Thursday 9 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 1

செய்தி: February-10 2013 அம்மாவாசை, 3 ஆறுகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (முன்னொரு காலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது)) நீராட புனிதமான நாள், மஹாகும்பமேளாவின் மிகவும் முக்கியமான நாள, மக்கள் மிக அதிகமாக வருவார்கள் (8-10 இலட்சம் பேர்) என்று எதிர்பார்க்கப்பட்ட நாளும் அதுவே. கும்பமேளா ஒரு மாதம் நடக்கும், அதாவது ஒரு பௌர்ணமி முதல் அடுத்த பௌர்ணமி வரை. அதில் குறிப்பாக 7-10 நாட்கள் மிக முக்கியமான நாட்கள், அந்த நாட்களில் ஆற்றில் குளிப்பது விஷேசமாக கருதப்படும், நம் பாவங்கள் கழுவப்பட்டு உள்ளும் புறமும் தூய்மையாகும், முக்தி வாய்க்கப்பெறும் என்பது நம்பிக்கை. 

மஹாகும்பமேளா என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை வருவது. கும்பமேளா என்பது 3 வருடங்களுக்கு ஒருமுறை அலஹாபாத், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் இதில் ஏதாவது ஒரு ஊரில் உள்ள ஆற்றில் நடக்கும். உலகிலேயே சமயம் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடும் ஒரே நிகழ்வு மஹாகும்பமேளாதான். இந்தியாவில் உள்ள துறவிகள், சாதுக்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என்று அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்வு இது.


(http://www.dogonews.com/2013/2/1/indias-maha-kumbh-mela-aka-the-largest-single-gathering-of-humanity-has-begun 
http://blogs.hungrybags.com/2013/01/11/maha-kumbh-mela-2013-bathing-dates-and-safety-tips-for-allahabad-tour/)

2 வித மனிதர்கள்: வேலையோ, எதிர்காலமோ அதை அணுகும் விதத்தை கொண்டு, என்னை பொருத்தவரையில் மனிதர்களை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். திட்டமிட்டு செய்பவர்கள், போகிற போக்கில் செய்பவர்கள். நான் இரண்டாம் வகை திட்டமிடாமல் செயல்படுகிறவன். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று தோன்றினால் அதை உடனடியாக நடைமுறை படுத்திவிடுவது எனது இயல்பாக அமைந்துவிட்டது. ஒரு முறை கும்பமேளாவை பற்றி செய்திகளில் படித்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு எண்ணம், ஒரு விசை என்னுள்ளிருந்து  எழுந்து என்னை கும்பமேளாவிற்கு செல்ல தூண்டியது; நானும் அதை செயல்படுத்திவிட்டேன் என்றால் இதில் மிகைபடுத்தல் இல்லை. 

முன்பதிவு: சரி போகலாம் என்று முடிவாகிவிட்டது, இரயில் முன்பதிவு 9ஆம் தேதிக்கு செய்தேன். ஆனால் திரும்பி வருவதற்கு ticket இல்லை RLWL தான் கிடைத்தது. General waiting list என்றால் பயணச்சீட்டு  உறுதி ஆகிவிடும், ஆனால் Remote Location Waiting List (RLWL) என்றால் உறுதியாகும் வாய்ப்பு மிக மிக குறைவு. அதனை பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும், பெற்றோர்கள் எனக்கு தினமும் phone செய்து பேசுவார்கள் எனவே அவர்களுக்கு தெரியாமல் போக வேண்டும் என்றும் முடிவெடுத்தேன். February-9, 10, 11 ஆகிய 3 நாட்களில் சென்று வரலாம் என்று யோசனை, ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க சிறிது பயம் வந்துவிட்டது. ஏற்கனவே கூட்டம் என்றால் எனக்கு அலர்ஜி, இந்த லட்சணத்தில் 10 இலட்சம் பேர் வந்தால் அதில் எவ்வாறு போய் வருவது, வீட்டிற்கு சொல்லாமல் வேறு போகிறோம் ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது? என்ற யோசனையும் வந்து செல்லவே, திடீரென்று மாற்று யோசனை வந்தது. அதன்படி 8 தேதி கிளம்பலாம் என்று குவஹாத்தியிலிருந்து-அலஹாபாத் வரை செல்ல Tatkal ticket எடுத்து கிளம்ப தயாரானேன். 

பயணம்: Feb-8 2013 ரயில் கிளம்பும் நேரத்திற்கு 45 நிமிடம் முன்பே  நிலையத்தை அடையும்படி கிளம்பிவிட்டேன், ஆனால் போக்குவரத்து, மினி பஸ் இவைகளால் கடைசி நேர பரபரப்புக்கு பின் 5 நிமிடம் முன்னதாகத்தான் நிலையத்தை அடைந்தேன். சரியாக காலை 10.05 மணிக்கு North-east express காமாக்யா நிலையத்திற்கு வந்தது, ஏறினேன் பயணம் தொடர்ந்தது. நான் எப்பொழுதும் Lower berth தான் பதிவு செய்வேன் இந்த முறை Upper berth தான் கிடைத்தது, என்னுடைய seat இருந்த இடத்தில் யாரும் இல்லை, என்னிடம் அதிகம் சுமைகளும் இல்லை அதனால் எந்த பயமும் இல்லாமல் இங்கும் அங்கும் சென்று வரலாம். 2 set pant, shirt, 1 sweater, 1 போர்வை , mobile and charger, paste & brush அவ்வளவே என்னுடைய சாமான்கள். 8ஆம் தேதி புறப்பட்டு 9ஆம் தேதி காலை முகல்சராய் நிலையத்தில் இறங்கி காசி சென்று விஸ்வநாதரை தரிசித்து விட்டு அங்கிருந்து அலஹாபாத் சென்று கங்கையில் குளித்துவிட்டு அன்றிரவு எங்காவது தங்கியிருந்துவிட்டு 10 ஆம் தேதி புறப்பட்டு மீண்டும் குவஹாத்தி வந்துவிடலாம் என்பது என் திட்டம். திட்டமில்லாமல் திடீரென்று கிளம்பும் நான் போட்ட சிறிய திட்டத்திலும் திருப்பங்கள் காத்திருந்தன...........பார்ப்போம்
 


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...