Thursday 27 July 2017

தன்னையறிதல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

செவிவழி கேட்பதென்பது படிப்பின் வழி அறிவதைவிடவும் இனிமையான ஒன்று. தன்னையறிதல் பற்றி அறிந்தவர்கள் கூறியதாக படித்ததுண்டு, கேட்டதுண்டு ஆனால் தன்னையறிந்தவரே கூறிகேட்பதென்பது மிகப்பெரிய அனுபவம்தானே. அந்த வகையில் தன்னையறிதல் பற்றி கேட்டதில் என்னை பாதித்த மிக பிடித்தமான பேச்சு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுடையது.

வாழ்க்கையின் பல கட்டங்களில் பல கேள்விகள்  எழும், அப்படி எழும் கேள்விகளுக்கு பதில்களும் கிடைக்கிறது. பூட்டு விற்பவர் சாவியையும் சேர்த்துதானே விற்கிறார் அது போல உண்மையான தேடுதல் உணர்வோடு கேள்வி (இதை தான் ஓஷோ களங்கமற்ற வினா என்கிறார்) எழுந்தால் அதற்குரிய பதிலும் கிடைக்கும். ஆனால் எப்போது, எப்படி கிடைக்கும் என்று தெரியாது அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே.

உதாரணமாக "நாம் எதற்கு உழைக்க வேண்டும்?" என்ற கேள்வி பலமுறை தோன்றியதுண்டு. எதற்கு? சம்பாதிக்க, வாழ்க்கையில் முன்னேற, எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க, உழைப்பின் வெற்றியை ருசிக்க, மற்றவர்களுக்காக இப்படி எந்த பதிலும் எனக்கு திருப்தியாக தோன்றவில்லை. இதற்கு பதில் ஒரு முறை சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவில் கிடைத்தது.


இதனால் சுகிசிவம் அவர்களின் ஒளிப்படங்கள் மேலும் சிலவற்றை தேடி கொண்டிருந்தபோது கிடைத்ததுதான் 2002 ம் வருடத்தின் பாலகுமாரன் அவர்களுடைய "உன்னையறிந்தால்" தலைப்பிலான சொற்பொழிவு. சிங்கப்பூரில் நடந்த இந்த சொற்பொழிவில் எழுத்தாளர் சிவசங்கரி, சுகிசிவம் மற்றும் பாலகுமாரன் ஆகியோர் உரையாற்றினர்.

என்ன ஒரு உரை!!! என்ன ஒரு ஆற்றல்!!! புதிதாக எதுவும் கிடையாது, அவருடைய வாழ்க்கை வரலாறுதான். பல உரைகளில் பேச்சாளர்கள் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதை விளக்கி விவரிப்பார்கள். ஆனால் இவரோ தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்குகிறார். நமது மனதின் அடிநாதம் எது? தன்னையறிதலை  எங்கிருந்து துவக்குவது என்ற ஆரம்ப புள்ளியை மிக தெளிவாக சுட்டி காட்டுகிறார். 

அந்த 40 நிமிட உரை முழுமையும் மனம் வேறெங்கும் போகாது, 'இவர் இல்லாததை சொல்கிறாரோ?' என்ற எண்ணம் தோன்றாது. அந்த உரையை கேட்க்கும் போது, நமது மனதின் கண்ணை கட்டி கூட்டிப்போகும்படியான ஒரு அருமையான அனுபவத்தை உணர்வீர்கள். மீண்டும் அதே உரையை 13 வருடங்கள் கழித்து கோவையிலும் பேசியிருக்கிறார் கேட்டு பயன்பெறுங்கள்.

  1. Unnaiyarinthaal-Ezhuthu sidhar Balakumaran(உன்னையறிந்தால் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்) (2002 Singapore Speech)
  2. Writer Balakumaran speech on Guru Darisanam in Coimbatore 2015 
தன்னையறிதல் என்றால் என்ன? எதற்கு தன்னை அறிய வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது? தன்னையறிந்து கொண்டால் சாமியாராகத்தானே போக முடியும் அது எதற்கு இப்போது? போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகிறது இவரது உரை. தன்னையறிதலுக்கு உணர்வளவில் ஒரு விழிப்பு நிலை தேவை, அந்த நிலையை அடைந்துவிட்டால் இந்த உலக வாழ்வில் நாம் மிகச்சிறந்த செயல்களை செய்ய முடியும், வாழ்வே எளிமையாகி விடும்.



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...