Wednesday 13 July 2016

டெல்லி விசா (VISA)அனுபவம்

கடந்த வருடம் நெதர்லாந்து விசாவுக்காக  காத்திருக்கும் போது, நெதர்லாந்து தூதரகத்திலிருந்து நேர்முக விளக்கம் வேண்டி திடீரென டெல்லி வர சொல்லி இருந்தார்கள். ஜூன் 18 நேர்முக விளக்கம், 17 ஆம் தேதி அவசர அவசரமாக விமானச் சீட்டு பதிவு செய்து அன்று மாலையே குவாஹாத்தியிலிருந்து கிளம்பினேன், சேர்த்து வைத்திருந்த பணத்தில் 20,000 காலி. 8 வயதில் முதல் முறையாக டெல்லி சென்றது அதன் பிறகு இப்போது 22 வருடம் கழித்துச் செல்கிறேன், அந்த வயதில் பார்த்த எதுவும் இப்போது ஞாபகம் இல்லை.

18 காலை டெல்லி விமான நிலையம் சென்றடைந்து, அங்கிருந்து Doualakuan station வரை மெட்ரோ ரயிலில் சென்று பின் ஆட்டோ பிடித்து நெதர்லாந்து தூதரகம் செல்லும் போது மணி காலை 9.30.  நல்ல  வெயில், காலை 10 மணிக்கு சந்திக்க சொல்லி முன் அழைப்பில் இருந்தது. Conferenceக்கு செல்ல விசா விண்ணப்பித்திருந்தேன், அங்கு சென்று பேசப்போகும் எனது வேலை பற்றிய இணைப்பை விசா விண்ணப்பத்தில் இணைக்கவில்லை அதனால்தான் இந்த நேர்முக விளக்க அழைப்பு, பொதுவாக நெதர்லாந்து விசாவிற்க்கெல்லாம் நேர்முகத்திற்கு அழைக்க மாட்டார்கள (2015 நிலவரம் தற்போது மாறியிருக்க கூடும் )

தூதரகம் அருகிலேயேதான் விசா அலுவலகமும், சுற்றிலும் பலத்த பாதுகாப்பு, வாயிற் காவலரின் பரிசோதனைக்குப் பிறகு கொண்டுசென்ற பொருட்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி தேவையானதை மட்டும் எடுத்து சென்றேன், வழமை போல இந்த முறையும் ஒரு முக்கியமான கடிதத்தை மறந்து வைத்துவிட்டு வந்திருந்தேன், அது தூதரகத்திலிருந்து அனுப்பிய அழைப்பு கடிதம். ஒரு வழியாக கடிதம் இல்லாமலே நேர்முக விளக்கம் பெற்று அனுப்பி வைத்தார்கள். செல்லும் நோக்கத்தை பற்றி தெளிவாக சொன்னவுடன் வேறெதுவும் கேட்கவில்லை.

எல்லாம் முடிந்து வெளியில் வரும் போது ஒரு ஆட்டோ நின்றிருந்தது, ரயில்நிலையம் அருகில் ஒரு ஹோட்டலில் விடும்படி கேட்டுக்கொண்டேன். ஆட்டோக்காரர் என்னை கொண்டு வந்து பாஹர்கன்ச்சில் (Paharganj) ஒரு ஹோட்டலில் விட்டு சென்றார். சுமாரான அறை, எல்லாம் சேர்த்து (Service tax, 1 வேலை சாப்பாடு) 1000 ரூபாய் ஒரு நாளைக்கு. அடுத்த நாள் செல்ல ரயிலில் பயணசீட்டு கிடைக்காமல், விமானத்திலேயே மீண்டும் முன்பதிவு செய்தேன். இனி எந்த வேலையும் இல்லை என்பதால் நன்றாக தூங்கி எழுந்து மாலையில் சென்று connaught place ஐ ஒரு முறை சுற்றி வந்தேன், இரவு நல்ல உறக்கம்.

19 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விமானம், காலை 10 மணிக்கு எல்லாம் அறையை காலி செய்து கிளம்பிவிட்டேன். என்னிடம் இப்போது 700 ரூபாய் மட்டுமே இருந்தது, சாப்பாட்டிற்கு அதிகம் செலவழிக்க வேண்டாமே என்று NDLS ரயில்நிலையம் எதிரே இருந்த ஒரு சிறு உணவகத்தில் சென்று ஒரு செட் பூரி சாப்பிட்டு "விலை என்ன?" என்று கேட்டால் 150 ரூபாய் என்று சொல்கிறார் கடைக்காரர். வேறெங்காவது சாப்பிட்டால் அதிகம் செலவாகும் என்று இங்கு வந்து சாப்பிட்டால் இவ்வளவு விலையா? திரும்ப திரும்ப எனக்கு தெரிந்த ஹிந்தியில் கேட்டாலும் அதையேதான் சொல்கிறார், என்ன பேசி எப்படி புரியவைக்க, எனக்கோ நேரமாகிறது, 150 ரூபாயில் நான் ஒன்றும் ஏழையாக போவதில்லை நீ ஒன்றும் பணக்காரன் ஆகப்போவதில்லை என்று கொடுத்திவிட்டு அருகில் இருந்த கடையில் டீ குடிக்கும் போது தான் கவனித்தேன், நான் சாப்பிட்ட கடையின் பின்னால் ஒரு தமிழ்காரரின் உணவகம் இருக்கிறது.

150 ரூபாய் போன வருத்தத்தில் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன். NDLS ரயில் நிலையத்தின் நடைமேடையில் சென்றுதான் மெட்ரோ ரயில் நிலையத்தை அடையமுடியும், அவசரத்தில் நடைமேடை டிக்கெட் வாங்கவில்லை. அங்கு நின்று சோதனை செய்து கொண்டிருந்த அதிகாரியை பார்த்த பின் தான் எனக்கு நடைமேடை டிக்கெட் பற்றிய ஞாபகம் வந்தது, "என்னடா இது சோதனை நம்மையே சுத்தி சுத்தி வருகிறது" என்று எண்ணிக்கொண்டு, அவரை கவனிக்காமல் சென்று விடலாம் என்று பார்த்தும் பார்க்காதது போல நழுவ முயன்றேன், நம்மை போல எத்தனை பேரை பார்த்திருப்பார், என்னை அப்படியே அமுக்கிவிட்டார்.

தத்தகா பித்தக்கா என்று தெரிந்த ஹிந்தியில் புரியவைக்க முயற்சித்தேன் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. அபராதம் என்றால் 500 ரூபாய் அல்லது அவரை மட்டும் கவனித்தால் பணம் சிறிது குறையும், பேரம் பேசி 300 ரூபாய்க்கு வந்து நின்றது. மூக்கால் அழுதுகொண்டே பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். மெட்ரோ ரயிலில் NDLS to Airport க்கு 100 ரூபாய்,  550 ரூபாய் 20 நிமிடத்திற்குள் காலியாகிவிட்டது. விமானத்தில் ஏறும் போது 150 ரூபாய்தான் என்னிடம் இருந்தது. குவாஹாத்தி வந்திறங்கி கல்லூரி வர மேலும் 120 ரூபாய் செலவு. இது இப்படி முடிய நல்ல விஷயமாக 20 ஆம் தேதி விசா என் கைக்கு வந்துவிட்டது.

கற்றது:
** விலை கேட்காமல் எங்கும் சாப்பிட கூடாது
** யாரும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கக்கூடாது.


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...