Wednesday 13 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 3

1) உழவுக்கும் உண்டு வரலாறு:

 கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடிய போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. தனது அனுபவங்களையும், பசுமை புரட்சிக்கு முன்னும் பின்னும் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், லாபகரமான விவசாய முறைக்கு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் நம்மாழ்வாரின் பார்வை வழியே விளக்குகிறது இந்தப்புத்தகம்.

2) ஒற்றை வைக்கோல் புரட்சி: 
நம்மாழ்வார் அவர்கள் மிகவும் மதித்த,இயற்க்கை விவசாய ஆசான்களுள் மசானபு ஃபுகோகாவும் ஒருவர். அவர் எழுதியதுதான் இந்த ஒற்றை வைக்கோல் புரட்சி. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு "இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்" என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.
 சரியாகக்கூற வேண்டுமானால் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்று தான்.இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டு பிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது.ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்றையை ஆக்கிரமித்து அதை "மேம்படுத்து"வதில் அல்ல.

3) இந்தியன் ஆவது எப்படி?:
இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது. இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் இந்திய கட்டடங்கள் மேற்கத்திய பாணியில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இன்றும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஹாலிவுட்டைக் காப்பி அடித்துத்தான் எடுக்கப்படுகின்றன. நாஜிக் கொடுமைகள் பற்றி எடுக்கப்படும் படங்களை வாய் பிளந்து ரசிக்கும் நம்மால், பிரிவினைக் கால சோகம் பற்றி உருப்படியாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.


உஸ்தாத் அம்ஜத் அலிகானைப் பார்த்து நீங்கள் எந்த இசைக்கருவியை இசைக்கிறீர்கள்? என்று கேட்பவர்தான் பிரிட்டனின் கலாசார  உறவுகளுக்கான மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? இன்னும் சொல்லப்போனால், இந்த வீழ்ச்சி நம்மால் உண்மையில் உணரப்பட்டிருக்கிறதா? நேற்றைய காலனிய சுனாமியின் அடுத்த அலையாக உலகமயமாக்கல் இன்று நம்மை மூழ்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் இருந்து இந்தியா எப்படி மீள முடியும் என்பதை ஆசிரியர் கலை, கலாசாரத் துறையில் நாம் அடைந்த உச்சத்தையும்  இன்றைய நிலையையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். உலகத் தலைமையை ஏற்பது குறித்த நம் கனவுகள் நனவாகவேண்டுமென்றால், முதலில்  இந்தியனாக நாம் ஆகவேண்டும் என்ற முக்கியமான கடமையை ஆசிரியர் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

4) ஒரு யோகியின் சுயசரிதம்:

இப்புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகின்ற மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த, உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.

5) சிவா முத்தொகுதி:
எந்த புத்தகத்தையும் தமிழில் படிக்கத்தான் பிடிக்கும், நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் இதை ஆங்கிலத்தில் படித்தேன். மிகவும் நேர்த்தியான பாத்திர படைப்புகளுடன் விறுவிறுப்பான எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ள நாவல். பொன்னியின் செல்வன், யவண ராணிக்கு அடுத்ததாக விரும்பி படித்த நாவலிது.

அமீஷின் சிவா முத்தொகுதி, புராண கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வரலாற்றில் உலவ விடும் புனைவிலக்கியம். திபெத்திய காட்டுவாசியாக மெலூஹாவுக்குள் நுழையும் சிவன், நீலகண்டராகி மெலூஹ மக்களான சூர்யவம்சிகளுக்கெதிராக செயல்படும் சந்திரவம்சிகளை, சூர்யவம்சி படையை வழிநடத்திச் சென்று துவம்சம் செய்வதோடு 'மெலூஹாவின் அமரர்கள்' நிறைவடைகிறது. சந்திரவம்சிகளுக்கும் நாகர்களுக்கும் என்ன சம்பந்தம்? மந்தரமலைத் தகர்ப்பின் பின்ணணி என்ன? சதியைக் குறி வைக்கும் நாகன் யார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தேடி சிவன் நாகர்களின் தலைநகரான பஞ்சவடிக்கு மேற்கொள்ளும் பயணமே 'நாகர்களின் இரகசியம்'. ஒரு வழியாக தீமையைக் கண்டறிந்து, அதை அழிப்பதற்காக சிவன் புனிதப் போர் நடத்துவதே 'வாயுபுத்ரர் வாக்கு'. வரலாறு, புராணம், அறிவியல் என அமீஷ் கலந்து கட்டி அடித்திருப்பதால் விறுவிறுப்புக்கும், விஷயங்களுக்கும் பஞ்சமில்லை. 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...