Tuesday 28 April 2020

காய்கறி இலவசம்!!!!!!

கிராமத்தில் புறம்போக்காக கிடந்த நிலத்தில், காய்கறி பயிரிட்டு, விளைச்சலை கிராம மக்களுக்கே இலவசமாக வழங்கி வரும், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வ.வேப்பங்குடி கிராமத்து இளைஞர், அமெரிக்காவில் வேலை பார்க்கும், நரேந்திரன் கந்தசாமி: கரூர் மாவட்டம், எப்போதுமே வறட்சியானது. அதிலும், எங்கள் ஊர், கடும் வறட்சி உடையது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பின்தங்கிய கிராமம். கடந்த, 2010-ல், ஆஸ்திரேலியா நாட்டில், கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை கிடைத்தது. தொடர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றேன்.சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கைச் சூழலை பார்த்து தான், 'நம்ம ஊரையும் இப்படி மாற்ற வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

அதையடுத்து, கடந்த, 2017ல், பூவரசு, ஆலம், அரசு, வாகை, வாதாம், வாதநாராயண மரம், வேம்பு என, பல வகை மரங்களை, 10 அடி வளர்த்து, ஊர் முழுக்க நட்டோம். பொது இடங்களில், 500-க்கும் மேற்பட்ட மா, பலா, வாழை, கொய்யா மரக்கன்றுகளை வளர்த்தோம். போன வருஷம், இயற்கை காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். எங்கள் ஊர் மண்ணில் எதுவும் விளையாது; மண்ணை மாற்றிய பின், காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றனர். ஆனால், நாங்க அப்படிச் செய்யவில்லை. ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, மண்ணை மாற்றினோம்.அந்த தோட்டத்துக்கு, 'சமுதாய காய்கறித் தோட்டம்' என, பெயர் வைத்தோம்.

கத்திரி, பீர்க்கங்காய், வெண்டை, துவரை, தக்காளி, மிளகாய், முருங்கை, அவரை, வெண் பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், தண்டுக்கீரை, செங்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கேரட், பீட்ருட் என, எல்லா காய்கறி, கீரைகளும் காய்ப்புக்கு வந்து விட்டன.இப்போது, ஊர் மக்களே, தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது என, எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

வாரம் இரண்டு தடவை, கிராமத்து இளைஞர்கள் வேல்முருகன், காளிமுத்து போன்றோர், எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை கொடுப்பர். காய்கறி தேவைப்படுவோர், தேவையான காய்கறிகளை, தாங்களாக வந்து பறித்து செல்வர். இப்படி, இதுவரை, 3,000 கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். இதை பார்த்து, வெளியூர் மக்கள் சிலர், அவர்களின் ஊர்களிலும், இலவச, இயற்கை தோட்டத்தை போடத் துவங்கி விட்டனர்.

கொரோனா வைரஸ், உலகத்தையே உலுக்கிய போது, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஆனால், எங்கள் ஊர் மக்கள், எந்தக் கவலையும் இல்லாமல், சமுதாய காய்கறி தோட்டத்தில், காய்கறிகளைப் பறித்து, சமைத்து சாப்பிட்டு, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர்!

--தினமலர் நாளிதழிலிருந்து



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...