Sunday 10 November 2019

புதன், சனியில் எண்ணெய் தேய்த்துஆண்கள் குளிக்கணும்!

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்; எப்படி தேய்த்து குளிக்க வேண்டும்; குளித்த பின் என்ன செய்யக் கூடாது என்பது பற்றி, இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி: நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம். எண்ணெய் தேய்ப்பதை, முதலில் உச்சந்தலையில் இருந்து துவங்க வேண்டும்; உள்ளங்காலில் முடிக்க வேண்டும். குறிப்பாக, கண்கள், நாசி துவாரங்கள், காது, வாய், தொப்புள், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகளில், எண்ணெய் நன்றாக படும்படி தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்ததும், உடனே குளிக்கக் கூடாது. 10 முதல், 30 நிமிடங்கள் வரை ஊறிய பின், மிதமான சுடுநீரில், சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிப்பதை, காலை, 7:30 மணிக்குள் முடித்து விட வேண்டும்.புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால், உடல் சருமத்தின் மேற்பரப்பில் வாழும், கண்ணுக்குத் தெரியாத நோய் அணுக்கள், பிராண வாயு கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதனால், உடலில் நோய் தொற்றுவதில்லை. கண், மூக்கு, காது, நாக்கு, வாய் ஆகியவற்றில் பலமும், தெளிவும் கிடைக்கும்; உடலுக்கு வலிமை கிடைக்கும்.

தலையில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்; ஆயுள் விருத்தி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நாற்றம் மறைந்து, மணம் கிடைக்கும். சருமத்தின் ஈரத்தன்மை பராமரிக்கப்படும். உயர் ரத்த அழுத்த நோய்கள் குணமாகும். எண்ணெய் குளியல் நல்லது தான் என்றாலும், மழைக்காலங்களில், மாலை, 6:00 மணிக்கு மேல்; காய்ச்சலின் போது; விரத நாட்களில்; மாதவிடாய் காலங்களில்; உடலுக்கு சுகம் இல்லாத நாட்களில் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில், பகலில் உறக்கம் கூடாது. மது, மாமிசம், ஐஸ்கிரீம், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்தவரை, மொச்சை, நீர் காய்கறிகளை உண்ணக் கூடாது. அந்த நாட்களில், உடலுறவை தவிர்க்க வேண்டும்!

--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...