Wednesday 13 June 2018

பிறருடைய ATM அட்டையைப் பயன்படுத்தலாமா?

பகிரப்பட வேண்டிய செய்தி, கிரி அவர்களின் தளத்திலிருந்து ......

2013 ம் ஆண்டு பெங்களுருவில் ஒருவரின் மனைவி பிள்ளைப்பேறு நிலையில் இருந்ததால், அவரால் வெளியே சென்று பணம் எடுக்க முடியாததால் கணவனிடம் தன்னுடைய SBI ATM அட்டையைக் கொடுத்து 25,000 எடுக்கக் கூறி இருக்கிறார்.

கணவர் பணம் எடுக்கும் போது பணம் எடுக்கப்பட்டதாகச் சீட்டு மட்டும் வந்துள்ளது ஆனால், பணம் வரவில்லை. இவரும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க, அவர்கள் தொழில்நுட்ப கோளாறாகி இருக்கும், இரு நாட்களில் வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் பணம் வராததால் வங்கியில் சென்று கேட்டதும், பணம் வழங்கப்பட்டது என்று கூற, இவர்கள் இருவரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நுகர்வோர் நீதிமன்றம்
பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து CCTV யில் கணவர் பணம் எடுக்கும் போது பணம் வெளியே வராததையும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த நாளில் 25,000 அதிகம் இருப்பு ஆகி உள்ளது என்பதை நிரூபித்தும் SBI ஒத்துக்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நடந்த வழக்கில்,
பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை (Log) SBI சமர்பித்து, சட்டப்படி ஒருவருடைய ATM அட்டையையும் PIN யையும் இன்னொருவரிடம் கொடுப்பது தவறு எனவே, எங்கள் வங்கி தவறுசெய்யவில்லை” என்று வாதிட்டது.

தன்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால் “Self Cheque” அல்லது அனுமதிக் கடிதம் கொடுத்து மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கூறி விட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ATM அட்டையைச் சம்பந்தப்பட்டவர் தவிர வேறு யாரும் பயன்படுத்துவது சட்டப்படி தவறு எனவே, SBI வங்கி பணத்தைத் தரவேண்டியதில்லை என்று கூறி விட்டது  .
₹25,000 கண் முன்னாடி இருந்தும் சட்ட சிக்கலால் எடுக்க முடியாமல் போனது.

சரி இது போலச் சூழ்நிலை அமைந்தால் என்ன வழி?
காசோலை பயன்படுத்துவது நல்ல யோசனை தான் என்றாலும், ஒருவேளை அப்போது வங்கி திறந்து இருக்கவில்லை என்றால் பிரச்சனை.
எனவே, UPI பரிமாற்றமே சிறந்தது.

அதாவது உங்களுடைய கணக்குக்குச் சம்பந்தப்பட்டவரின் கணக்கில் இருந்து பணத்தை UPI (BHIM, PhonePe, Google Tez, WhatsApp) செயலிகள் மூலம் அனுப்பி உங்கள் சொந்த ATM அட்டையின் மூலமாகப் பணம் எடுத்துக் கொடுத்து விடலாம்.

இது போல அவசரத்துக்கு எடுக்கப்படும் பணம் அதிகபட்சம் 25,000 க்கு மேல் இருக்காது. எனவே, பிரச்சனைகள் இல்லை. UPI பரிவர்த்தனைக்கு கட்டணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள், அவர்களையும்  எச்சரிக்கைப்படுத்துங்கள்.



2 comments:

  1. உங்களது பதிவு அனைத்தும் இயற்கையை பேணி காப்பதற்காக எடுக்கும் வழிமுறையாக உள்ளன. மிக்க நன்று.
    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் சிவா, தாய்மொழிப்பற்று, சுயசார்பு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கையைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் எனக்கு அதிக ஈடுபாடு உள்ளது. தாங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்க்கும் நன்றிகள்.

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...