Friday 29 September 2017

"ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா?" - ஆவாரையின் நன்மைகள்

ஆவாரையின் நன்மைகளை கூறும், சித்த மருத்துவர், கே.பி.அர்ஜுனன்: 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா!' என்ற பழமொழி உண்டு. ஆவாரம் பூவை புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி பொடியாக்கிய துாளை, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், சகல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதனால் தான், இந்த பழமொழி வந்தது. குத்து செடி இனத்தை சேர்ந்த ஆவாரை, 10 அடி உயரம் வரை வளரும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்கு பயன்படக் கூடியவை. ஆனாலும், பூவுக்கு மருத்துவ குணம் அதிகம். ஆவாரம்பூவில் சட்னி, துவையல், சாம்பார், தோசை என, பல உணவு வகைகளை செய்து சாப்பிடலாம்.



சோர்வு நீங்க:
மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டு, கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி, மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில், கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரை, சூடான பாலில் கலந்து, 48 நாட்கள் குடித்து வந்தால், நோய் அனைத்தும் நீங்கி, புதுத்தெம்பு கிடைக்கும்.

சர்க்கரை பிரச்சனைக்கு:
சர்க்கரை நோய் பாதித்தவர்கள், ஆவாரம்பூ பொடியை சூடான பாலில் கலந்து, காலை, மாலை என தொடர்ந்து அருந்தி வந்தால், சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் தவிர, மற்றவர்கள், ஆவாரம்பூ பொடியுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு:
ஆவாரம்பூ அல்லது அதன் பொடியை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அதனுடன் பால் சேர்த்து குடித்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ இதழ்களை, கறிக்கூட்டாக செய்தும் சாப்பிடலாம். இதனால் உடல் சூடு, உடல் நாற்றம், களைப்பு, வறட்சி, மேகவெட்டை போன்றவை சரியாகும்.

மிருதுவான சருமத்திற்கு:
பாசிபருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக்கிழங்கு மற்றும் கஸ்துாரி மஞ்சளுடன், சம அளவு ஆவாரம்பூ, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைக்க வேண்டும். சோப்புக்கு பதில் இந்த மூலிகை கலவையை தேய்த்து குளிப்பதால், சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன், சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளி மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

தசை பிசகுதல், மூட்டு நழுவுதல்:
பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்து, தயிர், நாட்டு கோழி முட்டையின் வெள்ளைக் கரு, பொடியாக்கிய கறுப்பு உளுந்து, இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து, தசை பிசகுதல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்கு பற்று போட்டு வந்தால், பலன் கிடைக்கும்; விலகிய மூட்டை சரி செய்து, அதன் மீது பற்று போட வேண்டும்.

பற்கள் பிரச்சனைக்கு:
ஆவாரம் பட்டையை நன்றாக காய வைத்து இடித்து பொடியாக்கி, சலித்து கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவு பொடியை, நான்கு டம்ளர் தண்ணீருடன் கலந்து, ஒரு டம்ளராக வற்றுமாறு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி, இளஞ்சூட்டுடன் வாய் கொப்பளித்து வந்தால், பல் இறுகி கெட்டிப்படும். மேலும், ஆடிக் கொண்டிருந்த பற்களில் வலி இருந்தால் சரியாகிவிடும். பல் ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால், இந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பாதிப்புகள் நீங்குவதுடன், பற்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

--தினமலர் நாளிதழிலிருந்து

ஆவாரம் பூ தரும் அற்புத நன்மைகள்
ஆவாரம் பூ மருத்துவ குணம்

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...