை நீரை எந்தெந்த முறைகளில் சேமிக்கலாம்?

தரை வழி மழை நீர் வடிகால் அமைப்பு, மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு, மரபு வழி மழை நீர் சேமிப்பு ஆகிய முறைகளில் சேமிக்கலாம்.

4) மரபுவழி முறைகளில் சேமிப்பது எப்படி?

நிலத்தடி நீருக்காக நாம் போர்வெல் போட்டால்,  ஆழ்குழாய் பைப் பூமியின் பல அடுக்குகளைத் தாண்டி பாறைகளைக் குடைந்தபின், நமக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் பாரம்பரிய கிணறு வெட்டும்போது நிலத்திற்கும் பாறைக்கும் இடையிலான ‘அலுவியா’ என்னும் பூமி அடுக்கிலிருக்கும் நீர் நமக்கு கிடைக்கும். இதனால், 600 அடி வரை பூமியை தோண்டித் துளைக்கத் தேவையில்லை. நம்ம நிலப்பரப்பிலிருந்து 15 அடியிலேயே தண்ணீர் கிடைச்சிடும். இதுக்கு சாட்சி தான் எங்க ‘மழை இல்லம்’.

5) இதே மாதிரியான இல்லத்தை அமைப்பது எப்படி?

மழை இல்லம் என சொல்வதைவிட பசுமை இல்லம் அமைக்க முயற்சி பண்ணுங்க. பசுமை இல்லம் என்பது முறையான மழைநீர் சேகரிக்கும் அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என நம்ம வீட்டிலேயே நம்ம தேவைகள் அத்தனையும் பூர்த்தியாகிடும். முறையான வல்லுநர்களின் வழிகாட்டுதலோடுதான் இந்த மாதிரியான இல்லத்தை ஏற்படுத்த முடியும்.

6)   மழை இல்லம் அல்லது பசுமை இல்லம் எங்கெல்லாம் அமைக்கலாம்? அதற்கான செலவுத் திட்டம்?

உதாரணமாக எங்கள் ‘ரெயின் ஸ்டாக்” அமைப்பினால் தனிவீடுகள், பள்ளி-கல்லூரிகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் என பலநிலைகளில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்படுகிறது. தனிவீடுகளுக்கு அதன் அமைப்பு முறையைப் பொறுத்து ரூ.6000 முதல் ரூ.15,000 வரை செலவு கணக்கீடு இருக்கும்.

7) விவசாய நிலங்களுக்கான மழைநீர் சேமிக்கும் அமைப்பை எவ்வாறு அமைப்பது?

விவசாய நிலத்தின் அமைப்புமுறை மற்றும் நீரோட்டத்தை பொறுத்துதான் அமைக்கமுடியும். பண்ணைக்குட்டை அமைப்பது விவசாய நிலங்களுக்கு ஏற்ற சேமிக்கும் முறையாகும்.

8) மழை இல்லம் இல்லம் அமைப்பதற்கான வழிமுறை?

நம்ம வீட்டு மொட்டைமாடியில் விழும் மழைநீரை பில்டர்கள் கொண்ட தொட்டிகளில் சேமித்து, காற்று, வெயில் படாமல் வைத்து நேரடியாகக் குடிக்க சமைக்கப் பயன்படுத்தலாம். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரித்து வீட்டுத் தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம். கழிவு நீர் வெளியேறும் பாதையில் கல்வாழை, சேப்பங்கிழங்கு செடிகளை நடுவதன் மூலம் கழிவு நீரின் நச்சுத்தன்மை நீங்கிவிடும். மாடியிலும் வீட்டைச் சுற்றியும் தோட்டம் அமைத்து, ஆர்கானிக் காய்கறிகளை நமக்கு நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

--- ராகினி ஆத்ம வெண்டி 
(மாணவப் பத்திரிகையாளர்) 

சென்னை மழை இல்லம், முனைவர் சேகர் ராகவன் 


Saturday, 30 September 2017

தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2

''36 வருஷம் பொதுப்பணித் துறையில் பொறியாளரா வேலை பார்த்தேன். அப்போது பல கிராமங்களில் தண்ணீர் தொடர்பான ஆய்வுகளில் எங்கள்  துறை ஆண்டுதோறும் ஈடுபடுவது வழக்கம். அத்தகைய ஆய்வுகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே வருவதைக் கண்டுபிடித்தோம். இந்த விஷயம், எதிர்காலத் தண்ணீர் தேவை குறித்து எனக்குள் ஒருவித கேள்வியை எழுப்பவே,  நீர்ச் சேமிப்புப் பற்றி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த நினைத்தேன்.


இதற்காகப் பல ஊர்களுக்கும் சென்றேன். இப்படி நான் செல்வது அலுவலகத்தில் சில சிக்கல்களை உருவாக்கவே, விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு முழுநேரமும் நீர் மேலாண்மைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்டும் வேலையையும் தொடர்ந்தேன். அந்த அடிப்படையில், மொட்டை மாடியில் கிடைக்கும் மழைநீரைச் சேமிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளேன். இதுவரை 2,014 வீடுகளுக்கு இந்த முறையில் 'மழைநீர் சேமிப்புத் தொட்டி’ அமைத்துக் கொடுத்து இருக்கிறேன்.



'சுமார் 80 சதவிகித நோய்கள் தண்ணீர் மூலம்தான் பரவுகிறது’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் குடி தண்ணீரில் 500 மில்லி கிராம் அளவுதான், தாது உப்புகளின் கூட்டுத்தொகை இருக்க வேண்டும். அவைதான் தரமான தண்ணீர் என்கிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக சுகாதார நிறுவனம் 122 நாடுகளின் குடி தண்ணீரை ஆய்வு செய்தது. அவற்றில், நம்முடைய தண்ணீருக்கு 120-வது இடம்தான் கிடைத்து இருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இருந்த தாது உப்புகளின் கூட்டுத்தொகை ஆயிரத்தைத்  தாண்டியது. நம்முடைய பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்குத் தண்ணீரும் காரணமாக இருக்கிறது. இதுவரையில் நாம், குடிப்பதற்குப் பயன்படுத்திவந்த ஆற்று நீரிலும், குளத்து நீரிலும், கிணற்று நீரிலும் சாக்கடை, தொழிற்சாலைக் கழிவுகள் கலந்து தண்ணீர்  மாசடைந்துவிட்டது. நம்முடைய வருமானத்தில் கணிசமான தொகை, தரமான தண்ணீர் என்ற பெயரில் விற்பனை செய்யும்  மினரல் வாட்டருக்குத்தான் போகிறது. ஆனால், அவற்றில் எந்த  'மினரல்'களும் இல்லை.


இவை அனைத்துக்கும் மாற்று 'மழைநீர் சேமிப்பு’ ஒன்றுதான். மழைநீரில் அனைத்து விதமான மினரல்களும் தேவையான அளவுகளில் இருக்கின்றன. இதற்காகப் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை. வீடுகளில் சின்ன மாற்றம் செய்தாலே போதும். கான்கிரீட் வீடுகள் என்றாலே,  மொட்டை மாடியில் இருந்து மழை நீர் கீழே வருவதற்குக் குழாய்கள் இருக்கும். அந்தக் குழாய் வரும் பகுதியில் உள்ள ஜன்னலின் வெளியே மழை, வெயிலுக்காக அமைக்கப்படும் தடுப்பின் (சன் ஷேட்) மீது ஒரு சிறிய வடித்தொட்டி அமைத்து,  மழை நீரை வடிகட்டினால்,  தூய நீராகக் கிடைத்துவிடும். தூய்மையான இந்த நீரை அடுக்களையிலும்கூட சேமித்துச் சமையல், குடிநீர் என்று எல்லாவற்றுக்கும் பயன்படுத்த முடியும். அடுக்களையில் இருக்கும் டேங்கில் காற்றும் வெளிச்சமும் புகாத அளவுக்கு மூடி வைத்துவிட்டால், அதில் சேமிக்கப்படும் நீர் வருடக் கணக்கானாலும் கெட்டே போகாது. என்னிடம் இருக்கும் மழைநீர் ஏழு ஆண்டுகளைக் கடந்தும் கெட்டுப்போகாமல் இருக்கிறது.


அடுக்களைத் தொட்டியின் மேல்புறம் ஒரு குழாயை அமைத்து, அதை ஆழ்துளைக் கிணற்றில்  இணைத்துவிட்டால்,  கூடுதல் நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும். இத்தகைய பரண் சேமிப்புக் கலன் பல்வேறு அளவுகளில் கடைகளிலேயே தயாராகக் கிடைக்கிறது. ஒரு வீட்டுக்கு மொத்தம் 10.000 முதல் 12,000 ரூபாய் செலவு செய்தாலே நான்குபேர் உள்ள குடும்பத்துக்குத் தண்ணீர் போதுமானது. மழைநீரை, பூமிக்கு அடியில் சேகரிக்கும் அமைப்புகளைப் பரவலாக ஏற்படுத்திவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் ஓர் அணைக்கட்டு அளவிலான நீரைத் தேக்கி வைத்திட முடியும். உபயோகத்துக்குப்போக உபரி நீரைக் கிணற்றிலும் பூமியிலும் சேகரிக்கும்போது நிலத்தடி நீர்மட்டம் கூடுவதோடு, தண்ணீரின் கார அமிலத்தன்மையும் மாறிவிடும். நீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் மழை நீரைச் சேமிக்கவேண்டியது அவசியம்'' என்றார் அக்கறையுடன்.

- காசி.வேம்பையன்



Tuesday, 27 June 2017

தண்ணீர் 6: மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்

குஜராத் 7 மாதங்கள் வெயிலில் வாட்டி எடுத்து, 3மாதங்கள் மிதமான வெயிலை கொடுத்து, 2 மாதங்கள் மழையில் நனைத்து எடுக்கும் மாநிலம். ஜூன் மாத துவக்கத்தில் இருந்து ஜூலை மாத இறுதி வரை நல்ல மலை பொழிவு இருக்கும். இதுவரை இருந்த ஊரா இது? என்று வியக்குமளவுக்கு மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் நீர் சூழ்ந்து இருக்கும்.

(மழைக்காலத்தில் நீர் நிரம்பி காட்சியளிக்கும் ஆழம் குறைவான கிணறு, ஜாம்நகர் அருகே குஜராத்)
ஒரு போகம் தான் விவசாயம் பண்ண முடியும். வசதியுள்ளவர்கள் (அதிக நிலம் வைத்திருப்பவர்கள்) வேண்டுமானால் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வார்கள், மற்றபடி சிறுவிவசாயிகள் நிலை கஷ்டம்தான். வருட மழைநீர் பகிர்வை இயற்க்கை சமநிலையில் வைக்கவில்லை, வருடத்தில் அதிக நாட்கள் வறட்சியுடனும் குறைந்த நாட்கள் உபரி நீருடனும் இருக்கிறது குஜராத். 

புங்ரூ (Bhungroo):
புங்ரூ என்றால் குஜராத்தியில் உறிஞ்சி குழாய் (straw) என்று அர்த்தம். மழைநீரை நிலத்தின் மேல் சேமிப்பதற்கு பதிலாக குழாய் வழியாக நிலத்திற்கு அடியில் செலுத்தி சேமித்து வைத்து நமக்கு வேண்டும் போது எடுத்து உபயோக படுத்தும் ஒரு தொழிநுட்பமே புங்ரூ. போர் போட்டு நீர் எடுப்பதற்கு பதிலாக போர் போட்டு நீரை உட் செலுத்தி மீண்டும் நீரை எடுத்து பயன்படுத்தும் முறை. 
பிப்லாப் கேட்டன் பால் (Biplap Ketan Paul): 
வங்காளத்தை சேர்ந்த 46 வயதான பிப்லாப் என்பவர்தான் இந்த முறையை 2000மாவது ஆண்டில் வடிவமைத்து குஜராத்தில் முதல் முறையாக செயல்படுத்தினார், பின் 14 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றி திட்டத்தை செம்மைப்படுத்தி இன்று பல குடும்பங்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்திய திட்டமாக மாற்றியிருக்கிறார். நைரீடா தனியார் சேவை நிறுவனம் (Naireeta Services PVT LTD) என்ற  அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மானிய விலையிலும், வசதியானவர்களுக்கு மானியம் இல்லாமலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி தருகிறார். நிறுவனத்தின் முக்கிய நோக்கமே வறுமை ஒழிப்புதான்.
  1. முதலில் நிலமுள்ள தகுதி வாய்ந்த 5 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் திட்டத்தை பற்றி விளக்கி சம்மதம் பெறுவது.
  2.  பின் நிலத்தின் சரிவு தன்மையை (Landslope) ஆராய்ந்து புங்ரூ அமைப்பதற்கான தகுந்த இடத்தை தேர்ந்தெடுப்பது.
  3.  அடுத்து, நீரை நிலத்தின் அடியில் அனுப்பி மீண்டும் எடுத்து பயன்படுத்த முடியுமா என்ற நிலத்தடி ஆய்வு (பாறை பாங்கான இடங்களில் செய்யல்படுத்த முடியாது, நீரை தேக்கி வைத்து தன்னூடே நீர் ஓட்டத்தை அனுமதிக்கும் பாறைகள் அல்லாத பகுதியே சிறந்த இடம்) மேற்கொள்ளப்படுகிறது.
  4.  அதன் பிறகு 30 முதல் 100 மீட்டர் ஆழத்திற்கு குழாய் இறக்க படுகிறது, பின் அதனை சுற்றி 1 முதல் 2.5 மீட்டர் நீள அகலமும் மற்றும் 1 மீட்டர் ஆழமும் உடைய சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டுகிறது. இதனால் அடைப்பு ஏற்படாது, இலை, தலை, குப்பைகள் உள் செல்லாது தடுக்கப்படும்.
  5. இறுதியாக தண்ணீர் எடுக்க மோட்டார் வசதி அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பிற்கு மகளிர் சுய உதவி குழுக்களோ அல்லது நிலத்தின் உரிமையாளரோ பொறுப்பாக நியமிக்க படுகிறார்கள். 

40 மில்லியன் லிட்டர் நீரினை சேகரித்து வைத்து 7 மாதங்கள் வரை எடுத்து பயன்படுத்த முடியும், 17 வகையான வடிவங்களில் பல்வேறு வகையான பருவநிலைக்கு ஏற்றவாறு புங்ரூ இருக்கிறது. குஜராத், ஜார்கண்ட், பந்தல்கண்ட் (Bhundelkhand), உத்திர பிரதேசம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 7 மாநிலங்களில் வெற்றிகரமாக இந்த புங்ரூவை நிறுவியிருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்த திட்டம் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை, ஏனெனில் பிற மாநிலங்களில் உள்ளது போல "குறிப்பிட்ட காலத்தில் அதீத மழை பொழிவு" என்ற நிலை இல்லை.



Wednesday, 13 July 2016

தண்ணீர் 5: ஒரு ரூபாய் மனிதர்


Dr.அணில் ஜோஷி: மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சரை (Mandsaur) சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தண்ணீர்: 3 பதிவில் பார்த்த ராஜேந்திர சிங் அவர்களை போலவே விவசாயிகளின் வறுமையை பார்த்து அவர்களுக்கு உதவ எண்ணி ஒரு தடுப்பணையை சொந்த செலவில் கட்டி தனது சேவையை துவக்கியவர் இன்று 10 தடுப்பணைகளை ஆற்றிலும், கால்வாய்களிலும் கிராம மக்களின் உதவியுடன் கட்டி முடித்திருக்கிறார். 

பெரிய அணைகளை கட்டுவதை விட சிறு சிறு தடுப்பணைகளை கட்டுவதில் நிறைய நன்மைகள் உள்ளது அதாவது பொருட்செலவு குறைவு, இடம் கையகப்படுத்துதல் இல்லை, பராமரிப்பு எளிது, உள்ளூர் மக்களின் பங்களிப்பு கிடைக்கும் இப்படி நிறைய, என்ன ஒன்று நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது அது ஒன்றுதான் குறை.

சாதனை: 1994 ஆம் வருடம் முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பதேகர் (Fatehgarh)  எனும் கிராமத்தில் தனது ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வரும் இவர் கிராம மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். 1999 ஆம் ஆண்டிலிருந்து மழை அளவு குறைய துவங்கிய பிறகு அந்த கிராமத்தில் மெல்ல மெல்ல வறட்சி அதிகமாகியிருக்கிறது 100, 200 குவிண்டால் சாகுபடி செய்தவர்கள் கூட இப்போது வெளியில் சென்று தானியங்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மருத்துவ செலவிற்கு பணம் தர முடியாத அளவிற்கு விவசாயிகள் சென்றதை கண்ட ஜோஷி இவர்களுக்கு உதவ எண்ணி களத்தில் இறங்கியுள்ளார்.

2008 ஆம் வருடம் கடும் வறட்சி குடிநீருக்கே தட்டுப்பாடு, இந்த சமயத்தில் "அருகில்  ஓடும் சோமலி (Somli) ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட்டினால் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கலாம்" என்று யோசனை கூறியிருக்கிறார் ஆனால் கிராம மக்கள் யாரும் அதை ஏற்க வில்லை. இருந்தும் தளராமல் நண்பர்களின் உதவியுடன் 1000 சிமெண்ட் மூட்டை சாக்குகளை வாங்கி அதில் மண்ணை நிரப்பி ஆற்றின் குறுக்கே போட்டு ஒரு சிறு தடுப்பை உருவாக்கியிருக்கிறார், 20 நாள் கழித்து பெய்த மழை சிறு தடுப்பணையை நிரப்பியிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது, சில வருடங்களாக தண்ணீர் வராமல் இருந்த அடி பம்பில் தண்ணீர் வர ஊர்மக்களுக்கு சந்தோசம், அந்த வருடம் ஒரு போக சாகுபடி எடுத்திருக்கிறார்கள். இவர் மீதிருந்த மரியாதை கூடிவிட்டது.


1 ரூபாய்:  முதல் தடுப்பணையை எப்படியோ கட்டி முடித்து அதன் பலனை பார்த்தவருக்கு அடுத்து ஒரு தடுப்பணை கட்டும் யோசனை, அதனால் மனைவியின் நகைகளை அடகு வைத்து அடுத்த அனையையும் கட்டியிருக்கிறார். 2010 ஆண்டு இவருக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது, அது தான் 1 இலட்சம் பேரிடம் 1 ரூபாய் வசூலித்து, அதாவது ஒவ்வொரு விவசாய குடும்பத்திலிருந்தும் 1 ரூபாய் வசூலித்து அதன் மூலம் அணை கட்டுவது. இவரது செயல்களைப் பற்றி செய்திதாள்களில் வர, மக்களும் உதவ முன்வந்தனர். நண்பர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் 3 மாதத்தில் 1,00,000 ரூபாய் வசூலித்து 92,000 ரூபாய் செலவில் மூன்றாவது அணையை கட்டியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே படத்தில் இருப்பது.

விருது: இந்த முறையில் பணம் வசூலித்து மேலும் 8 அணைகளை கட்டி முடித்திருக்கிறார். இதோடு நில்லாமல் மேலும் 100 தடுப்பணைகளை கட்டும் திட்டத்துடன் பணியாற்றி வருகிறார், மருத்துவர் என்ற அடையாளம் போய் அணை கட்டுபவர் என்றே அனைவராலும் அறியப்படும் இவர் "என் சமுதாயப் பணியில் மனைவியின் பங்கு இன்றியமையாதது" என்கிறார், இவரது மகள்களும் தந்தையின் சேவையை எண்ணி பெருமைபடுகின்றனர். சென்னையை சேர்ந்த, இது போன்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்  செய்திகளை வெளியிடுகின்ற, The Weekend Leader (www.theweekendleader.com) செய்தி  நிறுவனம் "சிறந்த மனிதர்-2012" (Person of The Year-2012) விருது வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.

சில இணைப்புகள்:
1) http://www.theweekendleader.com/Heroism/919/dam-man.html
2)http://www.indiaunboundmag.com/anil-joshi-an-ayurveda-doctor-and-our-person-of-the-year/
3) http://www.newindianexpress.com/cities/chennai/article1428523.ece?


"Great minds have purposes, others have wishes"

                                                                                                  -WASHINGTON IRVING


Tuesday, 12 July 2016

தண்ணீர் 4: பீஹாரின் பசுமைப் பெண் (The Green Lady of Bihar)

ஜெயதேவி: பீஹாரின் நக்ஸல்கள் அதிகமுள்ள  முங்கேர் (Munger) மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், தனது போராட்ட மற்றும் உதவும் குணத்தால் இன்று இந்தியாவே அறியும் அளவுக்கு வளர்த்திருக்கிறார். 5ஆம் வகுப்பு வரை படித்த இவருக்கு, 12 வயதில் திருமணமாகிஇருக்கிறது 16 வயதில் குழந்தை பெற்றிருக்கிறார், அதன் பின்னரே அவரின் சமுதாயப்பணி தொடங்கியிருக்கிறது.


சவால்களும் சாதனைகளும்: தனது வகுப்பை சேர்ந்த பெண்களும், பழங்குடி இன பெண்களும் கந்து வட்டிகாரர்களிடமும், மேற் வகுப்பினரிடமும் படும் கஷ்டங்களை பார்த்த பிறகே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இந்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்ட போது, "தனி ஆளாக ஒன்றும் செய்ய முடியாது, குழுவாகத்தான் எதையும் சாதிக்க முடியும் அதனால் ஒரு குழு ஆரம்பித்து செயல்படுங்கள்" என்று சொல்லியிருக்கிறார் மருத்துவமனை பணிப்பெண் ஒருவர்.

அதன் பின் சுய  உதவி குழு ஒன்றை தொடங்கி பல பெண்களை அதில் சேர்த்து, சிறிது சிறிதாக தனது கிராம மக்களை பண முதலைகளிடமிருந்து காத்திருக்கிறார். நிலையான அல்லது உருப்படியான வருமானம் இல்லாததுதான் கிராம மக்கள் துன்பத்திற்கு காரணம் என்றறிந்து அதை தீர்க்க வழிதேடியிருக்கிறார். அனைத்திற்கும் மூல காரணம் தண்ணீர் தட்டுப்பாடு என்று அறிந்து அதை தீர்க்க வழி தேடும் போது, டெல்லியை சேர்ந்த கிஷோர் ஜெய்ஸ்வால் என்ற சமூக, சுற்று சூழல் ஆர்வலரை 2003 ஆம் ஆண்டு சந்தித்ததுதான் இவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.

அவரின் வழிகாட்டுதலின் படி மழை நீர் சேகரிப்பு முறைகளை அறிந்து அதனை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறார். மக்களை ஒன்று திரட்டி, "ஓவ்வொரு குடும்பமும் இலவச சேவை தர வேண்டும், அதன் மூலம் நாம் நமக்காக ஒரு தடுப்பணை கட்டிக்கொள்ளலாம்" என்று கூறி 6 மாதத்தில் ஒரு தடுப்பணையை கட்டியிருக்கிறார், மக்களின் உதவியுடன். அடுத்த மழை காலத்தில் நீர் தேங்கி அதில் விவசாயம் செய்து லாபம் பெற்ற விவசாயிகள் மேலும் உற்சாகமுடன் அடுத்த தடுப்பணை கட்ட தாராளமாக உதவ முன்வந்திருக்கின்றனர். NABARD வங்கியை அணுக அவர்களும் உதவிசெய்ய இன்று 6 தடுப்பணைகள் கட்டப்பட்டு அனைத்திலும் மழை நீர் சேகரிக்கப்பட்டு 5000 ஏக்கர் தரிசு நிலங்கள் இன்று விலை நிலங்களாக மாறியிருக்கின்றன, மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இதோடு நில்லாமல் காடுகள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு,  மரம் நடுதல், அனைவருக்குமான கல்வி, குழந்தை திருமணம் ஒழிப்பு என்று அனைத்து சமூக முன்னேற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். நக்ஸல்கள், கந்துவட்டிகாரர்கள் இவர்களிடமிருந்து ஏதாவது தொந்திரவு இருந்ததா? என்று கேட்டால், "மக்களுக்காக உண்மையாக உழைக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும்" என்று கேட்டு தைரியத்தின் அடையாளமாய் விளங்குகிறார். இவரின் செயல் பல பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றி இருக்கிறது, வாழ்க்கையின் பக்கங்களை திரும்பிப்பார்க்க இதைவிட இனிமையான நிகழ்வு வேறென்ன வேண்டும்?

விருது: 2008-2009 ஆம் ஆண்டிற்கான "தேசிய இளைஞர் விருது (National Youth Award)" சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பில் சிறந்த பணியாற்றியதற்காக இவருக்கு தந்து மத்திய அரசு இவரை கெளரவித்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது இளைஞர் முன்னேற்றத்திலும், சமுதாய முன்னேற்றத்திலும் செயற்கரிய செயல் புரிந்த தனி நபர் அல்லது தொண்டு நிறுவனதுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் தனி நபர் எனில் 40,000 ரூபாய் அல்லது தொண்டு நிறுவனம் எனில் 2,00,000 ரூபாய் உள்ளடக்கியது இந்த பரிசு. சமீபத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாடு பற்றிய கருத்தரங்கிற்கு இந்தியா சார்பாக தென் கொரியா சென்று வந்துள்ளார்.

சில இணைப்புகள்:




Monday, 4 July 2016

தண்ணீர் 3: ராஜஸ்தானின் தண்ணீர் மனிதன்

Dr. ராஜேந்திர சிங்: 1959ல் ராஜஸ்தானில் பிறந்து ஆயுர்வேத மருத்துவம் படித்து அரசு வேளையில் சேர்ந்த இவர் சில காரணங்களுக்காக அரசு வேலையை உதறிவிட்டு கிராம மக்களின் முன்னேற்றதிக்காக முதலில் சேவையாற்ற சென்ற இடம் ராஜஸ்தானில் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷோரி கிராமம். கல்வி, மருத்துவம் இவற்றின் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் பிரச்சாரங்கள் மேற்கொண்டிருந்த இவரிடம் கிராமத்து மக்கள் "எங்களுக்கான முதல் தேவை உணவு மற்றும் நீர் அதற்கு பிறகே அனைத்தும்" என்று கூறி இருக்கின்றனர்.




இவரோ மருத்துவம் படித்தவர் விவசாயம் பற்றி அறியாதவர் இருந்தும் மக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து அவர்களுக்கு உதவ முன்வந்தார். வறண்டு பாலைவனமாய் காட்சியளித்த அந்த கிராமம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களால் நிறைந்திருந்தது, ஆண்கள் வேலைதேடி பக்கத்து நகரங்களுக்கு சென்று விட்டிருந்தனர். 

களப்பணி: சென்ற தண்ணீர் பதிவில் பார்த்த வரதராஜன் ஐயா போல இவரும் கையிலெடுத்த தீர்வு மழை நீர் சேகரிப்புதான். ஆனால் இருவரது அடிப்படை நோக்கமும் வேறுவேறு. கிராம மக்களை ஒன்று திரட்டி பிரச்சனை என்ன, அதற்கு தீர்வு என்ன, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் விவாதித்து, ஒரு சமூகமாக செயல்பட்டு நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி மொத்த நிலப்பரப்பு விபரம், மழை அளவு இவற்றை தெரிந்து கொண்டு தனது பணியை நண்பர்களுடன் துவங்கி மலை சரிவுகள், மேட்டு தரிசு நிலங்கள் இங்கெல்லாம் ஜொஹாட்ஸ (Johads) என்ற சிறு மணற் குன்றுகளை நீரின் ஓட்டத்தை தடுக்க அமைத்திருக்கிறார்.

இது மழை காலத்தில் நீரின் ஓட்டத்தை தடுத்து மண்ணிற்குள் இறக்க பயன்படுவதோடு, வெயில் காலங்களில் நிலத்தடி நீராதாரமாகவும் பயன்படுகிறது. "இந்த அமைப்பு இந்தியாவில் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்ததுதான், ஆனால் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இவைகள் முற்றிலும் பராமரிக்கப்படாமல் அழிந்து போயின" என்கிறார். 

(The design of water johads. Source: Anupma Sharma, National Institute of Hydrology)

2015 STOCKHOLM WATER PRIZE : 1985ல் ஆரம்பித்த இவரது முயற்சியால் இன்றுவரை 2500 க்கும் மேற்பட்ட Johad கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன , இதனால் ஏரிகளில் நீர் பெருகியதுடன், முற்றிலுமாக வறண்டு போன 7 ஆறுகள் பல வருடங்கள் கழித்து -உயிரோட்டம் கண்டிருக்கின்றன. மக்களின் பங்களிப்புடன் அதிக செலவில்லாத, பெரிய தொழில்நுட்ப வசதிகள் எதுவும் தேவைப்படாத எளிய முறையை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். வறண்ட நிலம் இன்று பசுமையாய் காட்சியளிக்கிறது. இன்று பல குடும்பங்கள் விவசாயத்திற்கு திரும்பிஇருக்கின்றன, அதன் பலன், இவர் எதற்க்காக அங்கு சென்றாரோ அந்த கல்வி, மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு  செய்து கொடுத்துள்ளார். 

சர்வதேச அளவில் நீர் துறையில் செயற்கரிய சாதனைகள் புரிவோற்கு 1991 வருடத்திலிருந்து "STOCKHOLM WATER PRIZE" என்ற விருது வழங்கப்படுகிறது, இது நீர் துறையில் வழங்கப்படும் நோபெல் பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசு ஒரு அழகிய சிலை மற்றும் $ 1,50,000 பணமும் உள்ளடக்கியது. 2015 ஆம் ஆண்டிற்க்கான STOCKHOLM WATER PRIZE இவருக்கு கிடைத்திருக்கிறது. தருண் பாரத் சங் (Tarun Bharat Sangh ) என்ற அரசு சாரா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆறுகளை மீட்டெடுக்கும் பணியையும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் செய்து வருகிறார்.  


ஆக மொத்தம் அரசாங்கம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை நம்மைப்போன்ற அடிப்படை மக்களின் தேவைக்கு உபயோகப்படுவதில்லை. நாம்தான் விழித்தெழுந்து நமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித சக்தி அளவிடமுடியாதது!!!!!!!!!!

Saturday, 2 July 2016

தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்

மழை நீர் பொறியாளர் வரதராஜன்: 


தமிழக பொதுப்பணித்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தற்போது முழு நேரமாக மழை நீர் சேகரிப்பு ஆராய்ச்சியிலும், விருப்பமுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி வீடுகளில் மழை நீர் சேகரிப்பு வசதிகள் செய்து தருவதிலும் ஈடுபட்டுள்ளார். திருவாரூரில் வசிக்கும் இவர் மழை நீர் சேகரிப்பு பரிசோதனைகளுக்காக,  தனது வீ ட்டையே பரிசோதனை கூடமாக மாற்றி உள்ளார். மழை நீரை எப்படி சேகரிக்க முடியும், ஏன் சேகரிக்க வேண்டும், எப்படி பாதுகாத்து வைப்பது, என்னென்ன நன்மைகள் என்பது பற்றி விரிவாக கூறுகிறார். 
"பூமியிலிருந்து நீர் எடுப்பதல்ல, பூமிக்கு நீர் கொடுப்பதே எங்கள் நோக்கம்"
உந்து சக்தி: நீரில் கரைந்துள்ள கனிமங்களை (Total Dissolved Solids (TDS)) பொருத்து நீரின் தன்மை அளவிடப்படும், சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடிநீரின் தரம் 120 வது இடத்தில் உள்ளது. அதாவது குடிப்பதற்கு உகந்த நீரில் உள்ள அளவை விட பன்மடங்கு கனிமங்கள் நீரில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. பணியில் இருந்தபோது திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கிணற்று நீரின் TDS தன்மையை ஆராய்வதுதான் இவரது வேலை, அனைத்து இடங்களிலும் நீரில் TDS அளவு வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே இருந்திருக்கிறது. 

இதற்கு தீர்வென்ன என்று தேடியபோது கிடைத்ததுதான் மழைநீர் சேகரிப்பு யோசனை. இவரது முக்கிய நோக்கமே நிலத்தடி நீரை தூய்மையாக்குவதுதான், அதாவது சேகரித்தது போக மீதமுள்ள மழை  நீரை நிலத்திற்கு கொடுப்பது, மழைநீர் சேகரிப்பால் மக்களும் பயனடைவர் நிலத்தடிநீரும் தூய்மையாகும். 8 வருடங்கள் முன் பிடித்த மழை நீரை இன்றும் பயன்படுத்தி வருகிறார். 

மழை நீர் சேகரிப்பால் பூமியை காப்பாற்றும் முயற்சியில் சேவை மனப்பான்மையுடன் 70 வயதிலும் முயற்சிக்கும் இளைஞன். எங்கள் வீட்டிலும் மழை நீரை குடிக்க பயன்படுத்தி வருகிறோம், குடிக்க அருமையாக இருப்பதோடு தாகமும் உடனே அடங்கிவிடுகிறது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.


Malaineer Er. K. Varadarajan,7, G.D. Nagar,Thiruvarur - 610 001

Phone : 04366 222675, Mobile : 9443152675
Email : malaineer@yahoo.co.in
Web : www.malaineer.in

 (http://www.iconhomz.com/rainwater-harvesting-why-you-need-it-and-how-it-is-done/)



Friday, 1 July 2016

தண்ணீர் 1: நீர் மேலாண்மை

" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு " 

விளக்கம் : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

 (https://www.tripadvisor.in/LocationPhotoDirectLink-g297679-d2422622-i188836246-Pykara_Lake-Ooty_Tamil_Nadu.html)

நீரின் முக்கயத்துவதை உணர்த்த குறளின் முதல் மூன்று சொற்களே போதும், அந்த அளவிற்கு நீர் நமது உடலின் ஒரு அங்கம், காற்றிற்கு அடுத்து இன்றியமையாதது நீர். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான, சுகாதாரமான  நீர் அவசியம். இன்றைய காலகட்டத்தில், அதாவது நம்மாழ்வார் கூறுவதை போல பனி நீரையும் சேமிக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம், நீர் மேலாண்மை  என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்று, நமக்கு தேவையான அளவு மழை கிடைக்கிறது ஆனால் பரவலாக கிடைக்க வேண்டிய மழை குறிப்பிட்ட சிறு கால இடைவெளியில் கிடைத்துவிடுகிறது அதை  சேமித்து, முறையாக பயன்படுத்துவதில் போதிய விழிப்புணர்வு, தொழில்நுட்பம் இல்லாததே இங்கு பிரச்சனை.

தொழில்நுட்பம் என்பது நமது தேவைகளை பொறுத்தது; அதை சொல்லிக்கொடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள்தான் வர வேண்டும் என்று இல்லை. அன்றாடம் நம்மை சுற்றி நடக்கும் இயற்க்கை விஷயங்களை கூர்ந்து நோக்கினாலே போதும். அனைத்து விஷயங்களும் சிறு யோசனையில் இருந்துதான் பிறக்கிறது. நம்மை சுற்றி வாழ்பவர்களில் பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும், அவற்றை ஒருங்கினைத்து பயன்படுத்தி நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை.
 
அந்த வகையில் நீர் மேலாண்மையில் நான் படித்த சில செய்திகளை, வியந்த சில மனிதர்களை, சில நுட்பங்களை பகிர்ந்து கொள்வதே இந்த "தண்ணீர்" தொடர்பதிவின் நோக்கம்.

குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழை நீரை குடிநீராக மாற்றுவது எப்படி???

தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 3: ராஜஸ்தானின் தண்ணீர் மனிதன்
தண்ணீர் 4: பீஹாரின் பசுமைப் பெண் (The Green Lady of Bihar)
தண்ணீர் 5: ஒரு ரூபாய் மனிதர்
தண்ணீர் 6: மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2
தண்ணீர் 8: மழை இல்லம்
தண்ணீர் 9: நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...