Labels

Showing posts with label Environment. Show all posts
Showing posts with label Environment. Show all posts

Monday, 22 March 2021

செடிகள் கேட்கும்!!!

 அன்பாக பேசினால் செடி கேட்கும்! செடிகளை வீட்டில் வளர்ப்பது எப்படி என, விலாவாரியாக சொல்லித் தருகிறார், சென்னையை சேர்ந்த சுமித்ரா ஸ்ரீகாந்த்:

உங்கள் வீட்டு பால்கனியில் கூட, அழகான தோட்டம் அமைக்கலாம். செடிகளுக்கு வெயில் முக்கியம்.

பூச்செடிகளுக்கு, நல்ல வெயில் அவசியம். 

சுமாரான வெயில் தான் வீட்டிற்குள் வரும் என்றால், கிழங்கு வகைகள் வைக்கலாம்.

 மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகள், மொட்டை மாடியில் அமர்க்களமாக வரும்.

 வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை சுலபமாக வளரக் கூடியவை. 

காலிபிளவரிலிருந்து, ஸ்ட்ராபெர்ரி, கோஸ் வரை, எல்லாமே மொட்டை மாடியில் பயிரிடலாம்.

வெயில் காலத்தில் மண்ணில் அதிக சூடு இருக்கும். விடும் தண்ணீர் சீக்கிரம் வற்றாமல் இருக்க, மண்ணின் மேல் காய்ந்த இலைகள் அல்லது அட்டைப் பெட்டித் துண்டுகளை போடலாம்.

செடி வளர்ப்பும், பிள்ளைகள் வளர்ப்பு போல, மிகவும் கவனமாக செய்ய வேண்டியது.

 சும்மா, தினமும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு, சரியா வளரலேன்னு புலம்பக் கூடாது. மாறாக, அக்கறை, அன்பு, ஊட்டம் என்று, எல்லாம் தரணும். செடிகளை ஒவ்வொண்ணாக கவனித்து, வளர்ச்சியில் பாதிப்பு இருக்கா, ஏன் பூத்துக் காய்க்க வில்லை என்பதை கவனிக்கணும். 


15 நாட்களுக்கு ஒரு தடவை உரம் போடணும்.பஞ்சகவ்யம் போன்ற, இயற்கை உரங்கள் கிடைக்கிறது. உரம் ஈரமாக இல்லாமல், நன்றாகக் காய்ந்திருக்கணும்.

தோட்டக்காரரையோ, ஆட்களையோ வைத்து, இவற்றை செய்தாலும், சொந்தக்காரர்கள், செடிகளை கூர்ந்து கவனித்து, அதோடு பேசி, ரசித்து வளர்ப்பதை, செடிகள் புரிந்து கொள்ளும். 

நான், பார்த்துப் பார்த்து கவனித்த எலுமிச்சைச் செடி, காய்க்காமல் படுத்தியபோது, கொஞ்சம் கோபமாகவே அதனுடன் பேசினேன். அதன் பிறகு காய்த்துக் குலுங்கியதை, பலரும் நம்ப மாட்டார்கள்.

உடல் பிரச்னை என்றால், நாம் மருந்து சாப்பிடுவது போல, செடிகளுக்கும் கொடுக்க வேண்டும். ரசாயன மருந்துகள் போட்டால், பூச்சிகள் இறக்கும். ஆனால், ரசாயனம் நமக்கு நல்லதல்ல. எனவே, வேப்பெண்ணெய், தண்ணீர் கலந்து தெளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நோய்களுக்கு நாம், 'ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள், ஐந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்வது போல, செடிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் கொடுத்துவிட்டு, பூச்சிகள் போகவில்லையே என, கேட்கக் கூடாது.

 செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது குறித்து, சமூக வலைதளங்களில் ஆலோசனை கேட்பதுடன், அனுபவஸ்தர்கள் துணையுடன், அழகாக செடிகளை வளர்க்கலாம். நிறைய குழந்தைகளைப் பெற்று, வளர்க்க முடியாமல் தவிப்பது போல, பெரிதாகத் தோட்டத்தைத் தொடங்கிவிட்டு, திண்டாடுவதை விட, சின்னதாகத் தொடங்கி நடத்துவது சிறந்தது!

Related sites

Sustainable Living with expert Ms. Sumithra Srikant

Zero-waste, a new component in event planning

Ecokonnectors

Saturday, 30 January 2021

தேடல்கள் ஓய்வது இல்லை: அரிய மரங்களின் காவலன் ராஜி

 அரிய வகை மரங்களை தேடிப் பிடித்து, சொந்தமாக ஒரு காட்டை உருவாக்கி வரும் இளைஞரின் தேடல், முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. அந்த காட்டில், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜி; பட்டதாரி.இவர், பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது தீவிர பற்று உடையவர். அவற்றுக்கான வாழிடமாக, தங்களுக்கு சொந்தமான மாந்தோப்பை, வனமாக உருமாற்றி வருகிறார்.அரிய வகை மரங்களை தேடிப் பிடித்து, அதன் கன்றுகளை தன் மாந்தோப்பில் வளர்த்து வருகிறார். குற்றாலம் பகுதியில் மட்டுமே விளையும், 'ஸ்டார் புரூட்' மரக்கன்று, இவர் நிலத்தில், தற்போது காய் காய்த்துள்ளது.வாட்டர் ஆப்பிள், வேங்கை மரம், சரக்கொன்றை, வில்வம், அல்லி மற்றும் தாமரை, மின்ட் சுவை துளசி, இனிப்பு சுவை துளசி, குமிழ் தேக்கு, லெமன் கிராஸ், நன்னாரி, வெட்டிவேர் என, ஏராளமான மூலிகை செடிகளும், மரக்கன்றுகளும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.இவற்றில் பெரும்பாலானவை, தற்போது காய் காய்த்து வருகின்றன.இந்த காட்டில், பறவைகளையும், கால்நடைகளையும் வளர்க்கிறார்.

வான்கோழி, கின்னி கோழி, நாட்டுக்கோழி, வாத்து, காதல் பறவைகள், காக்டெயில், பேன்சி ரக கோழிகள், பேன்சி ரக புறாக்கள், சிப்பிப்பாறை நாய் என, ஒரு பட்டாளம் இவரின் காட்டில் சுதந்திரமாக உலா வருகின்றன.இவை தவிர, அழையா விருந்தாளிகளாக, பாம்புகள், மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்டவையும் அருகில் உள்ள காட்டில் இருந்து, இவரது தோப்பிற்கு அவ்வப்போது வந்து செல்லும். தான் உருவாக்கிய காட்டில், ஒரு பூங்காவையும் இவர் வடிவமைத்துஉள்ளார்.அதில் உள்ள செயற்கை குளத்தில், பல வண்ண அல்லி மலர்கள் மிதக்கின்றன.இந்த அல்லி குளத்தில், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க, வண்ண மீன்கள் விடப்பட்டுள்ளன. மரத்தடியில், மான் சிலையாக ஓய்வெடுக்கிறது. வெளிநாட்டு இன புற்களை, இங்கு வளர்க்கிறார்.


பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்


ஊருக்கு பொதுவான பகுதிகளில், மரக்கன்றுகள் நடவு செய்யவும், ஒரு நாற்றாங்கால் அமைத்து மரக்கன்றுகளையும் வளர்த்து வருகிறார். நண்பர்கள் குழு மூலமாக அவற்றை, பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரையில் நடவு செய்து வருகிறார். வெளியூர்களுக்கு செல்லும் போதெல்லாம், அந்த பகுதியில் கிடைக்கும் மரக்கன்றுகள் மற்றும் விதைகளை சேகரித்து வருகிறார்.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பிறந்த நாளையொட்டி, தோப்பில் அவர்கள் சார்பாக, புதிய மரக்கன்றுகள் நடும் வழக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.

மரங்களுக்கு வில்லன் மான்!

மரங்கள் வளர்வது மானுக்கு பிடிக்காது; மரங்கள் வளர்ந்தால், அதனடியில் புற்கள் முளைக்காது. மான்களுக்கு தேவையான புல்வெளிக்கு மரங்கள் தடையாக இருப்பதால், மான்கள், மரங்களை அழிக்க முற்படும். இளம் செடிகளாக இருக்கும் மரங்களை, தன் கொம்புகளால் உரசி அவற்றை சேதப்படுத்தும்.மரத்தின் பட்டைகளை அழித்தால், அந்த மரம் பட்டுப்போகும். அருகில் உள்ள காட்டில் இருந்து இரவு நேரத்தில் எங்கள் தோப்புக்கு, மான்கள் வந்து செல்கின்றன.நான் வளர்க்கும் மரங்களையும் அவை சேதப்படுத்துகின்றன. இயற்கையின் படைப்பில் இது நியாயம் என்பதால், நான் வருந்துவது இல்லை. மான்கள், மரங்களை அழித்தாலும், மரங்களை வளர்ப்பதில் என் முயற்சி ஓயாது; மான்களின் மீதான அக்கறையும் குறையாது.

--தினமலர் நாளிதழிலிருந்து.

Tuesday, 28 April 2020

காய்கறி இலவசம்!!!!!!

கிராமத்தில் புறம்போக்காக கிடந்த நிலத்தில், காய்கறி பயிரிட்டு, விளைச்சலை கிராம மக்களுக்கே இலவசமாக வழங்கி வரும், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வ.வேப்பங்குடி கிராமத்து இளைஞர், அமெரிக்காவில் வேலை பார்க்கும், நரேந்திரன் கந்தசாமி: கரூர் மாவட்டம், எப்போதுமே வறட்சியானது. அதிலும், எங்கள் ஊர், கடும் வறட்சி உடையது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பின்தங்கிய கிராமம். கடந்த, 2010-ல், ஆஸ்திரேலியா நாட்டில், கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை கிடைத்தது. தொடர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றேன்.சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கைச் சூழலை பார்த்து தான், 'நம்ம ஊரையும் இப்படி மாற்ற வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

அதையடுத்து, கடந்த, 2017ல், பூவரசு, ஆலம், அரசு, வாகை, வாதாம், வாதநாராயண மரம், வேம்பு என, பல வகை மரங்களை, 10 அடி வளர்த்து, ஊர் முழுக்க நட்டோம். பொது இடங்களில், 500-க்கும் மேற்பட்ட மா, பலா, வாழை, கொய்யா மரக்கன்றுகளை வளர்த்தோம். போன வருஷம், இயற்கை காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். எங்கள் ஊர் மண்ணில் எதுவும் விளையாது; மண்ணை மாற்றிய பின், காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றனர். ஆனால், நாங்க அப்படிச் செய்யவில்லை. ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, மண்ணை மாற்றினோம்.அந்த தோட்டத்துக்கு, 'சமுதாய காய்கறித் தோட்டம்' என, பெயர் வைத்தோம்.

கத்திரி, பீர்க்கங்காய், வெண்டை, துவரை, தக்காளி, மிளகாய், முருங்கை, அவரை, வெண் பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், தண்டுக்கீரை, செங்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கேரட், பீட்ருட் என, எல்லா காய்கறி, கீரைகளும் காய்ப்புக்கு வந்து விட்டன.இப்போது, ஊர் மக்களே, தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது என, எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

வாரம் இரண்டு தடவை, கிராமத்து இளைஞர்கள் வேல்முருகன், காளிமுத்து போன்றோர், எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை கொடுப்பர். காய்கறி தேவைப்படுவோர், தேவையான காய்கறிகளை, தாங்களாக வந்து பறித்து செல்வர். இப்படி, இதுவரை, 3,000 கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். இதை பார்த்து, வெளியூர் மக்கள் சிலர், அவர்களின் ஊர்களிலும், இலவச, இயற்கை தோட்டத்தை போடத் துவங்கி விட்டனர்.

கொரோனா வைரஸ், உலகத்தையே உலுக்கிய போது, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஆனால், எங்கள் ஊர் மக்கள், எந்தக் கவலையும் இல்லாமல், சமுதாய காய்கறி தோட்டத்தில், காய்கறிகளைப் பறித்து, சமைத்து சாப்பிட்டு, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர்!

--தினமலர் நாளிதழிலிருந்து



Sunday, 10 November 2019

1.5 ஏக்கரில் 1,100 மரங்கள்....

வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், தெக்குப்பட்டு கிராமத்தில், 1.5 ஏக்கரில், அடர்ந்த வனத்தை உருவாக்கியுள்ள, ஞானசூரிய பகவான்: கோவை பல்கலைக் கழகத்தில், பி.எஸ்சி., விவசாயம் படித்து, தமிழக அரசில், வேளாண்மைத் துறை அதிகாரியாக பணியாற்றினேன். அந்தப் பணியை ராஜினாமா செய்து, சென்னை வானொலி நிலையத்தில், விவசாயிகளுக்கான, 'வீடும் வயலும்' நிகழ்ச்சியில், 'சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்' என்ற பெயரில் பேசி வந்தேன்.

மரங்கள் மீது கொண்ட காதலால், அவற்றை வளர்க்கத் துவங்கினேன். சொந்த கிராமத்தில், 1.41 ஏக்கர் நிலத்தில், மரங்களை நெருக்கமாக வளர்த்து, மரக்காடு உருவாக்கியுள்ளேன்; இங்கு, 1,100 மரங்கள் உள்ளன. அதன் நடுவே வீடு கட்டி, மனைவியுடன் வசிக்கிறேன். வீட்டின் மாடியிலிருந்து விழும் மழை நீரை, மூன்று தொட்டிகளில், 70 ஆயிரம் லிட்டர் சேகரித்து, மரங்களுக்கு பயன்படுத்துகிறேன். சின்ன இடத்தில் நெருக்கமாக வளர்க்கப்படும் மரங்கள், வேகமாக வளர்கின்றன. காட்டில் வளரும் மரங்களுக்கு இடையே, இடைவெளி கிடையாது; மரம், செடி, கொடி என அடர்ந்து வளரும். இந்த வகை காடுகளை, 'மியாவாக்கி' காடுகள் என்பர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, அக்கிராமியாவாக்கி என்ற தாவரவியலாளர் தான், இந்த அடர்ந்த வனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.

என் மரக்காட்டில், பாரிஜாதம், சிங்கப்பூர் செர்ரி, செம்மரம் போன்ற, 100 மரங்கள் உள்ளன. மரங்கள் நமக்கு தாய் போன்றவை. அவற்றில் நல்ல மரம், கெட்ட மரம் என எதுவும் இல்லை; எல்லா மரங்களுமே மண்ணுக்கு தேவை. நம் நாட்டில், 1947க்கு முன், 47 சதவீதமாக இருந்த வனம், 24 சதவீதமாக சுருங்கியுள்ளது. தமிழகத்தில், 17 சதவீதம் மட்டுமே வனங்கள் உள்ளன. நான் மட்டும் காடு வளர்த்தால் போதாது என்றெண்ணி, விரும்பும் மாணவர்களுக்கு, காடு வளர்ப்பு மற்றும் வேளாண்மை பயிற்சி அளிக்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் பலர், பயிற்சிக்கு வருகின்றனர். நவீன வேளாண்மை குறித்து, எளிமையாக கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், விவசாயத் தொழில்நுட்பத்தை, நாடு முழுவதும் பின்பற்றி வருகின்றனர்.

இயற்கை வளப் பாதுகாப்புப் பணிகளை, 'பூமி' என்ற அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறேன். மழை வளமும், நீர் வளமும், ஆரோக்கியமான காற்றின் வளமும் தான், மனிதர்களை வாழ வைக்கும். வெறும் சந்ததியினரால் மட்டும், வாழ வைத்து விட முடியாது. அதனால், மனிதர்களுடன் மரங்களையும் வளர்க்க வேண்டும். 'ஏசி'யையும், மின் விசிறியையும் பயன்படுத்துவது, கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிந்து கொள்ளும் கதை தான்!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

Sunday, 12 August 2018

குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்தும் வழிமுறைகள்:

மழை காலத்தில் குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்த வழி கூறும், இயற்கை நல மருத்துவர், ஒய்.தீபா, ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன், எக்ஸ்னோரா நிர்மல்: இன்றைய, 'வாட்டர் பியூரி பையர்'களும், 'மினரல் வாட்டர் கேன்' களின் ஆட்சியும் இல்லாத போது, நம் முன்னோர் சில இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தினர்.

தேத்தாங்கொட்டை:
சமையலுக்கு உபயோகிக்க கூடிய தண்ணீரிலோ அல்லது குடிக்கும் தண்ணீரிலோ, தேற்றன் கொட்டையைப் பொடியாக்கிப் போட்டால், தண்ணீரில் இருக்க கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைக்கும். மேல் உள்ள தண்ணீரைக் குடிப்பதால், கண் மற்றும் தோல் நோய், வயிற்றுப்போக்கு, பசியின்மை, சிறுநீரகக் கல் உள்ளிட்டவை குணமாகும். கேன் வாட்டரிலும் தேற்றன் கொட்டையை போட்டு பயன்படுத்தலாம். நீர்த் தேக்க தொட்டியிலும் கூட, உடைத்த தேற்றன் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்து போடலாம்.

முருங்கை இலை மற்றும் விதை:
அதேபோல், முருங்கை விதை மற்றும் இலையைப் பொடித்து, மெல்லிய துணியில் கட்டி, சம்ப் மற்றும் நீர் தேக்க தொட்டியில் போட்டு, அரை மணி நேரம் கழித்து எடுத்து விடலாம். வீட்டு உபயோகத்துக்கான பானைகளிலும் போடலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஓரிரண்டு முருங்கை விதை மற்றும் ஒரு கைப்பிடி அளவு இலை சேர்த்து, 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிக் குடிக்கலாம். முருங்கை சிறந்த கிருமிநாசினியாக செயல்படும்.

மிளகு:
ஒரு பாத்திரத்தில், ஐந்து மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து, இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் வடிகட்டி குடிப்பது நல்லது. மிளகு, தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை உறிஞ்சிக் கொள்ளும். அரை லி., தண்ணீருக்கு, 5 - 6 மிளகு போடலாம். தவிர, ஒரு நாள் இரவு ஊறிய தண்ணீரை, மறுநாளே பயன்படுத்தி விடுவது நல்லது.

காந்தம்:
ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, 15 - 30 நிமிடம் வரை, அதனுள் காந்தத்தை போட்டு வைத்தால், காந்த சக்தி கிடைக்கும். இதுதவிர, நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தையும் தரும். பொதுவாகவே தண்ணீர் தோன்றும் பகுதி, அது கடந்து வரும் பாதையைப் பொறுத்து, அதன் தன்மை, சத்து மாறுபடும். இந்த காந்த முறையைப் பயன்படுத்தும் போது, அது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறு, மினரல்சை அதிகப்படுத்தும். அதனால், நம் உடலில் உள்ள உணவுக் கழிவு மற்றும் வளர்சிதைக் கழிவுகள் அனைத்தும் சேர்ந்த, வெளியேற்றப்பட வேண்டிய நச்சான, 'பிரி ரேடிக்கல்ஸ்' வெளியேறும் தன்மையையும் அதிகரிக்கும்.

இவை நம் உடலில் தங்கியிருந்தால், ஒவ்வொரு செல்லுக்கும் சேர வேண்டிய ஆக்சிஜனின் அளவை குறைத்து, செல்லை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது, நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால், காந்த முறையில், ஹைட்ரஜன் அதிகமான தண்ணீரைக் குடிக்கும் போது, இவை அனைத்தையும் சரிசெய்யும்.பயணம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
-- தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய வலைதளங்கள் .
தேத்தான் கொட்டை
உடலுக்கு பலம் தரும் தேத்தான் கொட்டை
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
தேத்தாங்கொட்டை
தேற்றா மரக் கொட்டையின் மருத்துவப் பயன்கள்
கிழக்கில் விரியும் கிளைகள்: நீருக்குச் சுவை தரும் தேத்தாங்கொட்டை
கலங்கிய நீரையும் தெளிவாக்கும் தேற்றா மரக் கொட்டை
மெலிந்தவனையும் வலியவனாக்கும் `தேற்றான்கொட்டை’ என்கிற மகா மருந்து!


Monday, 6 August 2018

உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....

மாடித் தோட்டத்தை பராமரித்து வரும், 75 வயதான, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்: மெட்ரோ வாட்டர் போர்டில், இன்ஜினியராக இருந்த நான், 25 ஆண்டு பணி முடித்து, விருப்ப ஓய்வு பெற்று, சொந்த தொழில் ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன், அதையும் மூடி, இப்போது ஓய்வில் இருக்கிறேன். சொந்த தொழில் நடத்திய சமயத்திலேயே, மாடித் தோட்டம் ஆரம்பித்து விட்டேன்.


செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் வாளி, பைகளை தான் பயன்படுத்துகிறேன். வாளி, பையின் பக்கவாட்டில், சிறு துளை போட்டு, மணல், செம்மண், தேங்காய் நார், மாட்டு எரு, மண்புழு உரம் நிரப்பி, விதைப்பேன். வீணாகும் காய்கறிகள், மட்கின இலை தழைகளை, செடிகள் இருக்கும் தொட்டிகளில் போடுவேன். தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவேன்.

பருப்புக்கீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், துாதுவளை, புளிச்சகீரை, புதினா, தக்காளி, கத்திரி, குடை மிளகாய், பிரண்டை, காராமணி, துளசி, திருநீற்றுப் பச்சிலை, சோற்றுக் கற்றாழை, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, வாழை, கீழாநெல்லி, இன்சுலின் செடி, வெற்றிலை என, பல செடிகள் உள்ளன. மல்லிகை கொடி கீழிருந்து, மூன்றாவது மாடி வரை படர்ந்து உள்ளது. 

ஒரு வாளியில், ஒரு வகை விதையை மட்டும் தான் விதைப்பேன். செடிகளில் ஊட்டம் குறையும் போது, 20 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து விடுவேன்.பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, அவ்வப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன். 20 நாட்களுக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி, இ.எம்., கரைசல் கலந்து தெளிப்பேன். வெயில் காலத்தில் செடி வாடாமல் இருக்க, நிழல் வலை அமைத்துஉள்ளேன்.

இயற்கையில் விளையும் காய்கறிகள், நல்ல சுவையுடன் உள்ளன. அன்றன்றே பறித்து, புத்துணர்ச்சியுடன் ஒரு கீரையை உணவில் சேர்க்க முடிகிறது. பக்கத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, தினமும் வீட்டில் இருந்து பூ பறித்து எடுத்து போவேன். வாளி, பைகளை பலகை மேல் வைத்துள்ளதால், தரைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என் மாடித் தோட்ட ஆர்வத்தை பார்த்து, 'ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்' அமைப்பினர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்து உள்ளனர்.

தினமும் தோட்டத்தில் வேலை செய்வது, உடற்பயிற்சியாக இருப்பதுடன், நமக்கு தேவையானதை, நாமே உற்பத்தி செய்வதும், மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதிலும் உடம்பும், மனதும் எப்போதும் தெம்பாக இருப்பதற்கு காரணம், இந்த செடிகள் தான். தொடர்புக்கு 94449 26128
--தினமலர் நாளிதழிலிருந்து

Sunday, 22 July 2018

திருமண நிகழ்வில் நெகிழியும், கழிவும் இல்லையா? அடடே.....

'நோ பிளாஸ்டிக்; நோ வேஸ்டேஜ்' என்ற கோட்பாடுடன், மகள் சம்யுக்தா திருமண அனுபவம் பற்றி கூறும், ஜெயஸ்ரீ:

துணிப்பை மற்றும் காகித உரை:
திருமணம் என்றால் ஷாப்பிங், சாப்பாடு, அலங்காரம், தாம்பூலம் என, நான்கு விஷயங்களில் தான், பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்துகிறோம்.எனவே, திருமண ஷாப்பிங் எதுவானாலும், அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு தரவேண்டாம் என, கடையில் சொல்லி விட்டோம். வாங்கிய துணிமணிகளைப் பழுப்பு நிற காகித கவரில் போட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தோம். தேவையான போது, துணிப் பைகளைப் பயன்படுத்தினோம்.

கரும்பு சக்கை கிண்ணம் மற்றும் எவர்சில்வர் டம்ளர்:
திருமண கேட்டரிங் கான்ட்ராக்டரை ஒப்பந்தம் செய்யும் போதே, பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது என்ற, எங்கள் தீர்மானத்தை விளக்கியதும், அவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு திருமணத்திலும், ஆயிரக்கணக்கில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில், சாப்பாட்டுக்கு தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, சுத்தமான எவர்சில்வர் டம்ளர்கள் தான் என, முடிவெடுத்தோம்.அடுத்து, ஐஸ்கிரீம் தர தெர்மோகோல் தட்டு, பேப்பர் கப்களுக்கு பதிலாக, மறு சுழற்சி செய்யக்கூடிய, கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கிண்ணங்களை பயன்படுத்தினோம்.

இயற்கையான மலர்கள் மற்றும் பனை ஓலை விசிறி:
பத்தமடையிலிருந்து, பாய் கோரையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட டப்பாக்களில், திருமண சீர் பட்சணங்களைப் போட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தோம். திருமண மேடை, அரங்க டெகரேஷனுக்கு இயற்கையான மலர்கள், நிஜப் பூந்தொட்டிகளையே வைத்தோம்.
மணமேடை பின்புலமாக, பாரம்பரிய பனை ஓலை விசிறிகளையே, புதுமையான டிசைனில் பயன்படுத்தினோம். மறுநாள் முகூர்த்தத்தின்போது, அந்த விசிறிகளை, வந்திருந்தவர்களுக்கு வினியோகித்து விட்டோம். தாம்பூலத்திற்கு துணிப்பை, மஞ்சள், குங்குமத்தை காகிதத்தில் மடித்து வைத்தோம். 'பேக்' செய்த பாக்குத் துாளுக்குப் பதிலாக, பாரம்பரியக் கொட்டைப் பாக்கு தான்.

மாநகராட்சியின் ஒத்துழைப்பு:
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திருமணத்தின்போது எதுவுமே வீண் என்று குப்பைக்குப் போகக் கூடாது என நினைத்தோம். எனவே, சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்பை நாடினோம். சாப்பாட்டு கூடத்தில், இலைகளை எடுக்கும் போதே, மேஜையில் விரித்த காகிதம், கரும்புச் சக்கை கப்கள் என, மறு சுழற்சிக்கானவற்றை தனியாகப் பிரித்து விட்டோம். சமையல் கூடத்தில், காய்கறி நறுக்கிய கழிவுகளைத் தனியே சேகரித்து வைத்தோம்.
அலங்காரத்துக்குப் பயன்படுத்திய பூக்கள், சாப்பிட்ட இலைகளை கூட வீணாக்காமல், மாநகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்துக்கும், சாண எரிவாயு தயாரிப்பு மையத்துக்கும் அனுப்பி விட்டோம்.

மன திருப்தி:
இவற்றை சேகரிப்பதற்குக் கூட, வழக்கமான பெரிய கறுப்பு நிற பைகளை பயன்படுத்தாமல், டிரம்களைப் பயன்படுத்தினோம். இதனால், எங்களுக்கு கூடுதலான செலவு ஆகவில்லை. பலருடைய பாராட்டு கிடைத்ததுடன், எங்களுக்கு மன திருப்தியும் ஏற்பட்டது.தொடர்புக்கு: 98410 18301.
--தினமலர் நாளிதழிலிருந்து .

ஜெயஸ்ரீ  அவர்களுக்கு பணிவான வணக்கங்கள், நல்ல முன்மாதிரியான ஒரு திருமணத்தை முடித்துள்ளமைக்கு. நல்ல சமயத்தில் கிடைத்த நல்ல தகவல்.

Sunday, 29 April 2018

'மழைத்துளி' வாட்ஸ் ஆப் குழுவின் வீடு தேடி வரும் மரக்கன்று!

வீடு தேடி வரும் மரக்கன்று!மதுரையில், 'மழைத்துளி' என்ற பெயரில் இயங்கி வரும், 'வாட்ஸ் ஆப்' குழுவின் ஒருங் கிணைப் பாளர், மதன் குமார்: மதுரை மாவட்டம், வெள்ளளூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறேன். 'பேஸ்புக்' மூலம் இணைந்த மதுரை நண்பர்கள் நாங்கள். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என, பேசிய போது தான், மழை வளத்தை பெருக்க அடிப்படையாக இருக்கும் மரங்களை அதிக அளவில் வளர்க்கலாம் என, முடிவு செய்தோம். அதற்காக, 'மழைத்துளி' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழுவை ஆரம்பித்தோம்.


ஆரம்பிக்கும்போது, நான்கு பேர் தான் உறுப்பினர்கள். தற்போது, 15 பேர் இணைந்துள்ளனர். இதில், 10 பேர் மதுரையில் வசிக்கின்றனர்; மீதி ஐந்து பேர், வெளியூர்க்காரர்கள். இவர்கள் வெளியிலிருந்து குழுவின் பணிகளுக்கு ஆதரவு தருகின்றனர். குழு ஆரம்பித்த பின், வில்லாபுரம் பகுதியில் மரங்கள் இல்லாத தெருக்களில், ஒவ்வொரு வீடாகப் போய், 'உங்க வீட்டு முன் மரக்கன்று நட்டு வைத்தால் வளர்ப்பீங்களா' எனக் கேட்டு, 'சர்வே' எடுத்தோம்.அவர்களில் சிலர் சம்மதிக்கவும், முதல் கட்டமாக, எட்டு மரக்கன்றுகளை நட்டு, கம்பிக் கூண்டு அமைத்து கொடுத்தோம். அப்புறம் இதே விஷயத்தை, மற்ற, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் மூலமாகவும் பரப்பினோம்.


மதுரை மாவட்டத்தில் இதுவரை, 752 பேர், தங்களின் முகவரியைப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை, 132 வீடுகளில் மரக்கன்று நட்டு வைத்துள்ளோம். கொஞ்சம் கொஞ்சமாக, பதிவு செய்துள்ளவரின் வீடுகளிலும் மரக்கன்றுகளை நட்டு விடுவோம். மதுரை மாவட்ட வனத்துறை மூலமாக விற்பனை செய்யும், வேம்பு, புங்கன் மரக்கன்றுகளைத் தான் நடவு செய்கிறோம். ஒரு கன்று, கூண்டுக்காக, 150 ரூபாய் செலவாகிறது. இதை எங்கள், 'வாட்ஸ் ஆப் குரூப்' உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வோம். மரக்கன்றுகள் நட்ட உடனே, சம்பந்தப்பட்ட வீட்டு மொபைல் எண்ணை, 'மழைத்துளி மரக்கன்றுகள் நிலவரம்' எனும், 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் சேர்த்து விடுவோம். கன்றுகளின் வளர்ச்சியை அவர்கள், 'அப்டேட்' செய்வர். நாங்களும், 15 நாட்களுக்கு ஒருமுறை நேரிலும் சென்று பார்ப்போம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு, முன்னுரிமையின் அடிப்படையில், மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.

குழு உறுப்பினர் தீபா: ஞாயிற்றுக்கிழமை தான், மரம் நடும் வேலையை செய்கிறோம். வெள்ளிக் கிழமையே அதற்கான முன்னேற்பாடுகளுக்கு திட்டமிட்டு, சனிக்கிழமையன்று, மரக்கன்று, கூண்டுகளை வாங்கி வைத்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு குழி எடுக்கும் வேலையை ஆரம்பிப்போம். தோட்ட வேலை செய்யும் தாத்தா ஒருவரை வைத்துள்ளோம். அவர் தான், குழி எடுத்து, தொழு உரத்தை போட்டுக் கொடுப்பார். சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் அல்லது அவர்களது வீட்டுக் குழந்தைகளை நடச் சொல்கிறோம், அப்போது தான், 'நான் வெச்ச மரம்' என்று பராமரிக்கும் ஆசை வரும். தொடர்புக்கு: 86089 05957.

--தினமலர் நாளிதழிலிருந்து
--வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினால் மரக் கன்று வீடு தேடி வரும்!!


 


Wednesday, 28 March 2018

வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி...


தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த நுாற்றுக்கணக்கான மரங்களால் இன்று ரசும் மக்களும் பயன் அடைந்துவருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து 46 கிலோமீட்டர் பயணம் செய்தால் காங்கேயம் வரும், காங்கேயத்தில் இருந்து பழனி போகும் பாதையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில். இங்கு சென்றால் அவசியம் தரிசிக்கவேண்டியவர்கள் இரண்டு பேர் ஒன்று முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன் இரண்டாவது பாக்கியலட்சுமி என்ற 90 வயது பாட்டி.

  
ஏழு வயதில் திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த இவருக்கு உலகமே இந்த வட்டமலைதான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார்.கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது, யாரிடமும் போய் கேட்கமாட்டார் , தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால் மறுக்கமாட்டார். இந்த நிலையில்தான் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் கோவில் பக்கத்தில் உள்ள ஒடையில் இருந்து தண்ணீர் எடுத்துவரும் போது கூடவே ஒரு செடியும் குடத்துடன் வர அதை அந்த கரையிலேயே நட்டுவிட்டுவந்தார். சில நாட்கள் கழித்து ஒடைப்பக்கம் வந்த போது,' ..பாக்யா என்னைப்பாரேன்' என்பது போல அந்த செடி செழித்து வளர்ந்து அழைத்தது. அதுவரை சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியாவிற்கு அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தடவிக்கொடுத்தார், சிறிது நேரம் கண்ணீர் விட்டார் பின்னர் தொடர்ந்து தண்ணீர் விட்டார்.

அந்த செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி தர அதைப்போலவே இன்னும் பல செடிகளை விதைகளை கொண்டுவந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார். எப்படி வளர்க்கணும் எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும் எப்படி உரம் போடணும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவு ஏன் நட்டுவைத்த செடிகூட என்ன செடி என்று தெரியாது, கிடைச்ச இடத்தில் செடியை நடணும் விடாம தண்ணீர் ஊற்றணும் இது மட்டுமே தெரிந்திருந்து, பாட்டியின் அன்பும் அந்த செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு செடியும் வேப்பமரம், இலுப்பைமரம், புளியமரமாக நன்கு வளர்ந்தது. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நுாற்றுக்கும் அதிகமான மரங்கள் வனப்புடன் வளர்ந்துள்ளது. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கி வைத்துள்ள இந்த மரங்களின் நிழலில்தான் இப்போது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இளைப்பாறி களைப்பு நீங்க பெறுகிறார்கள்.

புளியமரத்தில் இருந்து விழும் புளியங்காயை பொறுக்கியெடுப்பதன் மூலம் சொற்ப வருமானம் கிடைத்து வந்தது பின்னர் அரசாங்கம் அந்த மரத்திற்கு எல்லாம் எண் போட்டு அரசுக்கு சொந்தமாக்கிவிட்டதால் இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல எந்த மரத்தின் பலனும் பாட்டிக்கு கிடையாது.
ஆனால் அதைப்பற்றி இவருக்கு சிறிதும் கவலை இல்லை எம் பிள்ளை(மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான், இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்ரான் சந்தோஷம்தான் என்கிறார் சிரிப்பு குறையாமல். பிள்ளை என்றதும் நினைவு வருகிறது குடும்பம் சொந்த பந்தம் என்று கேட்டபோது எல்லாமே இதுங்கதான் என்று கைகாட்டுகிறார், அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள் இவர் சொல்வதை ஆமோதிப்பது போல இலை கிளை அசைக்கின்றன.

தற்போது கோவில் நிர்வாகம் சாமான்கள் போட்டுவைக்கும் அறையில் சாமான்களோடு சாமான்களாக வாழ்ந்துவரும் இவர் மரங்களின் மீது கொண்ட பாசம் காரணமாக அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய நேசம் காரணம் வட்டமலையைத்தாண்டி எங்கும் போனதில்லை இனி போகப்போவதும் இல்லை. பொதுப்பார்வையில் இவர் ஒரு அப்பாவி பாட்டியாக தென்படலாம், ஆனால் உண்மையில் மரங்கள் வளர்ப்பு என்பதற்கான நாட்டின் உயர்ந்த விருதை எல்லாம் கொடுத்து இனியும் கையேந்தவிடாமல் கவுரமாக வாழ வழிசெய்யவேண்டும், அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்.

போயிட்டு வர்ரேன் தாயி என்று மரங்களை பெற்ற அந்த மாதரசி மகராசியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வரும்போது திரும்பி பார்க்கிறேன், வட்டமலையைவிட வட்டமலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தைவிட உயரமாக பாக்கியலட்சுமி பாட்டி விசுவரூபமெடுத்து நிற்கிறார்.

(நன்றி:தணிகைச்செல்வி, காங்கேயம் நல்லதம்பி)
-எல்.முருகராஜ்
--தினமலர் நாளிதழிலிருந்து (அக் 02, 2015).

 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...