Sunday 9 July 2017

17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர்.......?

தமிழகத்தில் 2000 முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர்தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2000 ல் 67 லட்சம் எக்டேர் சாகுபடி பரப்பாகஇருந்தது. இதில் 37 லட்சம் ஹெக்டேர் இறவை சாகுபடி யாகவும், 30 லட்சம் எக்டேர் மானாவாரியாகவும் இருந்தன.

மொத்தம் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மேற்கொண்டனர். லாபம் குறைவு, நகரங்களின் விரிவாக்கம்,விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, தொடர் வறட்சி, காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னை, நிலத்தடிநீர் பாதிப்பு, கடன் தொல்லை, நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்கள்ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் 17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டனர்.

இதனால் தற்போது சாகுபடி பரப்பும் 60.74 லட்சம் எக்டேராக சரிந்துள்ளது. அதேபோல் 81.18 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அதிலும் பலர் தங்களது நிலங்களை பிறருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு, பெயருக்கு மட்டுமே விவசாயிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: அரசு ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு, உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால் விவ சாயத்தை மீட்பதற்கான நீண்டகால திட்டம் இல்லை. நீர் மேலாண்மை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, கிணற்று பாசன சாகுபடி பரப்பும் கூட குறைந்து வருகிறது.

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை தீராததால், அதை நம்பியிருந்த பல விவசாயிகள் வேறுதொழிலுக்கு மாறிவிட்டனர். நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. மானியங்கள் கடைமட்ட விவசாயி வரை சென்றடைவதில்லை. லாபம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர், என்றார்.

விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல ஆண்டுகளாக தரிசாக விடப்பட்ட நிலங்களை மீட்க தற்போது நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் உழவு முதல் அறுவடை வரை ஏராளமான மானியத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன,' என்றார்.

தினமலர் நாளிதழிலிருந்து.
 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...