Labels

Showing posts with label Agriculture. Show all posts
Showing posts with label Agriculture. Show all posts

Wednesday, 17 March 2021

வாழை நாரும் சிறந்ததே!!

வாழை நாரில் விதவிதமான கலைப் பொருட்களை படைத்து, பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றது குறித்து, தமிழகத்தை சேர்ந்த முருகேசன்: சொந்த ஊர், மதுரை அருகே உள்ள மேலக்கால் என்ற கிராமம். விவசாய குடும்பம் என்னுடையது.விவசாயத்தில் பழைய முறைகளை பின்பற்றாமல், புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம், சிறு வயது முதல் இருந்து வந்தது. எங்கள் பகுதியில், எல்லாரும் கையால் அறுவடை செய்த போது, நான் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தேன்.வழக்கமாக, இரண்டொரு நெல் ரகங்களையே விதைத்து வந்த எங்கள் பகுதியினர் மத்தியில், நான் புதுப்புது அரிசி ரகங்களை பயிரிட்டு காட்டினேன். விவசாயத் துறையால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பேன். 


கரும்பு சக்கையை, நல்ல இயற்கை உரமாக மாற்ற முடியும் என, சொல்லித் தந்தனர். அதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.அதுபோல, பல விதமான விவசாய கழிவு பொருட்களில் இருந்து, புதுமையான பொருட்களை படைக்க முடியும் என்பதை யோசித்து அறிந்தேன்.அந்த காலத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை கூட அறியாமல், அனைத்து தரப்பினரும், பிளாஸ்டிக் பைகளை சகட்டு மேனிக்கு பயன்படுத்தத் துவங்கி இருந்தனர்.அதற்கான மூலப்பொருட்களை, கடைக்காரர்களும் வாங்கிக் குவித்திருந்தனர். 

இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமே என, மனம் கலங்கியது.தென்னை நார், கயிறாக மாறுகிறது. பல தரப்பினராலும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவது போல, வாழைக் கழிவான, வாழை நாரிலிருந்தும், பல பொருட்களை தயாரிக்கலாமே என, பத்தாண்டுகளுக்கு முன் யோசித்தேன்.வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நார், பூ கட்டுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பிற தேவைகளுக்கு, அவை பயன்படுத்தப்படாமல், வீணாக எரிக்கப்படுகின்றன அல்லது மண்ணில் போடப்பட்டு மக்க வைக்கப்படுகின்றன. 

எனவே, வாழை நாரிலிருந்து கயிறு தயாரித்து, அந்த கயிற்றை பலமாக ஆக்கி, அதன் மூலம், பை, பழக்கூடை, மிதியடி, டேபிள் மேட் போன்றவற்றை தயாரிக்க முடியும் என அறிந்து, கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கிடைக்கிறதா என, பல இடங்களிலும் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.பிறகு, நானே அந்த எளிய இயந்திரத்தை உருவாக்கி, வாழை நாரிலிருந்து கயிறு தயாரிக்கத் துவங்கினேன். விளம்பரம் இல்லாததால், பெரிய அளவில் விற்பனையாகவில்லை. 

அப்போது ஒரு நாள், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கண்காட்சியில், வாழை நார் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான 'ஆர்டர்'கள் குவியத் துவங்கின.துவக்கத்தில், நான் மட்டுமே செய்த இந்த வேலையில், இப்போது, எங்கள் பகுதியில், 300 பேர் ஈடுபடும் அளவுக்கு, வாழை நார் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், இன்னமும் ஏராளமான வாழை நார்,வீணாகத் தான் போகிறது

முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ள : 93605 97884

From Dinamalar paper

வாழவைக்கும் வாழை நார் (From Dinamani paper)

கற்றாழை, வாழை நார்... கலகலப்பான மாற்றம்!

வாழை நார் ஆடைகள்: 'துணி'ந்தால் லாபம்தான்!

வாழைநாரில் டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி!

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்


Thursday, 23 April 2020

வயலிலேயே மணம் வீசும் 'காலாபாத்!'

பிரியாணி தயாரித்தால், ஊரையே சாப்பிட அழைக்கும், 'காலாபாத்' அரிசியை விளைவித்துள்ள, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சித்தையன் கோட்டை ரசூல் மைதீன்: 
 
இந்த பகுதியில் பிரசித்திபெற்ற நெல் ரகம், காலாபாத்; பிரியாணிக்காகவே சாகுபடி செய்யக் கூடிய ரகம். ஒரு காலத்தில், இந்தப் பகுதியில், அதிக அளவு சாகுபடி செய்யப்பட்ட ரகம் இது. 'தலப்பாகட்டி' பிரியாணி உணவகம், ஆரம்ப காலங்களில் இந்தப் பகுதியில், காலாபாத் ரக நெல்லைச் சாகுபடி செய்து, தங்கள் உணவகங்களில் பயன்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நெல், கதிர் முற்றிய பின், வயல் பகுதிக்குச் சென்றாலே, மணம் வீசும். வீரிய ரக நெல் வரவுக்குப் பின், இந்தப் பகுதியிலிருந்து, இந்த நெல் எப்படியோ காணாமல் போய்விட்டது. ஒரு காலத்தில், காலாபாத் நெல் என சொன்னாலே, எங்க பகுதியைத் தான் சொல்வர்; அந்தளவுக்கு, ஊரே அதைச் சாகுபடி செய்யும். அறுவடை காலங்களில், வயல் பக்கம் போனால், அருமையான மணம் வீசும்; அந்த மணத்துக்கே சாப்பிட வேண்டும் எனத் தோன்றும்.

ஆனால், காலப்போக்கில் இந்த ரகம் காணாமல் போய் விட்டது; யாரிடமும், விதை நெல் கூட இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வயதான, பழுத்த அனுபவமுள்ள விவசாயிகள் பலரும், காலாபாத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவர்.அவ்வளவு அருமையான நெல்லை, சாகுபடி செய்ய வேண்டும் என, முடிவு செய்தேன்.

விதை நெல்லைத் தேடி, பல இடங்களில் அலைந்தேன். ஒரு வழியாக, நண்பர் ஒருவர், அசாம் மாநிலத்தில் இருந்து, விதை நெல் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி, நாற்று உருவாக்கி, 60 சென்ட் நிலத்தில் நடவு செய்து, அறுவடை செய்துள்ளேன்.

இந்த நெல்லின் தாள், மிகவும் மென்மையாக இருக்கிறது. அருகம்புல் கொஞ்சம் பெரியதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல, புல் மாதிரி இருக்கிறது. மாடுகள் இந்த வைக்கோலை கழிக்காமல் சாப்பிடும். பல ஆண்டுகளுக்குப் பின், எங்கள் பகுதியில், இதைச் சாகுபடி செய்துள்ளேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த ரகத்தை மறுபடியும் விவசாயிகளிடம் கொடுத்து, சாகுபடி செய்யச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதனால் இதை, கொஞ்சம் மட்டும் அரிசியாக்கி விட்டு, மற்றதை விதை நெல்லாகக் கொடுக்கப் போகிறேன். விருப்பமுள்ள விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம்.தொடர்புக்குரசூல் மைதீன், மொபைல் போன் எண்: 86678 45567

--தினமலர் நாளிதழிலிருந்து

 

Tuesday, 12 November 2019

விதைத்த பின் அறுவடைக்கு போனால் போதும்!

எளிதாக வளரும் சிறுதானியமான, சாமை பயிரிடும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் - பாலக்கோடு சாலையில் உள்ள, கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காளி: எனக்கு, 3 ஏக்கர் நிலமிருக்கிறது. 1 ஏக்கரில், ஆரியம் எனப்படும் கேழ்வரகு, தலா, 30 சென்ட் நிலத்தில் சாமை, கம்பு பயிரிட்டு உள்ளேன். ஆடி, 18க்கு முன் விதைத்தேன்; ஆனியில் கிடைத்த மழைக்கு, உழவு ஓட்டினேன். டிராக்டர் உழவு கிடையாது. உழவுக்கு என, இரண்டு நாட்டு மாடு வைத்திருக்கிறேன். அதை வைத்து, நானே உழவு ஓட்டினேன். 1 ஏக்கருக்கு, 5 கிலோ சாமை விதை தேவைப்படும்.

விதையை வெளியில் வாங்குவதில்லை; விளைச்சலில் தனியாக எடுத்து வைத்து விடுவேன். உழவு ஓட்டிய வயலில், ஒரு கை விதையை, மூன்று விசிறு என, மூன்று முறை வீசினால் தான், பயிர்கள் கொத்தாக வளராமல், பரவலாக வளரும். சாமை மூன்று மாதப் பயிர். விதைத்து விட்டு விட்டால், அடுத்து, அறுவடைக்குப் போனால் போதும். நாட்டுச் சாமையைத் தான் விதைத்து விட்டுள்ளேன். தேவைப்பட்டால், ஒரு களை எடுத்தால் போதும். தானியம், பச்சை நிறத்துக்கு வந்ததும், அறுவடை செய்யணும். விற்பதற்கு கஷ்டமே இல்லை; சிறுதானிய உற்பத்தியாளர் சங்கத்தில் வாங்கிக் கொள்வர்!

பழனியம்மாள்: 70 சென்ட் நிலத்தில் தான், சாமை பயிரிட்டுள்ளோம். விதைப்பதற்கு ஒரு மாதம் முன், 30 நாட்களுக்கு அந்த இடத்தில், ஆட்டுக்கிடை போட்டிருந்தோம்; இரண்டு சால் உழவு ஓட்டினோம். வேறு எந்த உரமும் போடலை; பயிர்கள் செழிப்பாக வளர்ந்து உள்ளன. எப்படி போனாலும், நான்கு மூட்டை அதாவது, 400 கிலோ சாமை கிடைக்கும். 1 கிலோ, 40 ரூபாய்க்கு போனால் கூட, 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உழவு, விதை மட்டும் தான் செலவு; மற்றதெல்லாம் லாபம் தான்! கவுரி: சாமை அரிசி சோறும், ராகி எனப்படும் கேழ்வரகு களியும் தான், இன்றும் எங்கள் வீட்டில் முக்கியமான சாப்பாடு. இரண்டையும், உரலில் கையால் குத்தி தான் தவிடு நீக்குகிறோம்.

ரேஷன் கடை வந்த பிறகு தான், நெல் அரிசி சாதத்தை அவ்வப்போது பார்க்கிறோம். முன்பெல்லாம், சோறு என்றாலே, சாமை அரிசி சோறு தான். கொள்ளுத்தண்ணீர் ரசத்தை, சாமை சோற்றில் கலந்து சாப்பிட்டா, அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும், நாட்டு மாட்டுத் தயிரை, பழைய சாமை சாதத்துல ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், அமிர்தம் போல இருக்கும். மழையை நம்பியே பயிரிடுகிறோம். விளைச்சல் கிடைக்கும் என நம்பி விதைக்கிறோம்; எதிர்பார்த்தது போலவே, நல்ல விளைச்சல் கிடைக்குது; நம்பிக்கையாக அறுவடையும் செய்கிறோம்; நல்ல விலையும் கிடைக்குது!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

Sunday, 10 November 2019

போத்து முறையில் மரங்களை வேகமாக வளர்க்க முடியும்

மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, பாப்பநாயக்கன்பட்டி சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.

புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்துார் கிராமத்தில், ஆனந்த ராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார். அந்த பகுதியில் பணியாற்றிய போது, ஆனந்த ராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் தான், போத்து முறை நடவு பற்றி தெரிந்தேன்.

போத்து என்றால், எங்கள் பகுதியில், மரத்தின் கிளை என, பொருள். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை; உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள், 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல், நேராக இருக்க வேண்டும். அது, ௮ - ௧௦ அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொப்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை, கரும்பு வெட்டுவது போல, சரிவாக வெட்ட வேண்டும்.

இன்று நடப் போகிறோம் என்றால், முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால், கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி, நிழலில் வைக்கலாம். முன்னதாக, ௪ அடி ஆழம், ௪ அடி சுற்றளவுக்கு குழி தோண்ட வேண்டும். அந்த குழியை, ஒரு வாரம், அப்படியே விட வேண்டும். நடவிற்கு முந்தைய நாள் மாலை, ஒரு குடம் தண்ணீரை அந்த குழியில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில், ௫ கிலோ மக்கிய தொழு உரத்துடன், மேல் மண்ணை கலந்து, குழிக்குள், ௧.௫ அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அந்த குழிக்குள், மரக்கிளை நட்டு, சுற்றிலும் நன்றாக மண் மிதித்து, மண்ணை குவியல் போல வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால், காற்றின் சலனம், நீர் சலனத்தால், வேர் பிடித்தல் தாமதாகும். கிளையின் உச்சிப் பகுதியில், பசுஞ்சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும். அடுத்த, ௪௫ - ௫௦ நாட்களில் இலைகள் துளிர் விடும். வெப்பம் குறைந்த, ஆடி துவங்கி, மார்கழி வரை, இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம். இதனால், மரமாக வளரும் காலம் குறைந்து, விரைவில் பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பின், கிராமங்களுக்கு சென்று, போத்து தொழில் நுட்பத்தில் நிறைய மரங்கள் வளர்க்க உள்ளேன்.

மூலம் :: தினமலர் (13/8/19 பதிப்பு)

இயற்கை விவசாயத்தில் மனிதநேயம் உள்ளது!

பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஓவர்குடி விவசாயி, பரமசிவன்: எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், முழு நேரமாக விவசாயத்தை தான் மேற்கொள்கிறேன். எங்க குடும்பத்திற்கு சொந்தமாக, 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், பாரம்பரிய நெல் ரகங்களைத் தான் பயிரிடுகிறேன். இப்போது, 3 ஏக்கரில், மாப்பிள்ளைச் சம்பா; தலா, 1 ஏக்கரில், காட்டுயானம், கிச்சிலி சம்பா நெல் வகைகளை சாகுபடி செய்கிறேன். கிச்சிலி சம்பா, 135 - 140 நாட்கள்; மாப்பிள்ளை சம்பா, 160 - 165 நாட்கள்; காட்டுயானம், 180 - 185 நாட்களில் அறுவடைக்கு வரும்.

இது போன்ற பாரம்பரிய நெல் வகைகளில், இயல்பாகவே, களை, பூச்சி தாக்குதல் குறைவு; நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இந்த நெல் ரகங்கள், நல்ல உயரமான பயிராக வளரும். 50 - 60 நாட்களிலேயே, ஒன்றரை அடி உயரத்திற்கு பயிர் வந்து விடும்; நிழல் விழுவதால், களை ஏற்படாது. இயற்கை விவசாயத்திற்காக நிலத்தை பக்குவப்படுத்த, மாட்டு எரு, ஆட்டுக் கிடையில் கிடைக்கும் சாணம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே நிலத்தில் பயன்படுத்துவேன். படிப்படியாக கூடுதல் மகசூல் கிடைக்கிறது. நான் விளைவித்த பாரம்பரிய நெல்லை, அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக் கூட்டி, நேரடியாக விற்பனை செய்கிறேன். பலர் இங்கேயே வந்து, வாங்கிச் செல்கின்றனர்.

ஏக்கருக்கு, 21 மூட்டை நெல் கிடைத்தது. அதை காய வைத்து, சுத்தப்படுத்தியதில், 20 மூட்டை நெல் கிடைத்தது. அதில், 10 மூட்டையை, அவலாக மாற்றினேன். 300 கிலோ கிடைத்தது. 1 கிலோ, 100 ரூபாய் வீதம் விற்றதில், 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மேலும், 150 கிலோ தவிடு கிடைத்தது. அதை விற்றதில், 1,500 ரூபாய் வந்தது. ஒன்பது மூட்டை நெல்லை, மிஷினில் கொடுத்து, உமியை மட்டும் நீக்கி, அரிசியாக மாற்றியதில், 315 கிலோ அரிசி கிடைத்தது. கிலோ, 80 ரூபாய் வீதம், 25 ஆயிரத்து, 200 ரூபாய் கிடைத்தது. மீதமுள்ள, ஒரு மூட்டை நெல்லை காய வைத்து, விதையாக மாற்றி, 48 கிலோ விதையை, கிலோ, 60 ரூபாய்க்கு விற்றதில், 2,880 ரூபாய் வந்தது.  

இவ்வாறு, 1 ஏக்கரில், மொத்தமாக, 60 ஆயிரத்து, ௭80 ரூபாய் கிடைத்தது. செலவு போக, 32 ஆயிரத்து, 480 ரூபாய் லாபம் பார்த்தேன். இயற்கை விவசாயத்தை, தொழிலாக பார்க்கக் கூடாது. இதில், மனிதநேயம் உள்ளது. விஷமில்லாத உணவை உற்பத்தி செய்வதால், சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது. மேலும், லாபத்தையும் பார்க்கக் கூடாது. மண்ணை வளமாக்கி, எதிர் கால சந்ததியினருக்கு நல்ல, உயிருள்ள நிலத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அவசியம்!

தொடர்புக்கு: 99433 84204

--தினமலர் நாளிதழிலிருந்து
 

1.5 ஏக்கரில் 1,100 மரங்கள்....

வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், தெக்குப்பட்டு கிராமத்தில், 1.5 ஏக்கரில், அடர்ந்த வனத்தை உருவாக்கியுள்ள, ஞானசூரிய பகவான்: கோவை பல்கலைக் கழகத்தில், பி.எஸ்சி., விவசாயம் படித்து, தமிழக அரசில், வேளாண்மைத் துறை அதிகாரியாக பணியாற்றினேன். அந்தப் பணியை ராஜினாமா செய்து, சென்னை வானொலி நிலையத்தில், விவசாயிகளுக்கான, 'வீடும் வயலும்' நிகழ்ச்சியில், 'சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்' என்ற பெயரில் பேசி வந்தேன்.

மரங்கள் மீது கொண்ட காதலால், அவற்றை வளர்க்கத் துவங்கினேன். சொந்த கிராமத்தில், 1.41 ஏக்கர் நிலத்தில், மரங்களை நெருக்கமாக வளர்த்து, மரக்காடு உருவாக்கியுள்ளேன்; இங்கு, 1,100 மரங்கள் உள்ளன. அதன் நடுவே வீடு கட்டி, மனைவியுடன் வசிக்கிறேன். வீட்டின் மாடியிலிருந்து விழும் மழை நீரை, மூன்று தொட்டிகளில், 70 ஆயிரம் லிட்டர் சேகரித்து, மரங்களுக்கு பயன்படுத்துகிறேன். சின்ன இடத்தில் நெருக்கமாக வளர்க்கப்படும் மரங்கள், வேகமாக வளர்கின்றன. காட்டில் வளரும் மரங்களுக்கு இடையே, இடைவெளி கிடையாது; மரம், செடி, கொடி என அடர்ந்து வளரும். இந்த வகை காடுகளை, 'மியாவாக்கி' காடுகள் என்பர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, அக்கிராமியாவாக்கி என்ற தாவரவியலாளர் தான், இந்த அடர்ந்த வனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.

என் மரக்காட்டில், பாரிஜாதம், சிங்கப்பூர் செர்ரி, செம்மரம் போன்ற, 100 மரங்கள் உள்ளன. மரங்கள் நமக்கு தாய் போன்றவை. அவற்றில் நல்ல மரம், கெட்ட மரம் என எதுவும் இல்லை; எல்லா மரங்களுமே மண்ணுக்கு தேவை. நம் நாட்டில், 1947க்கு முன், 47 சதவீதமாக இருந்த வனம், 24 சதவீதமாக சுருங்கியுள்ளது. தமிழகத்தில், 17 சதவீதம் மட்டுமே வனங்கள் உள்ளன. நான் மட்டும் காடு வளர்த்தால் போதாது என்றெண்ணி, விரும்பும் மாணவர்களுக்கு, காடு வளர்ப்பு மற்றும் வேளாண்மை பயிற்சி அளிக்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் பலர், பயிற்சிக்கு வருகின்றனர். நவீன வேளாண்மை குறித்து, எளிமையாக கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், விவசாயத் தொழில்நுட்பத்தை, நாடு முழுவதும் பின்பற்றி வருகின்றனர்.

இயற்கை வளப் பாதுகாப்புப் பணிகளை, 'பூமி' என்ற அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறேன். மழை வளமும், நீர் வளமும், ஆரோக்கியமான காற்றின் வளமும் தான், மனிதர்களை வாழ வைக்கும். வெறும் சந்ததியினரால் மட்டும், வாழ வைத்து விட முடியாது. அதனால், மனிதர்களுடன் மரங்களையும் வளர்க்க வேண்டும். 'ஏசி'யையும், மின் விசிறியையும் பயன்படுத்துவது, கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிந்து கொள்ளும் கதை தான்!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

Saturday, 13 October 2018

'ஹேண்ட் இன் ஹேண்ட்' : இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும் அமைப்பு

இயற்கை விவசாயத்தை கற்று கொடுக்கும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' அமைப்பின், இயற்கை விவசாயப் பயிற்சித் திட்ட மேலாளர், முனைவர், ஜோ: எங்கள் அமைப்பு, 'ஹீமேனியம்' நிறுவனத்துடன் இணைந்து, விவசாயப் பண்ணையை அமைத்து, விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. இது, இரண்டு ஆண்டுத் திட்டம். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமம் முழுவதும், களர் மண் நிலங்கள் தான் உள்ளன. வளம் குறைந்த மண்ணிலும், இயற்கை விவசாயம் சாத்தியமே என்பதை நிரூபிக்கவே, இக்கிராமத்தை தேர்ந்தெடுத்தோம்.

பண்ணையில் பயிற்சிக்காக, 0.5 ஏக்கரில், கோ - 4 புல், அவரைக்காய், பீர்க்கங்காய், பாகல், அரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, சிறுகீரை, தக்காளி, பீன்ஸ், தட்டைப்பயறு, கத்தரி, வெண்டை போன்ற பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்கிறோம்.மண்புழு உரம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல், இஞ்சி பூண்டுக் கரைசலை தயாரிப்பதுடன், 'கம்மல் பாசி' என்று அழைக்கப்படும், அசோலா வளர்ப்புக் கூடத்தையும் அமைத்துள்ளோம். இதை விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுக்கிறோம்.

 'மாதிரி பண்ணை அமைத்துள்ள நிலத்தில் ரசாயனம் போட்டாலே ஒன்றும் விளையாது. இயற்கை விவசாயத்தில் என்ன விளையப்போகுது?' எனக் கூறித்தான், இதன் உரிமையாளர், குத்தகைக்கே கொடுத்தார். இப்போது, இயற்கை முறை சாகுபடியில் விளைந்து நிற்கும் பயிர்களை பார்த்து, நிறைய விவசாயிகள் பயிற்சிக்காக வர ஆரம்பித்துள்ளனர்.இயற்கை விவசாயத்துடன், விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இயற்கை விவசாயம் சிறப்பாக செய்யும் விவசாயிகளுக்கு, 15 நாட்டுக்கோழி, ஆடுகளை கொடுக்க இருக்கிறோம். நாங்கள் தரும் நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளுடன், அவர்கள் பணம் கொடுத்து, ஐந்து நாட்டுக்கோழி, இரண்டு ஆடுகளையும் வாங்க வேண்டும் என்பது நிபந்தனை. அப்போதுதான் அவர்கள், அதை நிலையாக வைத்திருப்பர்.

விவசாயிகளுக்கு நாங்கள் சொல்லிக் கொடுக்கும் ஒரே மந்திரம்,  'நிலத்தில் இடப்படும் இடுபொருட்கள் எதையும் வெளியில் இருந்து வாங்கக் கூடாது; முடிந்தவரை அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்ய வேண்டும்' என்பது தான். அதேபோல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

விவசாயிகளை தற்சார்புள்ளவர்களாக மாற்ற, இயற்கை விவசாயம் ஒன்றே வழி என்பதை, அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். விரைவில் இக்கிராமத்தை, முழு இயற்கை கிராமமாக மாற்றிவிடுவோம். தொடர்புக்கு: 92822 13702.
--தினமலர் நாளிதழிலிருந்து

Monday, 6 August 2018

உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....

மாடித் தோட்டத்தை பராமரித்து வரும், 75 வயதான, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்: மெட்ரோ வாட்டர் போர்டில், இன்ஜினியராக இருந்த நான், 25 ஆண்டு பணி முடித்து, விருப்ப ஓய்வு பெற்று, சொந்த தொழில் ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன், அதையும் மூடி, இப்போது ஓய்வில் இருக்கிறேன். சொந்த தொழில் நடத்திய சமயத்திலேயே, மாடித் தோட்டம் ஆரம்பித்து விட்டேன்.


செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் வாளி, பைகளை தான் பயன்படுத்துகிறேன். வாளி, பையின் பக்கவாட்டில், சிறு துளை போட்டு, மணல், செம்மண், தேங்காய் நார், மாட்டு எரு, மண்புழு உரம் நிரப்பி, விதைப்பேன். வீணாகும் காய்கறிகள், மட்கின இலை தழைகளை, செடிகள் இருக்கும் தொட்டிகளில் போடுவேன். தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவேன்.

பருப்புக்கீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், துாதுவளை, புளிச்சகீரை, புதினா, தக்காளி, கத்திரி, குடை மிளகாய், பிரண்டை, காராமணி, துளசி, திருநீற்றுப் பச்சிலை, சோற்றுக் கற்றாழை, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, வாழை, கீழாநெல்லி, இன்சுலின் செடி, வெற்றிலை என, பல செடிகள் உள்ளன. மல்லிகை கொடி கீழிருந்து, மூன்றாவது மாடி வரை படர்ந்து உள்ளது. 

ஒரு வாளியில், ஒரு வகை விதையை மட்டும் தான் விதைப்பேன். செடிகளில் ஊட்டம் குறையும் போது, 20 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து விடுவேன்.பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, அவ்வப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன். 20 நாட்களுக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி, இ.எம்., கரைசல் கலந்து தெளிப்பேன். வெயில் காலத்தில் செடி வாடாமல் இருக்க, நிழல் வலை அமைத்துஉள்ளேன்.

இயற்கையில் விளையும் காய்கறிகள், நல்ல சுவையுடன் உள்ளன. அன்றன்றே பறித்து, புத்துணர்ச்சியுடன் ஒரு கீரையை உணவில் சேர்க்க முடிகிறது. பக்கத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, தினமும் வீட்டில் இருந்து பூ பறித்து எடுத்து போவேன். வாளி, பைகளை பலகை மேல் வைத்துள்ளதால், தரைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என் மாடித் தோட்ட ஆர்வத்தை பார்த்து, 'ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்' அமைப்பினர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்து உள்ளனர்.

தினமும் தோட்டத்தில் வேலை செய்வது, உடற்பயிற்சியாக இருப்பதுடன், நமக்கு தேவையானதை, நாமே உற்பத்தி செய்வதும், மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதிலும் உடம்பும், மனதும் எப்போதும் தெம்பாக இருப்பதற்கு காரணம், இந்த செடிகள் தான். தொடர்புக்கு 94449 26128
--தினமலர் நாளிதழிலிருந்து

Sunday, 5 August 2018

பேரீச்சை சாகுபடி:

பேரீச்சை சாகுபடியில் அதிக லாபம் சம்பாதிக்க வழி கூறும், தருமபுரி மாவட்டம், அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின்: சவுதி அரேபியாவில், வேளாண் பயிற்சி கூடத்தில் பணிபுரிந்த போது, பேரீச்சை சாகுபடி குறித்து அறிந்தேன்.நம் ஊரில் செய்தால் என்ன என யோசனை வந்து, அங்கிருந்த பேரீச்சை நாற்றை எடுத்து வந்து, சொந்த ஊரில் நட்டேன். 1991ல், பேரீச்சை சாகுபடியை துவங்கினேன்.

தற்போது, 1 ஏக்கருக்கு, 76 செடி வீதம், 13 ஏக்கரில், 630 பேரீச்சை செடிகளை நட்டு, பராமரித்து வருகிறேன். 24க்கு, 24 அடியில், ஒரு செடி நட வேண்டும். குழியின் அடியில், 1.5 அடி வரை, மணல் கலந்த மண்ணையும், மேல் பாகம், 1.5 அடியில் மண்ணையும், இயற்கை உரங்களையும் கலந்து நடவு செய்ய வேண்டும். இது, அனைத்து வகையான மண் ரகத்திலும் வளரும் தன்மையுடையது. நடவு செய்து ஒரு மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்து, வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். மரங்களான பின், மாதத்திற்கு இரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில், தென்னையை போல், பேரீச்சை மரம் காய்ந்து போக வாய்ப்பு இல்லை.

ஆண்டுக்கு இருமுறை, இடை உழவும், இருமுறை இயற்கை உரங்களும் போட வேண்டும். பேரீச்சை மரங்கள், 90 ஆண்டு வரை பழங்கள் தரும். இதன் ஆயுட்காலம், 150 ஆண்டு. இதன் நடுவே ஊடுபயிராக, அனைத்து விதமான பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.நடவு செய்த முதல் ஆண்டில், ஒவ்வொரு செடியும், 30 - 50 கிலோ வரையும், மூன்றாம் ஆண்டு பருவத்தில், 50 முதல் 100 வரை காய்க்கும். பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரியில் பூ பூத்து, ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தரமான, சுவையான பழங்களை அறுவடை செய்யலாம்.

மரத்தை சுற்றி விளையும் களைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மரம் வளர்ந்த பின், பக்கவாட்டில் உள்ள கிளைகளை வெட்டி விடுவதுடன், காய்க்க துவங்கியதும், வலைகளால், பழங்களை மூடி விட வேண்டும்; இல்லையெனில் எலி, அணில்கள், பழங்களை சேதப்படுத்தி விடும். எங்களிடம், 32 வகையான பேரீச்சை நாற்றுகள் உள்ளன.

ஒரு நாற்றின் விலை, 3,500 - 5,000 ரூபாய் வரை விற்கிறோம். பழங்கள் கிலோ, 250 - 500 ரூபாய் வரை விற்கிறோம். தற்போது, நம் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயமும் படிப்படியாக குறைகிறது. வழக்கமான விவசாயத்தை விட, குறைந்த செலவில், பேரீச்சை சாகுபடியில் அதிக பலன்களை பெற முடியும். தொடர்புக்கு94423 37717.
--தினமலர் நாளிதழிலிருந்து.

 

Tuesday, 15 May 2018

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி:

வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்ற வழி கூறும், திருவாரூர் மாவட்டம், வீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனன்: தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது.குறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர்.


எங்கள் அப்பா காலத்தில், கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும். சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர்.

ஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை. உளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0.5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும்.சித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும்.


அடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும். கொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது.


சணப்பு, தக்கைப்பூண்டு மாதிரியான பயிர்கள், வறட்சியை தாங்காது. அது மட்டுமின்றி இந்த பயிர்களை, 50 நாட்களில் மடக்கி உழவு செய்யாவிட்டால், தண்டு பகுதி கடினமாகி, நார்த்தன்மையாக மாறிவிடும்; அதனால், மட்க தாமதமாகும்.ஆனால், கொழிஞ்சியை பல மாதங்கள் நிலத்திலேயே விட்டு வைத்தாலும், நார்த்தன்மைக்கு மாறாது. வறட்சியிலும் வளரும் பயிர் என்பதால், கோடை காலத்தில் கூட கொழிஞ்சியை விதைத்து, உயர் மூடாக்கை உருவாக்கலாம்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

Friday, 30 March 2018

சைக்கிள் உழவு கருவி

சைக்கிள் உழவு கருவி குறித்து கூறும், மானாவாரி விவசாயம் செய்து வரும், முனியசாமி: விருதுநகர் மாவட்டம், தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கல்லுாரி படிப்பை முடித்து, சென்னை, துணிக்கடையில் மேனேஜராக வேலை பார்த்தேன். அப்போது, வேலை இல்லாத சமயங்களில், இன்டர்நெட்டில் தகவல் தேடுவேன்.இப்படி, இன்டர்நெட் வீடியோக்களை பார்த்து, இயற்கை விவசாயம் மீது ஆர்வம் வரவே, வேலையை விட்டு, பண்ணையில் தங்கி பயிற்சி எடுத்தேன்.

அப்போது, சிவகாசியில் இருக்கும் இயற்கை விவசாய அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த விவசாயிகளிடம் பேசினேன். அவர்கள், மாதிரி பண்ணைக்கு அழைத்துச் சென்றனர்.அந்த பண்ணையிலேயே பராமரிப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், அவரின் இந்த, 1 ஏக்கர் நிலத்தை மட்டும் எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அதில் தான், மானாவாரி விவசாயம் செய்து வருகிறேன். இது, மணல்சாரியான கரிசல் மண். போன போகத்தில், இயற்கை முறையில் குதிரைவாலி சாகுபடி செய்தோம். இந்தாண்டு, துவரை, தட்டை, இருங்குச் சோளம், குதிரைவாலி என, நான்கு பயிர்களை, சைக்கிள் உழவுக் கருவியை பயன்படுத்தி, விதைத்தேன். விதைப்போடு களை எடுத்தல், மண் அணைத்தல் என, மற்ற வேலைகளையும் செய்து கொண்டேன்.

 இந்த கருவி மூலமாக உழவு, களை எடுப்பு இரண்டும் சேர்த்து, 1 ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மிச்சமானது. இந்த கருவியை உருவாக்க, பழைய சைக்கிளில் பின்பக்க வீல், பெடல், செயின் பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துவிட்டு, பெடல் இருந்த இடத்தில், ஒரு இரும்புப் பட்டையை வெல்டிங் மூலம் இணைக்க வேண்டும்.அதில் கொழுவை, போல்ட், நட் வைத்து இணைக்க வேண்டும். தேவைக்கேற்ப இரண்டு, மூன்று கொழுக்கள் கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.களை எடுக்க, நான்கு பல் கொண்ட கருவியை செய்து வைத்துக் கொள்ளலாம். உழவுக்கும், விதைப்புக்கும் ஒற்றை கொழுவை பயன்படுத்த வேண்டும். சீட் இருந்த இடத்தில் கைப்பிடியைப் பொருத்தி, சைக்கிளை முன்னோக்கி தள்ளும்போது, டயர் சுழல சுழல, கொழு மண்ணை கிளறிவிடும்.

சாதாரணமாக, அரை அடி ஆழமும், மண் பதமானதாக இருந்தால், முக்கால் அடி வரையும் கொழு இறங்கும். இக்கருவி மூலம் களை எடுக்கும்போது, களைகள் வேரோடு வந்து விடுகின்றன.தெரிந்த விவசாயி களிடம் விதை வாங்கினால் தரமாக இருக்கும் என நம்பி, பலரும் வாங்குகின்றனர். ஏதாவது ஒரு பயிர் கை கொடுக்கும் என நினைத்து தான், நான்கு பயிரை கலந்து போட்டேன். ஆனால், நான்குமே நன்றாக விளைந்துள்ளன.தொடர்புக்கு: 9655051239.

--தினமலர் நாளிதழிலிருந்து

சைக்கிள் உழவு கருவி - பசுமை தமிழகம் விவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்

Saturday, 3 March 2018

கொத்தமல்லியில் தழைக்குது வருமானம்!

கொத்தமல்லி சாகுபடி செய்து வரும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி - பேபி தம்பதி: எங்களுடைய, 9 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் கொத்தமல்லி, 1 ஏக்கரில், சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளோம்.பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் சரியாக கிடைக்காததால், 'போர்வெல்' போட்டுத் தான் பாசனம் செய்கிறோம். அதிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால், தென்னைக்கு பாய்ச்சியது போக மீதி நீரில், விவசாயம் செய்கிறோம்.
கொத்தமல்லித் தழை, 45 நாட்களில் அறுவடைக்கு வந்து விடக்கூடிய பயிர். அரை ஏக்கர் பரப்பில் விதைக்க, 4 கிலோ விதை தேவைப்படும். தேர்வு செய்த நிலத்தில், 3 டன் தொழு உரமிட்டு, உழுது, 10 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். பின், வீரிய ரகக் கொத்தமல்லி விதையை பாத்திகளில் சீராகத் துாவி, அவற்றை நீண்ட கூர்மையான குச்சியால், மண்ணைக் கீறி மூடி, உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த, 10 நாட்களுக்குள் விதைகள் முளைத்து வரும். அப்போது, பாசனம் செய்து, ஈரம் காய்ந்தவுடன், களை எடுத்து, தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். இரண்டாவது முறையாக, 25ம் நாளில், களை எடுத்து, கடலைப் பிண்ணாக்கு மூழ்கும் அளவு தண்ணீர் நிரப்பி, மூன்று நாள் ஊற வைத்து, அத்துடன், தலா, 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து, கடலை பிண்ணாக்கு கரைசலை, பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

செடிகள், 30ம் நாள், நன்கு வளர்ந்துவிடும். அப்போது, வரும்முன் காக்கும் விதமாக, 10 லி., தண்ணீருக்கு, 100 மில்லி இஞ்சி, பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 45ம் நாளில், மாலை நேரத்தில் கொத்தமல்லி செடிகளை, வேருடன் பிடுங்கி, கட்டுகளாக கட்டி, நீரில் அலசி, மண்ணை நீக்க வேண்டும். நிழலில் அடுக்கி, ஈரத்துணியால் மூடி வைத்து, மறுநாள் விற்பனைக்கு கொண்டு செல்லலாம்.

அரை ஏக்கரில், 3,000 கிலோ கொத்துமல்லித் தழை கிடைக்கும். ஒரு கிலோ, 25 - 30 ரூபாய் வரை விற்றால், குறைந்தபட்சமாக, 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். விதை, நடவு, இடுபொருள் செலவு போக, 60 ஆயிரம் ரூபாய் லாபம் வரும். நாங்கள் நேரடியாகவே உழவர் சந்தையில் விற்பனை செய்வதால், தரகு கமிஷன் கிடையாது. கொத்தமல்லியை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் நாங்கள், அடுத்த முறை, சின்ன வெங்காயத்தையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யவுள்ளோம். தொடர்புக்கு: 9688380579.
--தினமலர் நாளிதழிலிருந்து


Saturday, 10 February 2018

நாட்டு ரக விதைகள் வேணுமா?

பட்டணத்துப் பண்பாடு, கிராமங்களில் கால்பதிப்பதற்கு முன்புவரை பெரும்பாலும் ‘கூரை’ வீடுகள்தான் இருந்தன. கூரைகளில் ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’யை விஞ்சும் அளவுக்கு சுரைக்காய், அவரை, பாகல், பீர்க்கன் என கொடிகளுக்கு இடம்கொடுத்தனர், முன்னோர். ஆனால், நாகரிகம் வளரவளர… கூரை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதில், வீட்டுத் தோட்டங்களும் காணாமல் போயின. அதோடு, காணாமல் போனது, நமது நாட்டு விதைகளும்தான். கூடவே, பசுமைப் புரட்சியின் விளைவால், வீரிய விதைகள் வேகமாகப் பரவ, சுத்தமாகவே நாட்டு விதைகள் வழக்கொழிய ஆரம்பித்தன. இத்தகையச் சூழலில் மீண்டும், இயற்கை மீதான பாசம் பெருக ஆரம்பித்திருப்பதால், மாடித் தோட்டங்களும் வீட்டுத் தோட்டங்களும் செழிக்க ஆரம்பித்துள்ளன. இதோடு, நாட்டு விதைகளையும் விவசாயிகள் தேட ஆரம்பித்திருப்பது… மகிழ்ச்சிக்குரிய செய்தி!

கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்ட நாட்டு ரக விதைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் பாரம்பரிய விதைகள் என்று அனைத்தையும் தேடிப்பிடித்து, சேகரித்து, பாதுகாத்து, பயிர் செய்து விதைகளைப் பெருக்கி வருகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும்! இந்த வரிசையில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு.

விஷயத்தைப் புரிய வைத்த வீரிய விதை!
‘வசிஷ்டா கிராம விதை வங்கி’ என்ற பெயரில், சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் செயல்படத் துவங்கியுள்ள விதை வங்கியில், உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமனைச் சந்தித்தோம்.
”விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாம இருந்த சூழ்நிலையில, ‘எதிர்கால விவசாயமாவது லாபகரமா மாறட்டும்’னு சொல்லி, ஏழு வருஷத்துக்கு முன்ன அபிநவம் கிராமத்துல உழவர் மன்றம் ஆரம்பிச்சோம். இது மூலமா விவசாயிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, விவசாயிகளையும் விற்பனையாளரா மாத்தின பிறகு, எங்களுக்கு ஓரளவு லாபம் வர ஆரம்பிச்சுது. ஒரு வருஷத்துக்கு முன்ன தனியார் விதை கம்பெனிக்காரங்க ‘எஃப்-1’ விதை உற்பத்திக்காக எங்க உறுப்பினர்களைப் பயிர் செய்யச் சொன்னாங்க. அவங்க சொன்னபடி நாங்களும் விதையை உற்பத்தி செஞ்சு கொடுத்தோம். ஆனா, பணம் கொடுக்கல. ஏன்?னு கேட்டத்துக்கு ‘விதை தரமா இல்லாததால சான்று கிடைக்கலை’னு சொன்னாங்க. ஆனா, தரமற்ற அந்த விதையை விவசாயிங்க தலையில கட்டி கோடிக்கணக்குல லாபம் பார்த்தாங்க. எஃப்-1 விதையை ஒவ்வொரு முறையும் வாங்கிப் போடும்போது அதிக செலவாகும். ஆனா, அந்த விதை ஒரு முறைதான் நல்ல மகசூல் கொடுக்கும். அதுல இருந்து விதை எடுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழல்ல… ‘உரம், பூச்சிக்கொல்லிக்கு அதிகமா செலவாகுதுனு சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சாங்க எங்க விவசாயிங்க. அப்பதான் ‘இயற்கை விவசாயத்துக்கு ஒட்டு விதைகள் ஏத்ததில்லை’னு புரிஞ்சுது. இதுக்குப் பிறகுதான் நாட்டு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். கிடைச்ச விதைகளைப் பயிர் பண்ணி, விளைச்சலை அறுவடை பண்ணி சந்தைக்குக் கொண்டு போனப்ப… அந்த காய்களுக்குக் கூடுதல் விலை கிடைச்சுது. இதுக்குக் காரணம், எங்க தோட்டத்துக் காய்களோட சுவைதான். ஒட்டு விதைகளை விதைச்சு, உரம் போட்டு, மருந்தடிச்சு, பண்டுதம் பார்த்து கிடைக்கிற வருமானம் மொத்தமும் செலவுக்கே சரியாபோயிடும். ஆனா, பாரம்பரிய விதை களை இயற்கை முறையில விளைய வைக்கிறப்போ, செலவும் குறைவு. வருமானமும் கிடைக்குது. இந்த உண்மை இப்போதான் எங்களுக்கு உறைச்சிருக்கு” என்ற ஜெயராமன், தொடர்ந்தார்.
வகை வகையான பாரம்பரிய விதைகள்!
”பாரம்பரிய நெல் ரகங்கள், பயறு வகைகள், சிறுதானிய ரகங்கள், காய்கறி ரகங்கள்னு பலவிதமான பாரம்பரிய விதை ரகங்களை தனி ஆளா சேகரிச்சு, பாதுகாக்க முயற்சிகள் செஞ்சா சரிப்பட்டு வராதுனு, ‘சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு’னு ஆரம்பிச்சு… அது மூலமா பாரம்பரிய விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சோம். உழவர் மன்றங்களின் அறிமுகமும், ‘பசுமை விகடன்’ மூலமா கிடைச்ச விவசாய நண்பர்களும் விதை சேகரிப்புக்கு உதவியா இருந்தாங்க. தமிழ்நாடு முழுக்க சுத்தி 64 பாரம்பரிய நெல் ரகங்கள், 8 வகையான சிறுதானிய ரகங்கள், 6 வகையான பயறு ரகங்கள், 37 வகையான நாட்டுக் காய்கறி ரகங்கள் பாரம்பரிய விதைகளைச் சேகரிச்சிருக்கோம். ஆத்தூரைச் சுத்தி இருக்குற உழவர் மன்ற உறுப்பினர்களுக்கு விதைகளைக் கொடுத்துட்டு இருக்கோம். 

விதை தேவைப்படுறவங்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கு. ஒரு பங்கு விதை வாங்கினா, நாலு பங்கு விதையா திருப்பிக் கொடுத்திடணும். விவசாயிங்க, அவங்க கிட்ட இருக்குற ஒரு ரக விதையைக் கொடுத்திட்டு, இங்க இருக்குற வேற ரக விதையை வாங்கிக்கலாம். வீட்டுத் தோட்டம் போடுறவங்களுக்காக சாம்பிள் பாக்கெட்டுகளா போட்டு, ஒரு பாக்கெட் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம்” என்ற ஜெயராமன் நிறைவாக, ”பாரம்பரிய நெல் ரகங்கள் ‘பசுமை விகட’னோட முயற்சியால விவசாயிங்க மத்தியில பரவி இருக்கு. இதேமாதிரி காய்கறி விதைகளையும் பரப்பணும் அப்படிங்கிற ஆசையில இருக்குறோம். இன்னும் ரெண்டு வருஷத்துல, நாட்டுக் காய்கறி ரகங்கள் அத்தனையும் விவசாயிங்க மத்தியில பரவிடும்” என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, ஜெயராமன்,
செல்போன்: 99424-43055
--விகடன் இணைய இதழிலிருந்து 


இயற்கையின் மகிமை!

நாட்டு ரக விதைகளின் தாயான, இயற்கை விவசாயி, ஒம்பாலம்மா: கிருஷ்ணகிரி மாவட்டம், தளியிலிருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ள ஆலப்பன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவள் நான். 20 ஆண்டுகளுக்கு முன், தளியில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த கூட்டத்தில், கலந்து கொண்டேன். அதில், இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு ரக விதை குறித்து விளக்கினர். அதன் பின் தான், நாட்டு விதைகள் மீது பாசம் வந்தது. நாட்டு விதைகளை பயிர் செய்யும் போது, அவற்றில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி, நான் விளைவித்த பயிர்களில் இருந்தே, எனக்கு விதைகள் கிடைக்கத் துவங்கியதால், அடுத்தவரிடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 


எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலம் உள்ளது. அது, மேட்டு நிலம் என்பதால், மழை வந்தால் தான் விதைப்பேன். மலையை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலத்திலும், மானாவாரி விவசாயம் செய்கிறேன்.பெரும்பாலும், கேழ்வரகை தான் மானாவாரியாக சாகுபடி செய்வேன். வீட்டுக்கு அருகில் சிறிய காய்கறி தோட்டத்தை அமைத்து, அதன் மூலமாகவும் விதைகளை பெருக்குகிறேன்.

வட்டம், லிங்கம், பந்து என, மூன்று வடிவங்களில் பூசணி விதைகள் உள்ளன. நாட்டு பூசணி விதைகளில் காய்க்கும் காய்கள், சுவையாக இருப்பதோடு, வாட்டமாகவும், கடினத்தன்மை உடையதாகவும் இருக்கும்.கோலி வடிவத்தில் இருக்கும் பாகல் விதை, மலைப்பகுதியில் மட்டுமே விளையக் கூடியவை; அரிதான ரகம். பாகற்காய்க்கு உரிய தன்மை மாறாமல் இருக்கும். இவை போல் கத்தரிக்காய், தக்காளி, அவரை, மிளகாய், கடலை, மொச்சை, சுரைக்காய், கடுகு, சூரியகாந்தி, வெள்ளரி, வரகு, சாமை, கீரை வகைகள் என, நாட்டு விதைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். நாட்டு ரக பயிர்களை சாகுபடி செய்யும் போது, பெரும்பாலும் பூச்சிகளே வருவதில்லை. அதுபோல, ஆமணக்கு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தால், பூச்சி தாக்குதல் இருக்காது.

ஆமணக்கு எண்ணெயை தலைக்கு தேய்த்து வருவதால், 67 வயதிலும் தலைமுடி நரைக்கவில்லை. இதுதான் இயற்கையின் மகிமை.காய்கறி மற்றும் சிறு தானியங்கள் என, மொத்தம், 31 வகையான, நாட்டு ரக விதைகளை பத்திரப்படுத்தி, விற்பனை செய்து வருகிறேன். தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். நான் சொல்லும் விலையை விட, அதிக தொகை கொடுத்து பலர் வாங்குகின்றனர். இதன் மூலமாக வரும் வருமானத்தை, பெரிதாக எண்ணுவதில்லை. நாட்டு ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, என் ஆசை!
--தினமலர் நாளிதழிலிருந்து


Saturday, 28 October 2017

ஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு!!

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: 
புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 2013, செப்டம்பரில், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பந்தோப்பு பணியை துவங்கினேன். அரிமளம் கார்டனில் இருந்து, 60 ரூபாய் வீதம், 500 கன்றுகளை, 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தோட்டத்தில் நட்டேன். வேப்பங் கன்று நடுவதற்கு முன், நிலத்தில் சாணக் குப்பை கொட்டி உழுது, மண்ணை வளப்படுத்தினேன். அதன் பின் வேப்பங் கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வரவும், ஆறு மாதங்களில் மிக அருமையாக வளர ஆரம்பித்து, நான்கு ஆண்டுகளில் வேப்ப மரங்கள் நன்றாக வளர்ந்து விட்டன.

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வேப்ப மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  
  • மனிதர்கள் சுவாசிக்கும் சுத்தமான காற்றுக்கு, நுாற் றுக்கு நுாறு மிகவும் உத்தரவாதமாக இருந்து வருவன, வேப்ப மரங்கள் தான். 
  • மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் அதிகமான மழைப் பொழிவையும் பெற்றுத் தருகிறது, இந்த வேப்பந் தோப்பு. வேப்பங் கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ள இப்பகுதியில், இரண்டு ஆண்டுகளாக இதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்து வருகின்றனர், தக்கிரிப்பட்டி கிராம வாசிகள்.
  • இது, மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெயையும், நமக்கு வாரி வழங்குகிறது. 
  • வேப்பம் புண்ணாக்கு, கால்நடைகளுக்குச் சத்து மிக்க தீவனமாகப் பயன்பட்டு வருகிறது. 
  • வயல்களுக்கு மிகச்சிறந்த அடியுரமாக, வேப்பம் புண்ணாக்கு தான் போடுகிறோம். இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?
பொதுவாகவே வேப்ப மரங்கள், தை மாதம் பூ பூக்கும். வேப்பம் பூவை, ரசம் வைத்து அருந்துவது வழக்கம். அது நம் உடல் நலத்துக்கு நல்லது. மாசி மாதம் பிஞ்சு பிடித்து, பங்குனி மாதம் பழுக்கத் துவங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் அந்த வேப்பம் பழங்கள் மரத்திலிருந்து கொட்டும். அந்த வேப்பங் கொட்டையை, கிராமத்தில் நாங்கள், 'வேப்பமுத்து' என்று தான் கூறுவோம். வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்றவை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்திரை, வைகாசி மாதங்களில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேப்பமுத்துக்களை, இந்த வேப்பந்தோப்பில் இருந்து எடுத்து விற்று, வருவாய் ஈட்டியுள்ளோம். வரும் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் என்கின்றனர்.

வேப்ப மரங்களுக்கு ஆயுள் மிக அதிகம். அதன் வேப்பமுத்துக்களின் எண்ணிக்கையும், வருவாயும் ஒவ்வொரு ஆண்டிலும் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தினமும், காலையில் வேப்பங் கொழுந்து சாப்பிட்டு வர, வயிற்றுப் பூச்சி வராது; வயிறு தொடர்பான பிரச்னை இருக்காது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், சேரனுக்கு பனை மரம், சோழனுக்கு ஆத்தி மரம், பாண்டியனுக்கு வேப்ப மரம் போன்றவைகளே, இயற்கையின் அடையாளங்களாக இருந்து வந்துள்ளன.

இவற்றில் முதலில், வேப்ப மரங்கள் அடர்ந்த வேப்பந் தோப்பு உருவாக்க திட்டமிட்டு, அதில் எனக்கு வெற்றி. அடுத்து ஒரே இடத்தில், 1,000 பனை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்த எண்ணம் ஈடேறியதும், ஆத்தி மரங்கள் வளர்க்கும் பணியில் இறங்குவேன்.

--தினமலர் நாளிதழிலிருந்து.
 வேம்பு… தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!


Tuesday, 5 September 2017

விவசாயத்தை லாபகரமாக்கலாம்!

வெளிநாட்டு வேலை:

வெளிநாட்டு வேலையை உதறி, விவசாயம் செய்து லாபம் ஈட்டி வரும் வீரமணி: புதுக்கோட்டை, விராலிமலை அருகே, மீளவேலி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். டிப்ளமா மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து, நான்காண்டுகள் இங்கும், சிங்கப்பூரில் இரு ஆண்டுகளும் வேலை பார்த்தேன்; நல்ல வருமானம் கிடைத்தது. விவசாயிகளின் நிலை, மனதை பாதித்தது. வெளிநாட்டில், 14 மணி நேரம் வேலை பார்ப்பது போல, நம் ஊரில் வேலை பார்த்தால், விவசாயத்திலும் மாற்றத்தை உருவாக்க முடியும் என, தோன்றியது.


உறுதியான முடிவு:

ஊர் திரும்பி, வீட்டில் கூறியதும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
எங்கள் நிலத்தில், யூகாலிப்டஸ் மரம் பயிர் செய்திருந்தனர்; அது, மண்ணுக்கும், சூழலுக்கும் கெடுதல் தரக்கூடியது. விவசாயம் பார்க்க ஆரம்பித்ததும் அதை அழித்து, எலுமிச்சை பயிர் செய்தேன். அப்புறம், நிலத்தின் தன்மை, மண் வளத்தை கண்டறிந்து, ஆலோசனை பெற்று, கத்தரி, தக்காளி, வெண்டை, நெல் என, மாற்று பயிரிடல் முறையில் தொடர்ச்சியாக செய்து வருகிறேன். இதனால், ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கிறது. மேலும், தினசரி வருமானத்திற்காக கீரையும், நீண்ட நாள் பயிர்களான தென்னை, வாழை; தண்ணீர் வசதி இல்லாத வறட்சி காலங்களில், கள்ளிச் செடி, கற்றாழை என, பயிர் செய்வேன். வேலிக்கு பதிலாக தேக்கு, தென்னை வைத்துள்ளேன். இவ்வாறு சிறு முயற்சிகள் கூட வீண் போகாமல், வருமானத்தை கொடுக்கிறது.

சந்தைபடுத்துதல்: 

விவசாயம் லாபகரமாக இருக்க காரணம், என் தோட்டத்தில் விளையும் பொருட்களை வியாபாரிகளிடம் கொடுக்காமல், நேரடியாக சந்தைப்படுத்துவது தான். விவசாயம் எனில், நெல் தான் என இல்லை. காலத்திற்கேற்ப மாற்று விவசாயம் பண்ணலாம். நல்ல மழை பெய்தால் நெல், மழை குறைவாக இருந்தால் கம்பு, கேழ்வரகு, சோளம் போடுவேன். விவசாயம் செய்யும் போது, அது ஒருங்கிணைந்த பண்ணையாக இருந்தால், இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால், ஆடு, மாடு, கோழி வளர்க்கிறேன். அதன் மூலம் மண்ணுக்கு இயற்கை உரம் கிடைக்கிறது; வருமானமும் வருகிறது. விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்பதே, என் நோக்கம். அதன் மூலமாக, இதை முன்மாதிரி பண்ணையாக்கி,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


அரசு இயந்திரம் உதவினால்.........:

விவசாயம் நஷ்டமடைய, விவசாயத்துறை அதிகாரிகளும் முக்கிய காரணம். அரசிடம் நிறைய விவசாயம் சார்ந்த திட்டங்கள் இருந்தாலும், அது மக்களுக்கு தெரிவதே இல்லை அல்லது தெரிவதற்குள் கால அவகாசம் முடிந்து போகிறது. இப்போது நான், மாட்டுக்கு தீவனத்துக்காக விண்ணப்பித்துள்ளேன். அதற்கு சரியான பதில் கொடுக்காமல் அலைய விடுகின்றனர்.
படிப்பறிவு உள்ள என்னால் தேட முடியும், அலைய முடியும். வயதான, படிக்காத விவசாயிகள் என்ன செய்வர். இது போன்ற சிக்கல்களை தீர்க்க, அரசு முன்வந்தால் தான், விவசாயத்தை லாபகரமாக மாற்ற முடியும்.நிம்மதியான இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, கண்டிப்பாக விவசாயம் கொடுக்கும். விவசாயி என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

---தினமலர் நாளிதழிலிருந்து.



Sunday, 9 July 2017

நகரத்தார்களும் விவசாயிகளாகமாற வேண்டும்!

நாட்டு விதைகளை வாங்கி, விழாக்களில் இலவசமாக வினியோகம் செய்து, சமூக பணி செய்து வரும் வானவன்:

நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் நான். தற்போது, சென்னை, மாத்துாரில் வசித்து வருகிறேன்.
அப்துல் கலாமை விட இப்போதை நமக்கு தேவை,
நம்மாழ்வார் தான்.அப்துல் கலாம், கனவு காணச் சொன்னார்; வல்லரசு ஆக்க சொன்னார். இதெல்லாம் நல்லது தான். ஆனால், நம் வாழ்வாதாரங்களான விதை, நிலம், உணவு, உரிமையை இழந்து, அன்னிய தேசத்து கார்ப்பரேட் கம்பெனியிடம் கையேந்தி வல்லரசாகி என்ன பிரயோஜனம்?
நம் நிலத்தை, விதைகளை, சுற்றுச்சூழலை மீட்பது, இப்போதைய தேவை. தனி மனிதனாக என்ன செய்ய முடியும் என பார்த்ததில், நம் நாட்டு விதைகளை இலவசமாக வினியோகிக்க முடிவு செய்தேன். இந்த சிந்தனை,நம்மாழ்வாருடையது.

சென்னை மூலக்கடை, சிம்சனில் மெக்கானிக்காக உள்ள நான், மாதச் சம்பளத்தில், 1,500 ரூபாயை, விதை வாங்க செலவு செய்கிறேன். முசிறியில் விதைகளை வாங்கி வந்து, வீட்டில் மனைவி, மகளுடன், ஓய்வு நேரங்களில், திருநீறு பொட்டலம் போல், விதைகளை காகிதத்தில் மடித்து கட்டுவேன். அதன் மேல், அந்தந்த விதைகளின் பெயரை எழுதி, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு கொடுத்து, வீட்டு தொட்டியில் பயிரிடக் கூறுவேன். அப்போது அவர்களிடம், 'நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது போல், இதையும் ஒரு கடமையாக செய்யுங்கள். 10 வெண்டைக்காய் செடி முளைத்து, நீங்கள் அதிலிருந்து, ஒன்பது செடியின் காய்களை பயன்படுத்தினால், ஒரு செடியை விதைக்காக விட்டு விடுங்கள். அந்த விதையை மற்றவர்களுக்கு கொடுங்கள். இப்படித்தான் நம்முடைய விதைகளை காப்பாற்ற முடியும்' என கூறுவேன்.

ஒருமுறை ஹைபிரிட் விதை வாங்க போனேன். 100 கிராம், 400 ரூபாய் என்றனர். நன்றாக காய்க்கும்; நமக்கும் நல்ல லாபம். ஆனால், நாம் பயிரிட்டு வரும் காயிலிருந்து விதை எடுத்து போட்டால் முளைக்காது. திரும்பவும் அவர்களிடம் தான் விதையை வாங்க வேண்டும். அப்போது அவர்கள் வைத்தது தான் விலை. ஒரு கட்டத்தில் விதை தர முடியாது என்றால், நம் மக்கள் நிலை என்னாவது? இந்த கார்ப்பரேட் விதை பெருகும் போது, நம் விதைகள் காணாமல் போய்விடும்.

'வீடு மற்றும் 'ஏசி' என வாழ்ந்து, காய்கறி, பழம், உணவுக்கு இன்னொருவனிடம் கையேந்தினால் நன்றாகவா இருக்கும்?... அதென்ன வளர்ச்சி...' என தோன்றவே, மனது பொறுக்காமல் இதில் இறங்கி, நான்கு ஆண்டு ஆகிறது.

நீங்களும் நான்கு பிளாஸ்டிக் டப்பாவில், நான்கு விதமான செடியை போட்டு, மாடி மேல் வளர்த்து பாருங்கள். சிறுதுளி பெரு வெள்ளம் போல், உங்களிடம் இருக்கும் நான்கு விதை தான், நம் நாட்டை காக்கும் ரகசியம். இதெல்லாம் ஒரு வேலையா என நினைக்காதீர். இப்படித்தான் நகரத்தார்களும், மறைமுகமாக விவசாயிகளாக மாற வேண்டும்.
தற்போது நான், விவசாய தொண்டு அமைப்புடன் சேர்ந்து, சென்னையில் இருக்கும் மரங்களின் விதைகளை சேமித்து, விதைப்பந்து தயாரிப்பவர்களிடம் கொடுத்து வருகிறேன். நாம் வசிக்கும் சென்னையையாவது பசுமையாக வைத்துக் கொள்வோமே!

தினமலர் நாளிதழிலிருந்து.
  

17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர்.......?

தமிழகத்தில் 2000 முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர்தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2000 ல் 67 லட்சம் எக்டேர் சாகுபடி பரப்பாகஇருந்தது. இதில் 37 லட்சம் ஹெக்டேர் இறவை சாகுபடி யாகவும், 30 லட்சம் எக்டேர் மானாவாரியாகவும் இருந்தன.

மொத்தம் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மேற்கொண்டனர். லாபம் குறைவு, நகரங்களின் விரிவாக்கம்,விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, தொடர் வறட்சி, காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னை, நிலத்தடிநீர் பாதிப்பு, கடன் தொல்லை, நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்கள்ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் 17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டனர்.

இதனால் தற்போது சாகுபடி பரப்பும் 60.74 லட்சம் எக்டேராக சரிந்துள்ளது. அதேபோல் 81.18 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அதிலும் பலர் தங்களது நிலங்களை பிறருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு, பெயருக்கு மட்டுமே விவசாயிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: அரசு ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு, உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால் விவ சாயத்தை மீட்பதற்கான நீண்டகால திட்டம் இல்லை. நீர் மேலாண்மை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, கிணற்று பாசன சாகுபடி பரப்பும் கூட குறைந்து வருகிறது.

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை தீராததால், அதை நம்பியிருந்த பல விவசாயிகள் வேறுதொழிலுக்கு மாறிவிட்டனர். நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. மானியங்கள் கடைமட்ட விவசாயி வரை சென்றடைவதில்லை. லாபம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர், என்றார்.

விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல ஆண்டுகளாக தரிசாக விடப்பட்ட நிலங்களை மீட்க தற்போது நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் உழவு முதல் அறுவடை வரை ஏராளமான மானியத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன,' என்றார்.

தினமலர் நாளிதழிலிருந்து.
 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...