Sunday 6 September 2015

தலைமலை பயண அனுபவம்: 3

நேர்த்திக்கடன்: அங்கு வரும் மக்களுக்கு ஒரு பழக்கமுண்டு, வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு குறை இருந்தால் அது தீர்ந்தவுடன் நேர்த்திகடனாக மாடுகளையோ அல்லது கன்றுகளையோ நேர்ந்து விடுவதாக வேண்டிகொள்வார்கள், குறிப்பாக மாடுகளைத்தான் இவ்வாறு கொண்டுவந்து விடுவார்கள். மாடுகள் மலை ஏறி வருவதற்கு மிகவும் சிரமப்படும், அவற்றை வற்புறுத்தி ஏற்றி வருவார்கள்.அவ்வாறு வரும் மாடுகளை கோவில் நிர்வாகம் ஏலம் விட்டுவிடுவார்கள்.ஏலம் போன மாடுகளை    மீண்டும் கீழே இறக்கி வருவார்கள், அதற்க்கு கீழேயே ஏலம் விடலாம். ஏலம் போகாத மாடுகள் மலையை சுற்றி திரியும். இந்த காலத்தில் மட்டுமே அவற்றிற்கு உணவு கிடைக்கும் மற்ற காலங்களில் எதை தின்பது என்று தெரியாமலே கிடைக்கும் சாப்பாடு, பாலிதீன் பை என்று தின்று தீர்க்கும். இதனை ப்ளுக்ராஸ் அமைப்பிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணனுக்கு மிகுந்த வருத்தம். சாப்பிட்ட பின் மீதமிருந்ததை மாடுகளுக்கும் குரங்குகளுக்கும் கொடுத்துவிட்டு மாலை 5  மணியளவில் குளகரையிலிருந்து கோவிலுக்கு செல்ல தயாரானோம். 

மாலை நேரம்:  காலையில் பார்த்த குளக்கரை இப்போது ஆளரவமற்ற பகுதியாக மாறியிருந்தது. கடை வைத்திருந்தவர்களும் கிளம்பிகொன்டிருன்தனர். இப்போது காலையில் இருந்தது போல மேகமூட்டம் இல்லாமல் சற்று தெளிவாக இருந்தது, தூரத்து நிலபகுதிகளை ஓரளவிற்கு பார்க்க முடிந்தது. மலையுச்சியும், கோவில்பகுதியும் மாலை நேரத்து பொன்னிற சூரிய கதிர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குளகரையிலிருந்து அடிவாரம் வரை எங்கும்  நிழல் படர்ந்திருந்ததை  பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. இப்போது கோவிலில் 25-30 பேர்தான் இருந்தோம். 6 மணிக்கு ஏற்றுவதாக இருந்த திருக்கோடி 7 மணிக்கு என தெரிவித்தார்கள். "இன்னும் ஒரு மணி நேரம் எப்படி போகப்போகிறதோ?" என்று யோசித்தேன், ஆனால் அந்த ஒரு மணி நேரம் தான் அந்த நாளின் பொன்னான தருணம்.  

மலை உச்சி: பிரகாரத்தை சுற்றி வந்த போது விமானத்தில் ஏறுவதற்கு ஏணி வைத்திருந்தார்கள், அதனால் நானும் அண்ணனும் கோவில் மேல் தளத்திற்கு ஏறிவிட்டோம் எங்களுக்கு முன்பே இருவர் அங்கு இருந்தனர். மேற்தளத்தில் சுற்றிலும் கைபிடிசுவரோ அல்லது கேட்டோ(gate)  எதுவுமே இல்லை. ஓரத்திற்கு சென்று பள்ளத்தை எட்டிப்பார்க்க முயன்ற என்னை பெரியப்பா வந்து திட்டி நடுவில் வந்து நிற்க சொன்னார். அவர் சென்ற பிறகு மீண்டும் சென்று இந்த முறை அமர்ந்து எட்டி பார்த்தேன் அம்மாடி! எவ்வளவு பெரிய பள்ளம்தலை சுற்றுவது போன்று இருந்தது. அப்பொழுது மணி மலை 6.15 இருக்கும் மிகவும் ஆனந்தமான தருணம் அது. மலையின் மீது கோவிலின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காவிரி ஆறு, மாலை கதிரவனின் மஞ்சள் வெயிலில் பொன் நிறமாக தெரிந்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
இந்த அழகை ரசிக்கத்தான் இத்தனை நேரம் காத்திருந்தேனா? காத்திருத்தலின் சுகம் இதுதானா? என்று தோன்றியது.
திருக்கோடி: ஏணி அருகில் அமர்ந்து நானும் அண்ணனும் பேசிகொண்டிருந்தோம். திருக்கோடி ஏற்ற திரி தயாராகிகொண்டிருந்தது. அந்த கொப்பரை 40 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 6.30 மணிக்கு திருக்கோடி போடுவதற்காக திரி தயாராகிஇருந்தது, கொப்பரைக்குள் 5 லிட்டர் எண்ணை ஊற்றினார்கள். கடைகளில் எண்ணை டின்களில் தூக்குவதற்கு நடுவில் கட்டை வைதிருப்பர்களே அது போல இந்த கொப்பறையிலும் இரும்பு கம்பி கொடுத்திருந்தார்கள். தயார் செய்த தடிமனான திரியை இரும்பு கம்பி மேல் வைத்து அதன் மேல் சிறிய குச்சிகளை பரப்பிவைத்து   அதன் மேல் பருத்தி கொட்டைகளை வைத்து எண்ணை ஊற்றி அதன் மேல் மற்றொரு நீளமான திரியை, கொப்பரையில் உள்ள எண்ணையை தொடுமளவிற்கு,  வைத்து விடுவார்கள். இரும்பு கம்பியின் மேல் வைத்த தடிமனான முதல் திரியின் ஒரு முனையை பற்ற வைப்பார்கள், தடிமனான திரி எரிந்து முடித்து நீளமான திரி உள்ளே உள்ள எண்ணையை  இழுத்து கொண்டு எரிய ஆரம்பிக்கும். "கோவிந்தா கோவிந்தா ஏழுகுண்டலவாசா  கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்தோடு 7 மணியளவில் திருக்கோடி ஏற்றப்பெற்றது.

  (திருக்கோடி
 (source:http://www.thalaimalai.com/gallery.html)

மலை இறங்குதல்: அப்போதுதான் மலையை சுற்றிலும் உள்ள கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதை கவனித்தேன் ஆம் மின் வெள்ளத்தால். Notebook அட்டையில் நியூயார்க் நகரின்  இரவு நேர படம் இருப்பதை போல இருந்தது. Torchlight  உதவியுடன் இறங்க ஆரம்பித்தோம் அடிவாரத்திற்கு வரும் போது இரவு 8.30 மணி.  அங்கிருந்த ஒற்றை மின்கம்ப வெளிச்சத்தில், மண்டபத்தில்  ஒரு முதியவர் மட்டும் படுத்திருப்பது தெரிந்தது. சுத்தமாக வாகன போக்குவரத்தே கிடையாது  நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு சென்று பேரூந்து வசதியை பற்றி பெரியப்பா விசாரிக்கும் போது மணி 9. நீலியாம்பட்டிக்கு செல்லுங்கள் 9.30 மணிக்கு அடுத்த பேரூந்து வரும் என்று சொன்னார்கள். 3 கி.மீ தான் என வேக வேகமாக நடந்தோம். வழியெங்கும் நாய்களின் குறைப்பு, torchlight சார்ஜ் தீர்ந்துவிட்டது மேலும் வழியில் விசாரித்தவர்கள் அனைவரும்  இந்தா வந்துவிடும், அந்தா வந்துவிடும், அருகில்தான் இருக்கு என்றார்கள் நடக்கிறோம் நடக்கிறோம் ஊர் வந்த பாடில்லை  ஒரு வழியாக வியர்க்க விறுவிறுக்க 9.40 க்கு நீலியாம்பட்டியை அடைந்தோம், பார்த்தல்  நடந்து வந்தது 5 கி மீ. 

திண்ணை தூக்கம்: வண்டியை பற்றி விசாரித்தால் இப்பதானுங்க போகுது அடுத்து 10.30 க்கு தான் என்றார்கள். தொடக்கப்பள்ளி திண்ணையில் அமர்ந்தோம் பயங்கர அசதியாதலால் பெரியப்பா படுத்து தூங்கிவிட்டார் நானும் அண்ணனும் அமர்ந்தவாறே தூங்கிவிட்டோம். முசிறியிலிருந்து பவித்திரம் செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது நாங்கள் பவித்ரம் சென்று அங்கிருத்து துறையூர் செல்ல வேண்டும். 30 நிமிட ஆழ்ந்த தூக்கம் பின் முசிறி செல்லும் வண்டியின் சத்தம் கேட்டு விழித்துகொண்டோம், அதற்க்கு மேல் தூக்கம் வரவில்லை. 10.15 இருக்கும் அருகில் இருந்த வீட்டில் பேச்சு குரல் கேட்டது, அவர்களை அழைத்து தண்ணீர் கேட்டேன்  அவர்களும் முகம் சுளிக்காமல், முனகாமல் தண்ணீர் தந்தனர், குடித்து விட்டு, waterbottleல் நிரப்பிக்கொண்டு வருவதற்கும் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. வண்டியில் செல்வது குதிரை வண்டியில் செல்வது போல் இருந்தது, ஓட்டுநர், நடத்துனர் சேர்த்து 6 பேர்தான் வண்டியில், தூக்ககலக்கத்துடனேயே 11.05க்கு பவித்ரம் வந்து இறங்கினோம். 

தொடர்வோம்.....


தலைமலை பயண அனுபவம்: 1
தலைமலை பயண அனுபவம்: 2
தலைமலை பயண அனுபவம்: 4

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...