Sunday, 10 November 2019

நீண்ட இடைவெளிக்குப் பிறகு......



சரியாக 10 மாதங்கள் கழித்து பதிவிட துவங்கியதில் மிக்க மகிழ்ச்சி. கட்டிட பொறியியல் துறையின் உட்பிரிவான நீர்வள மேலாண்மை (Water Resources Management) பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து 8 வருடங்கள் வாழ்க்கையில் ஒரு இன்ச் முன்னேற்றம் கூட இல்லை.....எங்கே செல்லும் இந்த பாதை....என்ற நிலையிலேயே சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. சில சமயங்களில் நாம் என்னதான் உருண்டு பிரண்டு அழுது முயற்சித்தாலும் நமது சூழ்நிலையிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் வெளிவரவே முடியாது....ஒரே தீர்வு தொடர் முயற்சியும், பொறுமையும்தான்.

அந்த தருணங்களில் தான் படிப்பிற்கான நேரம் போக, சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள இணையத்தில் எழுத தொடங்கி அதன் மூலம் நிறைய வாசிக்கவும் துவங்கினேன். இடது புறத்தில் இருக்கும் "இவங்க என்ன சொல்றாங்க" பகுதியில் உள்ளவர்களை அப்படிதான் கண்டறிந்தேன். கடினமான காலங்களில் ஆறுதலாக இருந்த வலைதள பதிவுகள், பதிவர்கள், blogger தளம் மற்றும் எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


கடந்த ஆண்டு ஜுலை முதலே நல்ல அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது......பெண் பார்ப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், முனைவர் பட்டம், பகுதி நேரமாக டி தூள் விற்பனை(அஸ்ஸாமிலிருந்து), குழந்தையின் வருகை.....என எல்லாம் அடுத்தடுத்து முடிந்தது மாயம்மா சித்தர் அருளாசியினால். நண்பர்கள், பெற்றோர்கள், உடன்பிறப்புகள், மனைவி, கல்லூரி மற்றும் எனது மேற்பார்வையாளர் (Supervisor / Guide) ஆகியோர் மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள் எனது ஆய்வு படிப்பை முடிக்க.

போராட்ட காலங்களில் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம், அந்த கஷ்டமான காலங்களை திரும்பி பார்க்கும் போது அதெல்லாம் ஒன்றுமே இல்லை இதற்காகவா இப்படி வருந்தினோம் மன நிம்மதியை இழந்தோம் என்று கூட தோன்றும். இந்த மன நிலையை விளக்க கவிஞர் கண்ணதாசன் அவர்களை அழைக்கட்டுமா......  அட அட அட என்னமா எழுதிருக்காரு நம்ம கவிஞர்.
"வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

வாடி நிற்க கூடாது
கண்ணீர் வடிக்க கூடாது
பொறுமையை இழக்க கூடாது
நமது கடமையை மறக்க கூடாது.....அவ்வளவுதான்...... வாழ்க்கை நாம கேட்டதை கொடுத்து வாழ்த்திட்டு போகும்.

1.5 ஏக்கரில் 1,100 மரங்கள்....

வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், தெக்குப்பட்டு கிராமத்தில், 1.5 ஏக்கரில், அடர்ந்த வனத்தை உருவாக்கியுள்ள, ஞானசூரிய பகவான்: கோவை பல்கலைக் கழகத்தில், பி.எஸ்சி., விவசாயம் படித்து, தமிழக அரசில், வேளாண்மைத் துறை அதிகாரியாக பணியாற்றினேன். அந்தப் பணியை ராஜினாமா செய்து, சென்னை வானொலி நிலையத்தில், விவசாயிகளுக்கான, 'வீடும் வயலும்' நிகழ்ச்சியில், 'சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்' என்ற பெயரில் பேசி வந்தேன்.

மரங்கள் மீது கொண்ட காதலால், அவற்றை வளர்க்கத் துவங்கினேன். சொந்த கிராமத்தில், 1.41 ஏக்கர் நிலத்தில், மரங்களை நெருக்கமாக வளர்த்து, மரக்காடு உருவாக்கியுள்ளேன்; இங்கு, 1,100 மரங்கள் உள்ளன. அதன் நடுவே வீடு கட்டி, மனைவியுடன் வசிக்கிறேன். வீட்டின் மாடியிலிருந்து விழும் மழை நீரை, மூன்று தொட்டிகளில், 70 ஆயிரம் லிட்டர் சேகரித்து, மரங்களுக்கு பயன்படுத்துகிறேன். சின்ன இடத்தில் நெருக்கமாக வளர்க்கப்படும் மரங்கள், வேகமாக வளர்கின்றன. காட்டில் வளரும் மரங்களுக்கு இடையே, இடைவெளி கிடையாது; மரம், செடி, கொடி என அடர்ந்து வளரும். இந்த வகை காடுகளை, 'மியாவாக்கி' காடுகள் என்பர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, அக்கிராமியாவாக்கி என்ற தாவரவியலாளர் தான், இந்த அடர்ந்த வனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.

என் மரக்காட்டில், பாரிஜாதம், சிங்கப்பூர் செர்ரி, செம்மரம் போன்ற, 100 மரங்கள் உள்ளன. மரங்கள் நமக்கு தாய் போன்றவை. அவற்றில் நல்ல மரம், கெட்ட மரம் என எதுவும் இல்லை; எல்லா மரங்களுமே மண்ணுக்கு தேவை. நம் நாட்டில், 1947க்கு முன், 47 சதவீதமாக இருந்த வனம், 24 சதவீதமாக சுருங்கியுள்ளது. தமிழகத்தில், 17 சதவீதம் மட்டுமே வனங்கள் உள்ளன. நான் மட்டும் காடு வளர்த்தால் போதாது என்றெண்ணி, விரும்பும் மாணவர்களுக்கு, காடு வளர்ப்பு மற்றும் வேளாண்மை பயிற்சி அளிக்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் பலர், பயிற்சிக்கு வருகின்றனர். நவீன வேளாண்மை குறித்து, எளிமையாக கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், விவசாயத் தொழில்நுட்பத்தை, நாடு முழுவதும் பின்பற்றி வருகின்றனர்.

இயற்கை வளப் பாதுகாப்புப் பணிகளை, 'பூமி' என்ற அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறேன். மழை வளமும், நீர் வளமும், ஆரோக்கியமான காற்றின் வளமும் தான், மனிதர்களை வாழ வைக்கும். வெறும் சந்ததியினரால் மட்டும், வாழ வைத்து விட முடியாது. அதனால், மனிதர்களுடன் மரங்களையும் வளர்க்க வேண்டும். 'ஏசி'யையும், மின் விசிறியையும் பயன்படுத்துவது, கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிந்து கொள்ளும் கதை தான்!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...