Monday 6 August 2018

உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....

மாடித் தோட்டத்தை பராமரித்து வரும், 75 வயதான, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்: மெட்ரோ வாட்டர் போர்டில், இன்ஜினியராக இருந்த நான், 25 ஆண்டு பணி முடித்து, விருப்ப ஓய்வு பெற்று, சொந்த தொழில் ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன், அதையும் மூடி, இப்போது ஓய்வில் இருக்கிறேன். சொந்த தொழில் நடத்திய சமயத்திலேயே, மாடித் தோட்டம் ஆரம்பித்து விட்டேன்.


செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் வாளி, பைகளை தான் பயன்படுத்துகிறேன். வாளி, பையின் பக்கவாட்டில், சிறு துளை போட்டு, மணல், செம்மண், தேங்காய் நார், மாட்டு எரு, மண்புழு உரம் நிரப்பி, விதைப்பேன். வீணாகும் காய்கறிகள், மட்கின இலை தழைகளை, செடிகள் இருக்கும் தொட்டிகளில் போடுவேன். தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவேன்.

பருப்புக்கீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், துாதுவளை, புளிச்சகீரை, புதினா, தக்காளி, கத்திரி, குடை மிளகாய், பிரண்டை, காராமணி, துளசி, திருநீற்றுப் பச்சிலை, சோற்றுக் கற்றாழை, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, வாழை, கீழாநெல்லி, இன்சுலின் செடி, வெற்றிலை என, பல செடிகள் உள்ளன. மல்லிகை கொடி கீழிருந்து, மூன்றாவது மாடி வரை படர்ந்து உள்ளது. 

ஒரு வாளியில், ஒரு வகை விதையை மட்டும் தான் விதைப்பேன். செடிகளில் ஊட்டம் குறையும் போது, 20 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து விடுவேன்.பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, அவ்வப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன். 20 நாட்களுக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி, இ.எம்., கரைசல் கலந்து தெளிப்பேன். வெயில் காலத்தில் செடி வாடாமல் இருக்க, நிழல் வலை அமைத்துஉள்ளேன்.

இயற்கையில் விளையும் காய்கறிகள், நல்ல சுவையுடன் உள்ளன. அன்றன்றே பறித்து, புத்துணர்ச்சியுடன் ஒரு கீரையை உணவில் சேர்க்க முடிகிறது. பக்கத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, தினமும் வீட்டில் இருந்து பூ பறித்து எடுத்து போவேன். வாளி, பைகளை பலகை மேல் வைத்துள்ளதால், தரைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என் மாடித் தோட்ட ஆர்வத்தை பார்த்து, 'ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்' அமைப்பினர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்து உள்ளனர்.

தினமும் தோட்டத்தில் வேலை செய்வது, உடற்பயிற்சியாக இருப்பதுடன், நமக்கு தேவையானதை, நாமே உற்பத்தி செய்வதும், மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதிலும் உடம்பும், மனதும் எப்போதும் தெம்பாக இருப்பதற்கு காரணம், இந்த செடிகள் தான். தொடர்புக்கு 94449 26128
--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...