Sunday, 10 November 2019

இயற்கை விவசாயத்தில் மனிதநேயம் உள்ளது!

பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஓவர்குடி விவசாயி, பரமசிவன்: எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், முழு நேரமாக விவசாயத்தை தான் மேற்கொள்கிறேன். எங்க குடும்பத்திற்கு சொந்தமாக, 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், பாரம்பரிய நெல் ரகங்களைத் தான் பயிரிடுகிறேன். இப்போது, 3 ஏக்கரில், மாப்பிள்ளைச் சம்பா; தலா, 1 ஏக்கரில், காட்டுயானம், கிச்சிலி சம்பா நெல் வகைகளை சாகுபடி செய்கிறேன். கிச்சிலி சம்பா, 135 - 140 நாட்கள்; மாப்பிள்ளை சம்பா, 160 - 165 நாட்கள்; காட்டுயானம், 180 - 185 நாட்களில் அறுவடைக்கு வரும்.

இது போன்ற பாரம்பரிய நெல் வகைகளில், இயல்பாகவே, களை, பூச்சி தாக்குதல் குறைவு; நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இந்த நெல் ரகங்கள், நல்ல உயரமான பயிராக வளரும். 50 - 60 நாட்களிலேயே, ஒன்றரை அடி உயரத்திற்கு பயிர் வந்து விடும்; நிழல் விழுவதால், களை ஏற்படாது. இயற்கை விவசாயத்திற்காக நிலத்தை பக்குவப்படுத்த, மாட்டு எரு, ஆட்டுக் கிடையில் கிடைக்கும் சாணம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே நிலத்தில் பயன்படுத்துவேன். படிப்படியாக கூடுதல் மகசூல் கிடைக்கிறது. நான் விளைவித்த பாரம்பரிய நெல்லை, அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக் கூட்டி, நேரடியாக விற்பனை செய்கிறேன். பலர் இங்கேயே வந்து, வாங்கிச் செல்கின்றனர்.

ஏக்கருக்கு, 21 மூட்டை நெல் கிடைத்தது. அதை காய வைத்து, சுத்தப்படுத்தியதில், 20 மூட்டை நெல் கிடைத்தது. அதில், 10 மூட்டையை, அவலாக மாற்றினேன். 300 கிலோ கிடைத்தது. 1 கிலோ, 100 ரூபாய் வீதம் விற்றதில், 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மேலும், 150 கிலோ தவிடு கிடைத்தது. அதை விற்றதில், 1,500 ரூபாய் வந்தது. ஒன்பது மூட்டை நெல்லை, மிஷினில் கொடுத்து, உமியை மட்டும் நீக்கி, அரிசியாக மாற்றியதில், 315 கிலோ அரிசி கிடைத்தது. கிலோ, 80 ரூபாய் வீதம், 25 ஆயிரத்து, 200 ரூபாய் கிடைத்தது. மீதமுள்ள, ஒரு மூட்டை நெல்லை காய வைத்து, விதையாக மாற்றி, 48 கிலோ விதையை, கிலோ, 60 ரூபாய்க்கு விற்றதில், 2,880 ரூபாய் வந்தது.  

இவ்வாறு, 1 ஏக்கரில், மொத்தமாக, 60 ஆயிரத்து, ௭80 ரூபாய் கிடைத்தது. செலவு போக, 32 ஆயிரத்து, 480 ரூபாய் லாபம் பார்த்தேன். இயற்கை விவசாயத்தை, தொழிலாக பார்க்கக் கூடாது. இதில், மனிதநேயம் உள்ளது. விஷமில்லாத உணவை உற்பத்தி செய்வதால், சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது. மேலும், லாபத்தையும் பார்க்கக் கூடாது. மண்ணை வளமாக்கி, எதிர் கால சந்ததியினருக்கு நல்ல, உயிருள்ள நிலத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அவசியம்!

தொடர்புக்கு: 99433 84204

--தினமலர் நாளிதழிலிருந்து
 

வட்ட வடிவ வீடு : அழகு... உறுதி... செலவு குறைவு...

தஞ்சை, மூலிகைப் பண்ணை அருகே ராஜாஜி நகரில், வட்ட வடிவில் வீடு கட்டியுள்ள பொறியாளர் செல்வபாண்டியன்: வீடு என்றாலே, செவ்வகம், சதுரம் வடிவில் தான் பெரும்பாலும் கட்டப்படுகின்றன. அந்த வடிவில் தான் இருக்க வேண்டுமா; வட்ட வடிவில் கட்டினால் என்ன என நினைத்தேன். சங்க இலக்கியமான, 'நெடுநல்வாடை'யில், வட்ட வடிவ கட்டடங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. பழங்கால மன்னர் அரண்மனைகள், கோட்டைகள், பழங்குடியின மக்கள் வீடுகள், வட்ட வடிவில் தான் உள்ளன. பிற வடிவ வீடுகளை விட, வட்ட வடிவிலான வீடுகளுக்கு உறுதித்தன்மை அதிகம்; வெயிலின் தாக்கமும் அதிகம் இருக்காது. வட்ட வடிவிலான வீடுகளில் முனைகளே கிடையாது. முடுக்கு இல்லை என்பதால், கட்டுமான பகுதிகள், முழு பயன்பாட்டில் இருக்கும்.


எலி வலை அமைப்பில் சுவர் அமைத்ததால், செங்கல், சிமென்ட், மணல், கூலிச் செலவு குறைவு. சுவரின் உள்ளே, கூடு போல இருப்பதால், வெயில், குளிர் தாக்கம் இருக்காது. நல்ல தரமான செங்கல் பயன்படுத்தியதால், வெளிப்பூச்சு இல்லை; வண்ணப் பூச்சும் கிடையாது. இதனால், செங்கற்கள் நன்றாக சுவாசிக்கின்றன. இயற்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த வீட்டில் மரமே பயன்படுத்தவில்லை. ஜன்னல்கள் முழுவதும் இரும்பால் தான் ஆனவை. வழக்கமாக, ஜன்னல்களின் பக்கவாட்டு பகுதியில், கதவுகள் இருக்கும்; அதனால் காற்று தடைபடும்.எனவே, எங்கள் வீட்டில், ஜன்னலின் நடுவே கதவுகள் அமைத்துள்ளோம். இதனால், காற்று தாராளமாக வரும்.


 படுக்கையறையில், கடப்பா கல்லில் கட்டில் அமைத்து உள்ளோம்.இதனால், வெயில் நேரத்தில், குளுகுளுவென இருக்கும்; மழைக் காலத்தில் கதகதப்பாக இருக்கும். ஒரு முறை இதற்கு செலவு செய்தால் போதும், காலம் காலமாக அப்படியே இருக்கும். வீட்டின் நடுவே முற்றம் அமைத்துள்ளோம். இதனால், வீடு முழுக்க நல்ல வெளிச்சமாக இருக்கும். முற்றம் வழியாக வெப்பக்காற்று, மேலே எழும்பி சென்று விடும்; இயற்கையான குளிர்ந்த காற்று, வீட்டிற்குள் வரும். 'எலிவேஷனுக்கு' இந்த வீட்டில் இல்லை; அதற்கான செலவும் கிடையாது. வீட்டை கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்போதும் புத்தம் புதிது போல உள்ளது. கீழ்தளத்தில், 640; மேல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் நூலகமும் இருக்கு. மேல் தளத்தின் மொத்தக் கட்டுமானம் 480 சதுர அடி.. இந்த வீட்டை கட்ட, 12 லட்சம் ரூபாய் தான் செலவானது!


இந்த வீடு இவ்வளவு சிறப்பாக உருவானதற்கு, என் நண்பர் பொறியாளர் ராஜேந்திரனுக்குத்தான் நன்றி சொல்லணும். சிக்கன முறை கட்டுமானத்தில் இவர் தமிழ்நாடு அளவில் புகழ்பெற்றவர். ``அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டடக்கலை எழில் கலைஞரான லாரி பெக்கரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீட்டை உருவாக்கியிருக்கோம். குறைவான செலவுல அழகான, உறுதியான வீடுகளை உருவாக்கணும்கிறதுதான் லாரி பெக்கர் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தத்துவம்’’ என சொல்கிறார் ராஜேந்திரன்.
கீழ்த்தளத்தில் வரவேற்புக் கூடம், சமையலறை, உணவருந்தும் கூடம், படுக்கையறை அமைந்துள்ளன. வரவேற்புக் கூடத்திலேயே ஹை சீலிங் முறையில் மாடிப்படி அமைக்கப்பட்டுள்ளது. எலிவேஷனுக்குன்னு தனியாக எந்தச் செலவும் செய்யலை. இயல்பாகவே, வெளிப்புறத் தோற்றம் வசீகரமாக உருவாகியிருக்கு. மின்சாரம் இல்லைன்னாலும் இந்த வீட்டின் காலிங் பெல் ஒலிக்கும்.

--தினமலர் மற்றும் விகடன் இதழிலிருந்து

தொடர்புடையவை

1) வட்ட வடிவங்களுடன் கூடிய வீடு.
2) அழகு... உறுதி... செலவு குறைவு... இது அதிசய வீடு!

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...