Sunday 10 November 2019

இயற்கை விவசாயத்தில் மனிதநேயம் உள்ளது!

பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஓவர்குடி விவசாயி, பரமசிவன்: எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், முழு நேரமாக விவசாயத்தை தான் மேற்கொள்கிறேன். எங்க குடும்பத்திற்கு சொந்தமாக, 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், பாரம்பரிய நெல் ரகங்களைத் தான் பயிரிடுகிறேன். இப்போது, 3 ஏக்கரில், மாப்பிள்ளைச் சம்பா; தலா, 1 ஏக்கரில், காட்டுயானம், கிச்சிலி சம்பா நெல் வகைகளை சாகுபடி செய்கிறேன். கிச்சிலி சம்பா, 135 - 140 நாட்கள்; மாப்பிள்ளை சம்பா, 160 - 165 நாட்கள்; காட்டுயானம், 180 - 185 நாட்களில் அறுவடைக்கு வரும்.

இது போன்ற பாரம்பரிய நெல் வகைகளில், இயல்பாகவே, களை, பூச்சி தாக்குதல் குறைவு; நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இந்த நெல் ரகங்கள், நல்ல உயரமான பயிராக வளரும். 50 - 60 நாட்களிலேயே, ஒன்றரை அடி உயரத்திற்கு பயிர் வந்து விடும்; நிழல் விழுவதால், களை ஏற்படாது. இயற்கை விவசாயத்திற்காக நிலத்தை பக்குவப்படுத்த, மாட்டு எரு, ஆட்டுக் கிடையில் கிடைக்கும் சாணம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே நிலத்தில் பயன்படுத்துவேன். படிப்படியாக கூடுதல் மகசூல் கிடைக்கிறது. நான் விளைவித்த பாரம்பரிய நெல்லை, அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக் கூட்டி, நேரடியாக விற்பனை செய்கிறேன். பலர் இங்கேயே வந்து, வாங்கிச் செல்கின்றனர்.

ஏக்கருக்கு, 21 மூட்டை நெல் கிடைத்தது. அதை காய வைத்து, சுத்தப்படுத்தியதில், 20 மூட்டை நெல் கிடைத்தது. அதில், 10 மூட்டையை, அவலாக மாற்றினேன். 300 கிலோ கிடைத்தது. 1 கிலோ, 100 ரூபாய் வீதம் விற்றதில், 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மேலும், 150 கிலோ தவிடு கிடைத்தது. அதை விற்றதில், 1,500 ரூபாய் வந்தது. ஒன்பது மூட்டை நெல்லை, மிஷினில் கொடுத்து, உமியை மட்டும் நீக்கி, அரிசியாக மாற்றியதில், 315 கிலோ அரிசி கிடைத்தது. கிலோ, 80 ரூபாய் வீதம், 25 ஆயிரத்து, 200 ரூபாய் கிடைத்தது. மீதமுள்ள, ஒரு மூட்டை நெல்லை காய வைத்து, விதையாக மாற்றி, 48 கிலோ விதையை, கிலோ, 60 ரூபாய்க்கு விற்றதில், 2,880 ரூபாய் வந்தது.  

இவ்வாறு, 1 ஏக்கரில், மொத்தமாக, 60 ஆயிரத்து, ௭80 ரூபாய் கிடைத்தது. செலவு போக, 32 ஆயிரத்து, 480 ரூபாய் லாபம் பார்த்தேன். இயற்கை விவசாயத்தை, தொழிலாக பார்க்கக் கூடாது. இதில், மனிதநேயம் உள்ளது. விஷமில்லாத உணவை உற்பத்தி செய்வதால், சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது. மேலும், லாபத்தையும் பார்க்கக் கூடாது. மண்ணை வளமாக்கி, எதிர் கால சந்ததியினருக்கு நல்ல, உயிருள்ள நிலத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அவசியம்!

தொடர்புக்கு: 99433 84204

--தினமலர் நாளிதழிலிருந்து
 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...